பக்கம் எண் :

230பாரதம்துரோண பருவம்

ஏற்ப - தேவரீர்களுக்கே அமைந்துள்ளன, என்றான்- என்று ( கடோற்கசன்
துரியோதனனை நோக்கிக்) கூறினான்; (எ -று.)

     துரியோதனன், வாரணாவதநகரத்தில் வஞ்சனையாக அழகியதோ ரரக்கு
மாளிகையைஅமைப்பித்து அதில் பாண்டவரைவரையுங் குந்தியையும் வசிக்கச்செய்து,
புரோசனனென்னுந்துர்மந்திரியையுங் குற்றேவலார் ஆறுபேரையும்
கூடஇருக்கநியமித்து, ஒருநாளிரவிற் பாண்டவருந்தாயும் கண்துயில்கையில்
மற்றையோரைக் கொண்டு அம்மனையில் தீப்பற்றவைத்து இங்ஙனம்
பங்காளிகளைத்தொலைத்துவிடுவதாகத் துணிந்திருக்க, அவ்வஞ்சகத்தை
விதுரனேவிய ஒருசிற்பியால்அறிந்து அதனினின்று தந்திரமாகத் தப்பிச் செல்லும்
வழியையும் அவன்பா லுணர்ந்தவீமன், அத்துர்மந்திரி முதலியோர்
எரிபட்டழியும்படி தான் ஓர் இரவில் தீக்கொளுவிவிட்டுத் தாயையும்
உடன்பிறந்தாரையும் கைகளிலுந் தோள்களிலும் முதுகிலுமாகஎடுத்துக்கொண்ட
அவ்வீட்டில் இரகசியமாக அமைத்துவைத்திருந்ததொருதூணின்கீழுள்ள
சுரங்கவழியால் தப்பிச்சென்று இடிம்பவனம் முதலிய இடங்களிற்சென்று பிழைத்து
வாழ, துரியோதனாதியர் பாண்டவர்களே எரிபட்டழிந்ததாகக்கருதி
அகமகிழ்ந்தனரென்றது, கீழ் ஆதிபருவத்து வரலாறு. தீக்கொளுவத்
துணிந்ததையும் கொளுவியதாகக்கருதி மகிழ்ந்ததையுமே கொண்டு,
செழுந்தழல்வாழ்மனைக் கொளுவியதாகச் சொன்னது.

     பாண்டவர் வனவாசஞ்செய்கையில் ஒருகால், துரியோதனன் தன்
பெருமையைக் காட்டிப் பாண்டவர்க்குப் பொறாமையுண்டாக்கி அவரை
அழுங்கச்செய்யவேண்டு மென்று ஆடம்பரத்துடனே அருகிற்சென்றபோது,
இந்திரனேவலாற் சித்திரசேனென்னுங் கந்தருவராசன் வந்து துரியோதனனைக்
கயிற்றாற்கட்டி வானத்தில் தூக்கிக்கொண்டுபோக, அப்பொழுது கர்ணன்
முதலானோர்எதிர்த்துப் பொருது, தோற்று ஓட, பின்பு துரியோதனனது
பரிதாபமானநிலைமையைஅவனதுபரிவாரத்தாலறிந்த தருமபுத்திரனது
கட்டளையால் வீமன் அருச்சுனனோடுசென்று கந்தருவனைவென்று
துரியோதனனைமீட்டு மறுபடியும் அக்கந்தவருவனால்துரியோதனனுக்குத்
தீங்குநேராதபடி அவனை ஊர்வரையிலும் வழிவிடுவதாகத்துணை வர, தன்
ஊர்ப்புறத்தளவும் வந்த மாத்திரத்தில், துரியோதனன்,அந்நன்றியறிவு சிறிது
மில்லாமல், வீமனை நோக்கி 'என்எல்லையிற் கால்வையாதே'என்று
கடுமையாகச் சொல்லித் துரத்திவிட்டமையின்; செய்ந்நன்றிகோறல்
துரியோதனனுக்கு உரியதாயிற்று. பாண்டவர் துரியோதனனுக்குச் செய்த
உபகாரங்களும், அவன் அந்நன்றியைச் சிறிதும் பாராட்டாது அவர்களுக்குச்
செய்ததீமைகளும் மிகப்பல; நூல்முழுவதிலும் ஆங்காங்குக் காணலாம்.

     பாண்டவர் தன் ஆற்றலால் திக்குவிசயஞ்செய்து இராசசூயயாகம்
முடித்துச்சிறப்புற, அதனைக்கண்டு துரியோதனன் அழுக்காற்றில் அழுந்திச் சகுனி
முதலானாரோடு ஆலோசித்து வஞ்சனையாக அப்பாண்டவரை வரவழைத்து மாயச்
சூதால் அரசு கவர்ந்து கொண்டதுமன்றி, சபையில் திரௌபதியைத் துகிலுரிந்ததும்
அவர்களை வனவாசத்துக்கு அனுப்பியதும் பிரசித்தம்.