பக்கம் எண் :

பன்னிரண்டாம் போர்ச்சருக்கம்91

     மகிபாலரும் பகதத்தனும்...மைந்தரும் களத்தூடுவிழவும், தனுவேதியும் ஒடவும்
வென்றோர்களும் என்க. தகதத்த - ஒலிக்குறிப்பு. பொருளை யிழந்தாரை ' தத்தஞ்
செய்துவிட்டார்' என்னும் வழக்குப்பற்றி, 'சுகதத்தம் உற' என்பதற்கு - இவ்வாறு
பொருள்கொள்ளப்பட்டது: இனி, இன்பத்தை அளித்தருளுதலுண்டாக எனினும்
அமையும்; எதிரி இரங்கி உயிரோடுவிட்டு அபயப் பிரதானஞ் செய்தருளும்படி
என்று கருத்து; பகைவர்க்கு வெற்றியின்பத்தைக் கொடுத்தல் பொருந்த
என்றலுமொன்று. தனுவேதியும் என்பதற்கு- வில்லாயுதத்தையுடைய விசயனும்
என்றும், 'சுகதத்தமுறவோடி' என்று பாடங்கொண்டு, தத்தம் - தம்தமக்கு,
சுகம்உற-சுகமுண்டாக, ஓடி என்றும் கூறினாரு முளர்.             (137)

93.- சந்திராஸ்தமனமும், மறுநாட் சூரியோதயமும்.

நிலையான வயவீர ருந்தேவ ராய்நின்ற நிலைகண்டுவெண்
கலையானி ரம்புஞ்செ ழுந்திங்க ளேகக்க டைக்கங்குல்வா
யலையாழி முழுநீல வுறைநின்று மாணிக்க மணியாழிபோ
லுலையாத வொளிகொண்ட கதிராயி ரத்தோனு
                               முதயஞ்செய்தான்.

     (இ-ள்.) நிலைஆன வய வீரர்உம்- (போரிற்பின்னிடாமல்) நிலைபெற்ற
வலிமையையுடைய வீரர்கள் பலரும், தேவர் ஆய்நின்ற- இறந்து தேவர்களாகி
நின்ற, நிலை- நிலைமையை, கண்டு - பார்த்து, வெள் கலையால் நிரம்பும் செழு
திங்கள்- வெண்ணிறமான அமிருத கிரணங்களால் நிறைந்துள்ள செழிப்பான
சந்திரன், ஏக - அப்பாற் செல்ல [அஸ்தமிக்க],- கடை கங்குல் வாய் -
அவ்விரவின்முடிவில், உலையாத ஒளி கொண்ட கதிர் ஆயிரத்தோன்உம் -
அழியாதபிரகாசத்தைக் கொண்ட ஆயிரங்கிரணங்களையுடைய சூரியனும், அலை
ஆழி முழுநீலம் உறைநின்று- அலைகளையுடைய கருங்கடலாகிய பெரிய
நீலநிறமுள்ளஉறையினின்று, மாணிக்கம் மணி ஆழி போல்- மாணிக்க
ரத்தினமயமானசக்கரம்போல, உதயம் செய்தான்- உதித்தலைச்செய்தான்
[உதித்தான்]; ( எ -று.)

     சந்திரன் தேவர்களுக்குத் தன்கலைகளாகிய அமிருதத்தை உணவாகக்
கொடுக்குந்தன்மைய னாதலால், போரிலிறந்து தேவசரீரம் பெற்று
வீரசுவர்க்கம்புக்கவர்க்கு விருந்திடும்பொருட்டுச் சென்றானென்று சந்திராஸ்தமநத்தை
வருணித்தார்; பயன்தற்குறிப்பேற்றவணி. ஆழி- மோதிரமென்பாருமுளர். உறை -
இங்கே, ஆபரணம் வைக்கும்கூடு. மாணிக்கம்-  வடசொல்லின் திரிபு;
செந்நிறமுள்ள இரத்தினம். (கருமாணிக்கம் என நூல்களில் வருவது,
இல்பொருளுவமை.) பின் இரண்டடி - உவமையணி.  கதிர் ஆயிரத்தோன் -
ஸஹஸ்ரகிரணன். 'உறையின்று' என்ற பாடத்துக்கு- உறையில்லாமல் என்க. பி -ம்:
அணியாழிபோல் , மணியாடி போல்.                                (138)

பன்னிரண்டாம்போர்ச்சருக்கம் முற்றிற்று.