பிரான் தன்மார்பில் ஏற்றுக்கொண்டன னென்பதாம். அயர்வு - மனக்கவற்சி யென்றபொருளதா தலை, "உலகுடன் பெறினுங் கொள்ளலரயர்விலர்" என்ற புறநானூற்றிலுங் காண்க. சக்ரதரன், உக்ரம் - வடசொற்கள் திரியாது நின்றன: திரித்துப் பாடமோதினால், சந்தவின்பம் கெடும். பி-ம்: அளவில் (108) 64.- பகதத்தன்வேல் ஸ்ரீகிருஷ்ணன்மார்பில் மாலையாய்விளங்கத் தேவர்கள்புகழ்தல். பருமித்தகளிறுவிடுபகதத்தனெறியுமுதுபகைசெற்றுவரு கொடியவேன், மருமத்தினிடைமுழுகுபொழுதத்திலதுபுதியமணிவற்க மிகுதொடையலாய், நிருமித்தபடிதனது புயவெற்பின்மிசையொளிரநிகரற்ற கருணை வடிவைக்கருமத்தின்முதலையிமையவர்சித்தமொடுதொழுதுகரையற்ற புகழுரைசெய்தார். |
(இ -ள்.) பருமித்த- பருமையுடைய, களிறு - யானையை, விடு - செலுத்துகிற,பகதத்தன் -, எறியும்- வீசிய, முது பகை செற்று வருகொடிய வேல் - பழமையானபகைவர்களை அழித்துவருகிற கொடுமையுடைய அந்தவேலாயுதம், மருமத்தினிடை முழுகுபொழுதத்தில்- (கண்ணபிரானது) மார்பினிடத்திலே அழுந்தியபொழுதில், அது-, நிருமித்தபடி- (அப்பெருமான்) நியமித்தபடி, புதிய மணிவற்கம் மிகு தொடையல் ஆய் - புதுமையான இரத்தினங்கள் மிக்கதொரு ஆரவடிவமாய், தனது புயம் வெற்பின் மிசைஒளிர - அவ்வெம்பெருமானது மலைகள் போன்ற தோள்களின்மேல் விளங்க, (அவ்வற்புதத்தைக் கண்டு), இமையவர்- தேவர்கள், நிகர் அற்ற கருணை வடிவை - ஒப்பில்லாத திருவருளின் மூர்த்தியானவனும், கருமத்தின் முதலை- (அவரவர்செய்த) வினைக்களுக்கெல்லாம் காரணமானவனும் ஆகிய கண்ணனை, சித்தமொடு - மனக்கருத்துடனே, தொழுது- வணங்கி. கரை அற்ற புகழ் - அளவில்லாத (அவனது) கீர்த்திகளை, உரைசெய்தார் -எடுத்துக்கூறித் துதித்தார்கள்; திருமால் தந்த வேலாதலால், அது அப்பெருமானது திருவவதாரமான கண்ணபிரானை ஒன்றும் ஊறு செய்யமாட்டாது அவனது சங்கல்பத்தின்படி ஓர் ரத்தினஹாரவடிவமாக அவன்மார்பில் விளங்கிற்றுஎன்க. இங்ஙனம் அன்பனான அருச்சுனன்பக்கல்வரம்பு கடந்து கருணைசெய்ததுபற்றி, 'கருணை வடிவு' என்றார். பருமித்த - கல்லணையையுடைய எனினுமாம். இதுவரையிலும் எப்போரிலும் அவ்வேல் எறியப்பட்டாரைக் கொல்லாது தவறியதில்லையென்ற தன்மையை, இப்பாட்டில் 'முதுபகைசெற்றுவரு கொடியவேல்' என்றதனாலும், கீழ்ப்பாட்டில் ' தழலுக்ரமுடையதொருவேல் என்றதனாலும் விளக்கினார். திருமால் சகல சேதநாசேதநங்களின் உள்ளும்புறம்பும் இருந்துகொண்டு அவற்றைக்கொண்டு தொழில்செய்தலால், 'கருமத்தின்முதல்' என்றார்: இனி, ஊழ்வினைக்கும் முதற் காரணமானவனென்றும்; கேள்வி தவம் முதலிய சற்கருமங்களுக்கெல்லாம் தலைவனென்றும்; கருமத்திற்கேற்ற பயனையளிப்பவனென்றும் கூறலாம். (109) |