போர்ச்சல மில்லாப் புகர்மலை யோடு மேற்சல மெய்தி வெங்கன லானான். |
(இ-ள்.) தார் போர்மாலையையுடைய, சலசந்தன்-அந்தச் சலசந்தனானவன்,- சாத்தகி என்னும் கார் செலவு ஆய-சாத்தகியென்கிற மேகத்தினின்று வெளிப்பட்டுவந்தனவான, கணை மழையால் - பாணவர்ஷத்தால்,-போர் சலம் இல்லா புகர் மலையோடு-போரிற்கலங்குதலில்லாத முகச்செம்புள்ளிகளையுடைய மலைபோன்ற யானையுடனே, மேல் சலம் எய்தி - மிக்ககலக்கத்தையடைந்து, வெம்கனல் ஆனான்-வெவ்வியநெருப்புப் போன்றவனானான்; (எ - று.) சலசந்தனிடத்து நெருப்பின் தன்மையையும், அவன்யானையினிடத்து மலையின் தன்மையையும், சாத்தகியினிடத்து மேகத்தின் தன்மையையும், அவன் பிரயோகிக்கிற அம்புத்தொகுதியினிடத்து அம்மேகம் சொரிகிற மழையின் தன்மையையும் ஏற்றிக்கூறினார்; உருவகவணி, 'மேற்சலமெய்து வெங்கனலானான்' என்றபாடம் மேலே நீர்வந்துவிழப்பெற்ற கடுநெருப்புப்போலாயினானென இனிதுபொருள்படும். (500) வேறு. 104.-துரியோதனன் தம்பியர் நால்வரைச் சாத்தகி வெல்லுதல். நாட்ட மில்லா நரபதி மைந்த ரீட்ட மாக வீரிரு வோர்கள் கூட்டம் பெய்யக் கொடுமுனை வென்றான் வேட்டம் போன வெங்களி றொப்பான். |
(இ-ள்.) நாட்டம் இல்லா நரபதி மைந்தர்-கண்களில்லாத அரசனான திருதராஷ்டிரனது புத்திரர்கள், ஈர்இருவோர்கள்-நாலுபேர், ஈட்டம் ஆக- ஒருதிரளாக(வந்து), கூட்டு அம்பு எய்ய-தொகுதியாகப் பாணங்களைப் பிரயோகிக்க,-வேட்டம்போன வெம் களிறு ஒப்பான்-வேட்டையாடச் சென்ற கொடிய ஆண்யானையைப்போன்றவனான சாத்தகி, கொடு முனை வென்றான் - கொடிய (அவர்கள்) போரைச்சயித்தான்; (எ - று.) கூட்டு அம்பு எய் அ கொடு முனை என்று பிரித்து, தொகுதியான அம்புகளை யெய்கிற அந்தக் கொடியபோர்க்களத்து என்றுமாம்.பி-ம்:நாட்டமிலாத, ஈட்டமதாக.இதுவும், அடுத்தகவியும், 98 - ஆங்கவிபோன்ற கலிவிருத்தங்கள். (501) 105.-இங்ஙன்பொருதுசெல்லுஞ் சாத்தகியைத் துரோணன் பார்த்தல். யாரும் போரி லெளிவயர வீரஞ் சாருஞ் சாபந் தன்னொடு நேமித் தேருந் தானுஞ் சென்றிடு வோனைக் கூருஞ் சாபக் குருவெதிர் கண்டான். |
|