பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்199

நாயகன் தலைவனான கண்ணன், பரிந்து, அன்புகொண்டு, இவை-இவ்வார்ததைகளை
உரைத்தலும் - சொன்னவளவிலே,-வரிந்த வெம் சிலைக்கு மண் மதித்த வீரன் -
கட்டமைந்த கொடிய வில்லின் தொழிலில் (மிகச்சிறந்தவனென்று) நிலவுலகத்தாரால்
நன்குமதிக்கப்பட்டவீரனான அருச்சுனன், 'இன்னம்உம்-இன்றைத்தினம் இது
வரையிலும், பாவைபங்கன்மேல் பூசை புரிந்திலன்- உமாதேவியைவலபாகத்திலுடைய
சிவபிரான்மேல் பூசனைசெய்தேனில்லை,' என்றனன் - என்றுகூறினான்; (எ - று.)

     இன்னும் யான் சிவபூசைசெய்யாமையால், உண்ணுதல் தகாதென்பதாம்:
இதனால், நித்தியபூசைசெய்தாலன்றி உண்ணுதல் செய்யாத அருச்சுனனது
சிவபக்திமிகுதி விளங்கும். இங்கே இளைத்து மெய்சோர்ந்து வீழ்ந்த அருச்சுனனைக்
கண்ணன் கைகளால் அணைத்து எடுத்ததற்கு ஏற்ப, 'சரிந்தவர் சரிவறத்
தாங்குநாயகன்' என்றார்: முதலடி -கருத்துடையடைகொளியணி. பிறவித்துயரத்தில்
வீழ்ந்திட்டாரைக்கரையேற்றுபவன் என்றதும் இதிற் பெறப்படும். சிலைக்கு-
உருபுமயக்கம். மண்-ஆகுபெயர். பி- ம்: மேன்மதிக்கும்.               (332)

195.- இதுவும் மேற்கவியும் -குளகம்: 'எம்மைப்பூசைபுரி:
இருவரும்ஒருவரேயென்பதைக் காண்பாய்' எனல்.

மருவருகானகமலரினாலெமைப்
பொருவருபூசனைபுரிதியையநீ
யிருவருமொருவரேயென்பதின்றுபோ
யருவரையவனடியடைந்துகாண்டியே.

     (இ-ள்.) 'ஐய-! நீ-, மரு வரு- பரிமளம் மிக்க, கான் அகம் மலரினால்-
காட்டினிடத்திலுள்ள பூக்களால், எமை-எம்மை பொருவு அரு பூசனை புரிதி-
ஒப்பில்லாத பூசைசெய்வாய்: (செய்தபின்பு), அரு வரை போய்-(செல்லுதற்கு) அரிய
கைலாசத்துக்குச் சென்று, அவன் அடி அடைந்து- அச்சிவபிரானது திருவடிகளைச்
சேர்ந்து, இருவர்உம் ஒருவர்ஏ என்பது-(அப்பரமசிவனும் யானும் ஆகிய)
இரண்டுமூர்த்தியும் ஒருமூர்த்தியே யென்பதை, இன்று- இன்றைக்கு, காண்டி-
பிரதியக்ஷமாகப் பார்ப்பாய்; (எ - று.)- "என்ற அரி யியம்பலும்" என எடுத்த
கவியோடு தொடரும்.

     இதனால், 'அரியும் அரனும் ஒன்று' என்ற அபேதசித்தாந்தம் விளக்கப்
பட்டது.
சிவபிரானுக்கு அந்தராத்மாவாக வுள்ளவனும் ஸ்ரீமந்நாரயணனே என்ற
தன்மை குறிப்பிக்கப்பட்ட தென உரைப்பர்: "சிவனா யயனானாய்", " முனியே
நான்முகனே முக்கண்ணப்பா", "அவாவறச்சூழ் அரியையயனையரனையலற்றி" என்ற
ஆழ்வார் அருளிச்செயலுங் காண்க. மருவரு கானகம்-பொருந்திய இக்காட்டில்.
(இப்பொழுது) எம்மைப் பூசைசெய் எனினுமாம். மருவு அரு எனப் பிரித்தால்,
பெறுதற்கரிய என்று பொருளாம். பி- ம்:  அரனடி.                   (333)

196.- அருச்சுனன் சிவனாக ஸ்ரீகிருஷ்ணனைப் பூசித்தல்.

என்றரியியம்பலுமிருமருங்கினு
நின்றநன்மலர்கொடுநிகரில்கேள்வியான்.