பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்251

வணக்கமாகச்சொல்லி வேண்டவே, துரோணன் கோபமாறி அவனுக்குச் செல்ல
விடையளித்தனனென்க. அமர் வல்லார்க்கும் நின்னுடன் அமர்செய்தால் இயலாது
எனச் சமத்காரப்பொருளொன்று 'அமரிழைத்தல் அமரருக்குமரிது' என்ற
சொற்போக்கில் தோன்றுதல் காண்க. சிறுவன் யான் - இடவழுவமைதி.      (414)

18.- பின்பு அருச்சுனன் பொருதுகொண்டு பாசவியூகஞ் சேர்தல்.

ஈசனால்வரங்கள்பெற்றவிந்திரன்றன்மதலைகாம்
போசனாதியெண்ணின்மன்னர்பொருதழிந்துவெருவியுட்
கூசநாலுபாலுநின்றநின்றசேனைகொன்றுபோய்ப்
பாசநாமவணியினின்றவீரரோடுபற்றினான்.

     (இ -ள்.) ஈசனால் வரங்கள் பெற்ற - சிவபிரானாற் பலவரங்கள்
அருளப்பெற்ற,இந்திரன்தன் மதலை - தேவேந்திரனுக்குக் குமாரனான
அருச்சனன், - காம்போசன்ஆதி - காம்போஜதேசத்தரசன் முதலான. எண் இல்
மன்னர் - கணக்கில்லாதஅரசர்கள், பொருது அழிந்து - (தன்னுடனே) போர்செய்து
வலிமைசிதைந்து,வெருவி - அஞ்சி, உள் கூச - மனம் திடுக்கிடும்படி, நாலுபால்உம்
நின்ற நின்றசேனை கொன்று போய் - நான்குபக்கங்களிலும் மிகுதியாக
நின்றுகொண்டிருந்தசேனைகளைக் கொன்றுகொண்டே சென்று,- பாசம் நாமம்
அணியில் நின்ற வீரரோடுபற்றினான் - பாசமென்னும்பெயருடைய அணி
வகுப்பிலுள்ள வீரர்களுடனேபோர்தொடர்ந்தான்; (எ -று,)

     இங்கே 'பாசநாமஅணி' என்றது- கீழ்ச்சொன்ன ஐவகைவியூகங்களுள்
ஒன்றான சூசீவியூகத்தை; "பாச மூசித்துளையொடு கயிறே" என்ற திவாகரத்தின்படி
ஊசித்துளையைக்குறிக்கிற 'பாசம்' என்ற சொல், இலக்கணையால், ஊசியைக்குறிக்க,
அது, ஊசியின்பெயரான சூசீஎன்பதை உணர்த்துமென்க; சூசீவியூகமாவது -
ஊசிபோல வடிவம் அமையச் சேனையை ஒரேவரிசையாய் ஒழுங்குபடநிறுத்துவது;
இதற்கு, எறும்புவரிசை உவமைகூறப்படும். இங்கே 'காம்போசன்' என்றவன்பெயர்,
ஜலசந்தனென்று முதனூலால் தெரிகின்றது. இவனும் கிருதவர்மாவும் துரியோதனனும்
கர்ணனும் சூசீவியூகத்திற் பிரதானமாக நின்றனரென்று அந்நூலிற் கூறப்பட்டுள்ளது.
                                                              (415)

19,20.- இவ்விரண்டு கவிகளும் - குளகம்: அருச்சுனன் கர்ணனோடு    
போர்செய்யக் கருதியதைக் கண்ணனிடம்கூறல்.

முன்னர்முன்னர்வந்துவந்துமுனைகடோறுமுந்துறு
மன்னர்தந்தம்வில்லும்வேலும்வாளும்வென்றிவாளியிற்
சின்னபின்னமாகவெய்துசெல்லுமத்தனஞ்சயன்
கன்னனின்றவுறுதிகண்டுகண்ணனோடுமுரைசெய்தான்.

விலங்கிநம்மையமர்திளைக்கவிடதன்விற்சுதக்கண
னலங்கல்வேலவந்திமன்னவன்புதல்வனாதியா
வலங்கொள்வாகைவீரர்சேனைவளையநின்றகன்னனைக்
கலங்குமாறுபொருதுபோகவேண்டுமென்றுகருதியே.