135. அபிமனிறந்ததுகேட்ட மாற்றலரின்செய்கை. எட்டானைத்தம்பமுடன் சயத்தம்பநாட்டியபேரிறைவன் மைந்தன், பட்டானென்பதுகேட்டுத்திருகினார் முகுகிட்டுப்பறந்தவீர, ரொட்டாமற் செயிரமரிலுயிரிழந்த தன்புதல்வற்குருஞ் சோகம் விட்டான்வெஞ்சமரமினி வென்றோமென்றுட்கொண்டான் வேந்தர்வேந்தன். |
(இ-ள்.) எட்டு ஆனை தம்பமுடன் - எட்டுத்திசைகளிலும் திக்கஜங்களைக் கட்டிநிற்கிற தூண்களுடனே, சயத்தம்பம் நாட்டிய-(தனது) வெற்றிக்கொடிக் கம்பத்தைநிலைநிறுத்திய, பேர் இறைவன்-சிறந்த அரசனான அருச்சுனனுக்கு, மைந்தன் -மகனான அபிமன், பட்டான்-இறந்தான், என்பது-என்கிறசெய்தியை, கேட்டு-கேள்விப்பட்டு,-முதுகு இட்டு பறந்த வீரர் திருகினார் -(முன்பு அபிமனெதிரிற்)புறங்கொடுத்துப் பறந்தோடியவீரர்கள் (மகிழ்ந்து தைரியத்தோடு) திரும்பினார்கள்;வேந்தர் வேந்தன் - ராஜராஜனான துரியோதனன், செயிர் அமரில்-கோபத்தோடுசெய்யும் போரில், ஒட்டாமல்-நிலைநிற்காமல், உயிர் இழந்து-இறந்த, தன்புதல்வற்கு-தனக்குமகனான இலக்கணன்பொருட்டாக, உருகும் - மனங்கரைகிற, சோகம்-விசனத்தையும், விட்டான்-நீங்கி, இனி-, வெம்சமரம் வென்றோம் என்று உள்கொண்டான்-கொடிய போரில் (பாண்டவரைச்) சயித்திட்டோமென்று கருதினான்;(எ - று.) 'ஆனைத்தம்பமுடன்' என்பதற்கு - யானைகட்டுந்தறியோடு ஒப்ப என்று பொருள்கொள்ளுதலும் பொருந்தும்; "தனித்தனியே திசையானைத் தறிகளாகச் சயத்தம்பம் பலநாட்டி" என்ற கலிங்கத்துப்பரணியைக் காண்க. 'கேட்டு' என்றதனால் நெடுந்தூரம் ஓடியமை விளங்கும். வென்றோம் - காலவழுவமைதி. ஒட்டாமல் - வாழும் ஊழ்வினை இல்லாமலெனினுமாம். பி-ம்: போரிறைவன். 136.- துரியோதனன் முதலிய நால்வர்தவிர யாவரும் அபிமனிறந்தமைக்கு இரங்குதல். ஓரிரண்டுவயவர் முனைந்துடன்பொருதலுலகியற்கை யொரு வன்றன்மேற், போரிரண்டுபுறமும்வளைந்தொருகோடிமுடிவேந்தர்பொருது கொன்றார். தேரிரண்டுகிடையாதகுறையன்றோ களத்தவிந்தான் சிறுவனென்றென், றீரிரண்டுபெயரொழியமற்றுள்ளாரழுதிரங்கியென்பட்டாரே. |
(இ-ள்.) ஓர் இரண்டு வயவர் - இரண்டுவீரர்கள், முனைந்து-பிரயத்தனப்பட்டு, உடன் பொருதல் - (தம்மில் ஒருவரோடொருவர்) போர்செய்தல், உலகு இயற்கை- உலகத்துஇயல்பாம்: (அங்ஙனமிருக்க), ஒருவன்தன்மேல்-(அபிமன்) ஒருத்தன்மேலே, ஒரு கோடி முடி வேந்தர்-கிரீடந்தரித்த மிகப்பல அரசர்கள், இரண்டு புறம்உம் வளைந்து-இரண்டுபக்கத்திலும் எதிர்த்துச்சூழ்ந்து, போர் பொருது- போர்செய்து, கொன்றார்-(அவனைக்) கொன்றுவிட்டார்கள்; தேர் இரண்டு கிடையாத குறை அன்றுஓ - இரண்டாவது ஒரு தேர்கிடைக்காத குறைவினா லன்றோ, சிறுவன் - இளங்குமரனான அபிமன், களத்து அவிந்தான் - போர்க்களத்தில் இறந்தான், என்று |