இதுமுதல் பதின்மூறு கவிகள் கீழ்முப்பத்துநான்காங் கவிபோன்ற அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள். (527) 131.- கர்ணன் தோற்கவே துரியோதனன் தம்பியரிருவரை உதவிபுரிய ஏவுதல். சென்றுமீளவும்வீமனோடெதிர்ந்துவெஞ்சிலையமர்புரிந்தந்தக் குன்றுபோனெடுந்தேருநுண்டுகள்படக்குலைந்துவென்கொடுத் தோடக் கன்றிநாகவெங்கொடியவன் கண்டுதன்கண்ணிகரிளையோரை யொன்றிநீர்விரைந்துதவுமென்றிருவரையொருகணத்தினிலேவ. |
இதுவும், அடுத்த கவியும் - குளகம். (இ-ள்.) (கர்ணன்), மீளஉம் சென்று - மறுபடியும் போய், வீமனோடு எதிர்ந்து - வீமனுடன் எதிரிட்டு, வெம் சிலை அமர் புரிந்து - கொடிய விற்போரைச்செய்து, அந்த குன்று போல் நெடுந் தேர்உம் நுண் துகள்பட - மலைபோன்ற பெரிய அந்தத்தேரும் (முந்தியதேர்போலவே) சிறுபொடிகளாய் விட, குலைந்து - நிலைகுலைந்து, வென் கொடுத்து ஓட - புறங்கொடுத்துஓடிப்போக,-வெம் நாகம் கொடியவன் - பயங்கரமான பாம்புக்கொடியையுடையவனாகிய துரியோதனன், கண்டு - (அதனைப்) பார்த்து, கன்றி - கோபித்து, தன் கண் நிகர் இளையோரை இருவரை - தனதுகண்களைப்போன்ற அருமைத்தம்பிய ரிரண்டுபேரை, நீர் விரைந்து ஒன்றி உதவும் என்று - 'நீங்கள்வேகமாகச்சென்று சேர்ந்து (கர்ணனுக்குத்) துணை செய்வீர்கள்' என்றுசொல்லி, ஒரு கணத்தினில் ஏவ - ஒருக்ஷணப் பொழுதிலே செலுத்த,- (எ -று.)-"இருவரும் கடிதுஉற்று சிலைவாங்கி அமர்புரிந்து உடல் சிதைந்துவானிடைச் சென்றார்" என வருங் கவியோடு முடியும். (528) 132.- அவ்விருவரும் வீமனாற் கொல்லப்படுதல் கன்னனைக்கடிதுற்றிருவருமதுகயிடவரெனத்தக்கோர் மன்னருக்கரியனையவீமனுக்கெதிர்வரிநிலையுறவாங்கி யந்நிலத்தினிலவனுடனெடும்பொழுதமர்புரிந்தவன்கையிற் செந்நிறக்கொடும்பகழியாற்றம்முடல்சிதைந்துவானிடைச்சென்றார். |
(இ-ள்.) மது கயிடவர் என தக்கோர்-மது கைடபன் என்ற இரண்டு அசுரர்க ளென்று (ஒப்புமையாற்) சொல்லத்தக்கவர்களான, இருவர்உம்-(கொடிய வலிய அத்துரியோதனன் தம்பியர்) இரண்டுபேரும்,-கன்னனை கடிது உற்று - கர்ணனை விரைவாக அடுத்து,-மன்னருக்கு அரி அனைய வீமனுக்கு எதிர் - அரசர்கட்குச் சிங்கம்போன்ற வீமசேனனுக்கு எதிரிலே, வரி சிலை உறவாங்கி - கட்டமைந்த வில்லை நன்றாக வளைத்து, அ நிலத்தினில்- அவ்விடத்திலே, அவனுடன் - அவ்வீமனுடன், நெடும்பொழுது அமர்புரிந்து-வெகுநேரம் போர்செய்து, அவன் கையின் செம் நிறம் கொடும் பகழியால் - அவன் கையினாலேவப்பட்ட சிவந்தநிறமுடைய கொடிய அம்புகளினால், தம் உடல் சிதைந்து - தங்களுடைய உடம்பு அழிபட்டு, வானிடை சென்றார் - வீரசுவர்க்கத்துக்குப் போனார்கள்; (எ -று.) |