பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்311

பின்பெயர் - இங்கு, ஆயுதமென்றமாத்திரமாய் நின்றது; சிறப்புப் பெயர்,
பொதுப்பொருளின்மேலது.                                     (513)

117.-அவர்களில் விந்தனும் விந்தரனும் இறத்தல்.

விந்தன்விந்தரனிருவருமேலிடுமுனையிற்
றந்தம்வாசியும்தேர்விடுபாகருந்தாமு
மந்தரந்தனிற்றலைகள்போய்முகில்களையலைப்பச்
சிந்துசோரியம்பெருங்கடலலைத்திடச்சிதைந்தார்.

     (இ-ள்.) விந்தன் விந்தரன் இருவர்உம் - (அத்துரியோதனன் தம்பிமாருள்)
விந்தன் விந்தரன் என்ற இரண்டுபேரும்,- மேலிடு முனையில் - மிக்குச் செய்த
போரில்,-தம் தம் வாசிஉம் தேர் விடு பாகர்உம் தாம்உம் - தம்தம்முடைய
தேர்க்குதிரைகளும் தேர்செலுத்துஞ் சாரதிகளும் தேர்வீரர்களான தாமுமாக,-
தலைகள் அந்தரந்தனில் போய் முகில்களை அலைப்ப- தலைகள் (துணிபட்டு
மேலெழும்பிச் சிதறி) ஆகாயத்திற் சென்று மேகங்களைச் சிதறடிக்கவும், சிந்து
சோரிஅம் பெருங் கடல்அலைத்திட-(உடம்பினின்று) விழுகின்ற இரத்தம் அழகிய
பெரியகடலை(ச் சென்று) கலக்கவும், சிதைந்தார் - அழிந்தார்கள்; (எ - று.)

     விந்தன் விந்தரன் என்பவர்கள் செய்த போரில் வீமனால் தம்குதிரைகளும்
பாகரும் அழியத் தாமும் அழிந்தன ரென்பதாம். 'இருவரும், வாசியும் பாகருந்
தாமும் சிதைந்தார்' - மிகுதியினால் உயர்திணைமுடிபுகொண்ட திணைவழுவமைதி.
இவர்கள்கொடுமை தோன்ற, தலைவேறு உடல்வேறான பின்பும் வானத்திற் சென்று
மேகங்களை யலைத்தலையும் நெடுந்தூரஞ்சென்று கடலையலைத்தலையும்
கூறினரென்க. பி-ம்: சோரிபோய்.                                  (514)

118.- அவர்களில் குண்டலபோசி முதலிய மூவர் இறத்தல்.

போர்க்குமுந்துறுதேரினான்குண்டலபோசி
தீர்க்கலோசனன்றிண்டிறற்சித்திரசேனன்
மார்க்கநேர்படவிலங்கிமாமறலிநேர்வரினுந்
தோற்கலாதவர்மூவருந்தம்முயிர்தோற்றார்.

     (இ-ள்.) போர்க்கு முந்துறு தேரினான்-சண்டைக்குமுற்பட்டு வருகிற
தேரையுடையவனான, குண்டலபோசி - குண்டலபோசியென்பவனும்,
தீர்க்கலோசனன்- தீர்க்கலோசனனென்பவனும் திண் திறல்-மிக்கவலிமையையுடைய,
சித்திரசேனன்-சித்திரசேனனென்பவனும், (ஆகிய), மா மறலி நேர் வரின்உம்
தோற்கலாதவர்-சிறந்தயமன் எதிர்த்து முன்வந்தாலும் தோல்வியடையாதவர்களான,
மூவர்உம்-(துரியோதனன் தம்பிமார்) மூன்றுபேரும்,- மார்க்கம் நேர்பட விலங்கி-
(வீமன்செல்லும்)வழியிலே எதிராகத் தடுத்து, தம் உயிர் தோற்றார்-தமதுஉயிரை
யிழந்தார்கள்;(எ -று.)

     தீர்க்கலோசநன் - நீண்ட கண்களையுடையவன்; சித்திரஸேநன்-வியக்கத்தக்க
சேனையையுடையவன்: காரணப்பெயர்.                                (515)