இப்பாட்டின் முன்னிரண்டடிகள் 'சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாஞ், சொல்லியவண்ணஞ் செயல்" என்றார்போலக் கொள்க. 'சேணாடுறும்' என்பதற்கு, 'சயத்திரதன்' என்ற எழுவாய் வருவிக்கப்பட்டது. (456) 60.- | குனிநாணுடைவரிவிற்படைவிசயற்கெதிர்குறுகித் தனிநானவனுயிர்கொள்ளுதறவிர்கிற்குதலல்லான் முனிநாயகவேறார்விரகில்லைத்திருமுன்னே யினிநாடியடும்போர்விரைவொடுகாணுதியென்றான். |
(இ-ள்.) முனி நாயக - முனிவர்கட்குத் தலைவனே! குனி - வளைக்கப்பட்டதும், நாண் உடை - நாணியை யுடையதுமாகிய, வரி வில் படை - கட்டமைந்த (காண்டீவ) வில்லாகிய ஆயுதத்தையுடைய, விசயற்கு எதிர் - அருச்சுனனுக்கு எதிரிலே, நான்-, தனி - தனியே, குறுகி - சமீபித்து (ப்போர் செய்து),அவன் உயிர் கொள்ளுதல் - அவனது உயிரைக் கவர்தல், (அல்லது), தவிர்கிற்குதல்-(அவனால்) இறந்தொழிதல், அல்லால் -என்னும் இவையே யல்லாமல், வேறு ஓர்விரகு இல்லை- (இப்பொழுது செய்யத்தக்கது) வேறொருபாய மில்லை; (ஆகையால்),திரு முன்னே -உனது எதிரிலே, இனி - இனிமேல், நாடி- (நான்) முன்சென்று, அடும்- பகையழிக்கத் தொடங்கிச் செய்யப்போகிற, போர் - போரை, விரைவொடு காணுதி- விரைவிற் பார்ப்பாய், என்றான்-; ( எ -று.) சிறந்தவில்வீரனான அருச்சுனனை எதிர்தடுத்துச் சைந்தவனைப் பாதுகாப்பவர்எவருமில்லை யாதலால், இனிநானே தனியே அவன்முன் சென்று ஒருகைபார்த்துவிடுகிறேனென்கிறான் துரியோதனன். இதனால், சேனைத் தலைவனாகிய நீ அரசனாகிய நானே சென்று பொரும்படி விட்டுப் பகையழித்தலில் உபேக்ஷைசெய் துள்ளா யென்று நிட்டூரமாகக் கூறியவாறாம். (457) 61-. இதுமுதல் ஐந்துகவிகள் - ஒருதொடர்: துரோணன் பலகூறிக் கவசமளித்ததைத் தெரிவிக்கும். முனியுந்தரணிபனோடுசின்மொழிநன்கினுரைக்குந் துனிகொண்டுளமழியாதொழிதுணிவுற்றனைமுதலே யினியஞ்சிளைத்தெண்ணிடுமெண்ணந்தகவன்றால் அனிகங்களழிந்தாலுநின்னாண்மைக்கழிவுண்டோ. |
(இ-ள்.) (இங்ஙனந்துரியோதனன்சொன்னவற்றைக் கேட்டு), முனிஉம்- துரோணாசாரியனும், தரணிபனோடு - (துரியோதன) ராசனுடனே, சில்மொழி - சிலவார்த்தைகளை, நன்கின் உரைக்கும் - நன்றாகச் சொல்வான்: - (நீ), முதலே - முன்னமே, துனி கொண்டு உளம் அழியாது- (பகைவர்க்கு) அச்சங்கொண்டு மனஞ்சோர்தலில்லாமல், ஒழி துணிவு உற்றனை - (அதற்கு) மாறான துணிவையடைந்தாய்; இனி - இப்பொழுது, அஞ்சி - (பகைக்குப்) பயந்து, இளைத்து- மெலிந்து. எண்ணிடும்- சிந்திக்கிற, எண்ணம் - சிந்தனை, தகவு அன்று -தகுதியுடையதன்று; ஆல் - ஆதலால், அனிகங்கள் |