198.-ஸ்ரீக்ருஷ்ணன் கருடனைநினைக்க அவன் இவரிருவரையும் ஏந்திச் செல்லுதல். போயருநெறியிடைப்புள்ளின்வேந்தனைத் தூயவனினைத்தலுமவனுந்தோன்றினான் மாயனைத்தோளினும்வலாரிமைந்தனைச் சேயதன்கரத்தினுஞ்சேரவேந்தினான். |
(இ - ள்) (அதன்பின்பு), போய் - (அப்பால்) சென்று, அருநெறியிடை - (செல்லுதற்கு) அரிய வழிநடுவிலே, தூயவன்- பரிசுத்தகுணமுள்ள கண்ணன், புள்ளின் வேந்தனை - பறவைகளுக்கு அரசனான கருடனை, நினைத்தலும் - (திருவுள்ளத்திற்) கருதியமாத்திரத்தில், அவன்உம் - அந்தப்பக்ஷிராசனும், தோன்றினான் - (அங்கு) வந்து, மாயனை- கண்ணனை, தோளின்உம் - (தனது) தோள்களிலும், வலாரி மைந்தனை- இந்திரகுமாரனான அருச்சுனனை, சேய தன் கரத்தின்உம் - சிவந்த தனது கைகளிலும், சேர- ஒருசேர, ஏந்தினான் - வகித்துக்கொண்டான்; (எ-று.) - சேய - குறிப்பெயரெச்சம். பி-ம்; சேயெனக். (336) 199.- க்ருஷ்ணார்ச்சுனருடன் கருடன் கயிலையைக் குறுகுதல். நீலமுற்றியமலையிரண்டொடொன்றுபொற் சீலமுற்றியமலைசெல்வதென்னவே யாலமுற்றியகளத்தையன்வெள்ளியங் கோலமுற்றியமலைகுறுகினானரோ. |
(இ-ள்.) சீலம் முற்றிய - அழகு மிக்க, பொன் மலை ஒன்று - பொன்மயமானதொரு மலை, நீலம் முற்றிய - நீலநிறம் மிக்க, மலை இரண்டொடு - இரண்டுமலைகளைச் சுமந்துகொண்டு, செல்வது என்ன- பறந்துபோவது போல, (கருடாழ்வான் கிருஷ்ணார்ச்சுனரை எழுந்தருளப்பண்ணிக்கொண்டு), ஆலம் முற்றியகளத்து ஐயன்- விஷம்மிக்க ஸ்ரீகண்டத்தையுடைய தலைவனான சிவபிரானது, கோலம் முற்றிய - அலங்காரம் மிக்க, வெள்ளி - வெள்ளிமயமான, அம் - அழகிய,மலை - கைலாசபருவத்தை, குறுகினான் - சமீபித்தான். முன்னிரண்டடி - இல்பொருளுவமை. இரண்டுநீலமலைகள் - நீலநிறமுள்ள கண்ணனுக்கும் அருச்சுனனுக்கும், பொன்மலை - பொன்னிறமள்ள கருடனுக்கும் ஒப்பு எனக் காண்க. (337) 200.- இரண்டகவிகள்- கருடன் வேகத்தை விளக்கும். மாற்றினால்விளங்குபொன்வடிவன்வெஞ்சிறைக் காற்றினால்விசைபெறக்கழன்றுபோயின வாற்றினாலறம்புரியம்மையோடொரு கூற்றினான்வரைபடிகொண்டலேழுமே. |
(இ-ள்.) ஆற்றினால் - நல்லநெறியினால், அறம் புரி- தருமங்களைச்செய்த, அம்மையோடு - தலைவியான உமாதேவியோடு, ஒரு கூற்றினான் - ஒருபாகத்தையுடைய பரமசிவனது, வரை - கைலாச மலையிலே, படி - படிந்துள்ள, கொண்டல் ஏழ்உம் - ஏழு மேகங் |