னந்தம் - துக்க சம்பந்தமில்லாமல் நித்தியமாயும் வரம்பில்லாததாயு முள்ள சுகம். பெரு ஞானானந்தமாய என்றது - எல்லாவற்றையும் எப்பொழுதும் ஐயந்திரிபற அறியும் அறிவின்மிகுதியை இயல்பிலுடையனாயும், எல்லாவின்பங்களினும் மேம்பட்டநிரதிசயப் பேரின்பத்தை எப்பொழுதும் உடையனாயு முள்ள வென்றபடி. இப்படிகர்மவசமான பிரபஞ்சரூபமாகத் தோன்றுதல் நிலைத்தல் அழிதல்களை அடைந்தாலும், இவை யாவும் பகவானது இச்சைமாத்திரத்தால் நிகழ்தலால் அப்பெருமானுக்குக் கர்மசம்பந்தம் நிகழாமைபற்றி, ஞானானந்தங்களுக்குக் குறைவில்லை யென்பார், இவ்வாறுகூறினார். பி - ம்: மீளவுஞ் சிதைத்துச். இதுமுதல் பதினெட்டுக்கவிகள் - பெரும்பாலும் முதற்சீரும் நான்காஞ்சீரும் விளச்சீர்களும், மற்றைநான்கும் மாச்சீர்களுமாகி அறுசீராசிரிய விருத்தங்கள் : இவற்றில் மூன்று ஆறாஞ் சீர்கள் தேமாச்சீர்களாகவே நிற்கும். (1) 2.-கவிக்கூற்று : இன்னது கூறுவோமென்றல். பகிரதிமைந்தன்சேனாபதியெனப்பத்துநாளு மிகல்புரியியற்கையெல்லாமியம்பினமினிமேலந்தத் துகளறுகேள்விவேள்வித்துரோணவாசிரியன்செய்த புகலருமைந்துநாளைப்பூசலும்புகலலுற்றாம். |
(இ - ள்.) பகிரதி மைந்தன்-கங்கையின்புத்திரனான பீஷ்மன், சேனாபதி என - சேனைத்தலைவனாக (இருந்து), பத்து நாள்உம்- (சென்ற) பத்துத்தினங்களிலும், இகல் புரி-போர்செய்த, இயற்கை எல்லாம் - தன்மைகளெல்லாவற்றையும், இயம்பினம் - (கீழ் வீட்டுமபருவத்தில்) கூறிமுடித்தோம் ; இனிமேல்-, துகள் அறு - குற்றமில்லாத, கேள்வி - நூற்கேள்விகளையும், வேள்வி - யாகங்களையுமுடைய, அந்த துரோண ஆசிரியன் - அந்தத் துரோணாசாரியன், செய்த-, புகல் அரு - சொல்லுதற்கு அருமையான, ஐந்து நாளை பூசல்உம் -ஐந்துநாளைப்போரையும், புகலல் உற்றாம் - (இப்பருவத்தில்) கூறத்தொடங்கினோம் ; (எ - று.) பகிரதி - பாகீரதி யென்னும் வடமொழித்தத்திதாந்தநாமத்தின் குறுக்கல் ; பகீரதனாற் கொணரப்பட்ட தென்று காரணப் பொருள். பகீரதன்-சூரியகுலத்துப் பிரசித்தனான ஓரரசன். இவன், கபிலமுனிவனது சாபத்தாற் சாம்பலானவரும் சகரசக்கரவர்த்தி குமாரரும் தனதுபாட்டனுக்குச் சிற்றப்பன்மாருமாகிய அறுபதினாயிரவரை நற்கதிபெறுவித்தற்பொருட்டு அவர்களுடற்பொடியை நனைத்தற்காகத் தேவலோகத்திலிருந்து ஆகாசகங்காநதியை முன்பு கீழுலகத்துக்குக் கொணர்ந்தா னென வரலாறு காண்க. யாகஞ் செய்தல் செய்வித்தல் என்னும் இருதொழிற்கும் உரியவர் அந்தணரே யாதலால், 'வேள்வித்துரோணவாசிரியன்' என்றார். புகல் - புகலுதல்: முதனிலைத்தொழிற்பெயர் ; இனி, புகல் அரும் - (எளிதில்) பிரவேசிக்க வொண்ணாத எனப் பொருள்கொண்டால், புகல் - புகுஎன்னும் பகுதியின்மேற் பிறந்த தொழிற்பெயராம். வீடுமன் தலைமைபூண்டு நடத்தின பத்துநாட்போரினும் துரோ |