பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்353

190.-கர்ணனை அருச்சுனன் மீளவும் வென்று துரத்துதல்.

வாளமாகவில்வணக்கியும்பர்பதிமைந்தன்வாளிரவிமைந்தனைக்
கோளமானகுடையிரதம்வாசிசிலைகொடிமுருக்கியமர்கொள்ளவே
மீளமீளவுமழிந்தழிந்தவனொர் வேலினாலெறியவேலையுந்
தூளமாகவடிவாளியாலெதிர்துணித்துவன்பொடுதுரக்கவே.

இதுவும், அடுத்த கவியும் - குளகம்.

     (இ-ள்.) வாளம் ஆக வில் வணக்கி-வட்டவடிவமாக வில்லை வளைத்து,
உம்பர் பதி மைந்தன் - தேவராசனான இந்திரனது மகனாகிய அருச்சுனன், வாள்
இரவி மைந்தனை - ஒளியுள்ள சூரியனது மகனான கர்ணனை, கோளம் ஆன
குடை இரதம் வாசிசிலை கொடி முருக்கி அமர் கொள்ள - வட்டவடிவமான
குடையும் தேரும் குதிரைகளும் வில்லும் கொடியும் என்பவற்றை அழித்துப்
போரில்வெற்றிகொள்ள,-அவன்- அக்கர்ணன்,  மீள மீளஉம் அழிந்து அழிந்து -
பலமுறையுந் தோற்று, (பின்பு), ஒர் வேலினால் எறிய - ஒரு வேலாயுதத்தினால்
வீசிமோத,- (அருச்சுனன்), வேலைஉம் - அவ்வேற்படையையும், தூளம் ஆக -
பொடியாம்படி, வடி வாளியால் - கூரிய அம்புகளினால், எதிர் துணித்து-எதிரிலே
துண்டித்து, வன்பொடு துரக்க-வலிமையோடு அக்(கர்ணனைத்) துரத்த,-(எ-று.)-
"மத்திரத்தலைவன்மனம் முரிந்து ஓடினான்" எனவருங்கவியோடு
தொடர்ந்துமுடியும், தூளம், அம் - சாரியை.                           (587)

191.-சல்லியனைச் சதானிகனும், அசுவத்தாமனைக்
கடோற்கசனும் வேறல்.

முன்சதாதிமுருக்கமேருகிரிமுடிமுரிந்தெனமுரண்கொள்போர்
வன்சதானிகன்வளைத்தவிற்கணையின்மத்திரத்தலைவன்மனமுரிந்
தென்செய்தான்முடிவிலோடினான்விறலிடிம்பிமைந்தன்முனி
                                   மைந்தன்மேன்
மின்செய்தாரையயிலேவினாவன்விரைந்துதேரின்மிசைவீழவே.

     (இ-ள்.) முன்-முன்னொரு காலத்தில், சதாகதி - வாயு தேவன், முருக்க -
விசையாகத் தாக்கியதனால், மேரு கிரி-மகாமேருமலை, முடி முரிந்து என-சிகரம்
ஒடிபட்டாற்போல, முரண் கொள்போர் வல் சதானிகன் வளைத்தவில்கணையின் -
மாறுபாடு கொண்ட போரில் வீசிய சதாநீகன் வணக்கிய வில்லினாலெய்த அம்பு
படுதலால், மத்திரம் தலைவன்-மத்திரநாட்டரசனான சல்லியன், மனம் முரிந்து-
இதயம்சிதைந்து, முடிவில்-இறுதியில், என செய்தான்-யாதுசெய்தான்? (எனில்),
ஓடினான்-புறங்கொடுத்து ஓடிப்போய்விட்டான்; விறல் இடிம்பி மைந்தன்-
வலிமையையுடைய இடிம்பியின் புத்திரனான கடோற்கசன், முனி மைந்தன்மேல்-
துரோணகுமாரானான அசுவத்தாமன்மேல், மின் செய் தாரை அயில் -
மின்னலையொத்து விளங்குகிற கூர்நுனியையுடைய வேலாயுதத்தை, அவன்
விரைந்துதேரின் மிசை வீழ - அவன் விரைவிலே தேரின் மேல் மூர்ச்சித்து
விழும்படி,ஏவினான்-பிரயோகித்தான்;  (எ - று.) எதற்குஞ்சலியாத சல்லியன்
மனம்முரிந்ததற்கு, அசலமாகிய மேரு முடிமுரிந்தது உவமம். செய்-உவமவுருபு.
                                                          (588)