எட்டாவது கன்ன பருவம். இந்தத்தொடர்க்கும் வீட்டுமபருவம் என்பதற்குப் பொருள் கூறியவாற்றை ஒட்டிப்பொருள் உரைத்துக்கொள்க. கன்னன் - கர்ணனென்பதன்சிதைவு. பதினாறாம்போர்ச்சருக்கம். 1.-தெய்வ வணக்கம் மாதுல னாகியு மேதில னாகிய வஞ்சன் கஞ்சன் வரவிட்ட பூதனை தன்னுயிர் முலைபொழி பாலொடு போதர வுண்ட புயல்வண்ணா மாதவ யாதவ வாசவ கேசவ மாயா வாயா மதுசூதா வாதியு மந்தமு மாகிய நின்புக ழல்லா துரையே னடியேனே. |
(இ-ள்.) மாதுலன் ஆகிஉம் - மாமனாக இருந்தும், ஏதிலன் ஆகிய - பகைவனான,வஞ்சன் - வஞ்சனையையுடையவனாகிய, கஞ்சன் - கம்சன், வர விட்ட - செல்லும்படி ஏவியனுப்பிய, பூதனை தன் -பூதனை யென்பவளது, உயிர் - பிராணன், முலை பொழி பாலொடு - அவள்முலையினின்று பெருகிய பாலுடனே, போதர - (உடம்பைவிட்டு) நீங்கும்படி, உண்ட - முலையுண்ட, புயல் வண்ணா - மேகம்போலுங் கரிய திருநிறமுடையவனே! மா தவ - இலக்குமி கணவனே! யாதவ -யதுகுலத்தில்திருவவதரித்தவனே! வாசவ - உபேந்திரனானவனே! கேசவ - பிரமனையும்உருத்திரனையும் அங்கத்திற்கொண்டவனே! மாயா - மாயையையுடையவனே! ஆயா - இடையர்குலத்தில் வளர்ந்தவனே! மது சூதா - மதுவென்னும் அசுரனை அழித்தவனே! ஆதிஉம் அந்தம்உம் ஆகிய - (எல்லாப் பொருள்கட்கும்) முதலும் ஈறுமான, நின் - உனது, புகழ் அல்லாது - கீர்த்தியையே (எப்பொழுதுஞ் சொல்லுவேனே) யல்லாமல், (வேறொன்றையும்), அடியேன் - (உனது) அடியவனாகிய யான், உரையேன் - (ஒருபொழுதுஞ்) சொல்லேன்; (எ - று.) இந்திரனைக்காத்தற்பொருட்டு அவன் வேண்டுகோளினால் அவனுக்குத் தம்பியாகத் திருவவதரித்து விரோதிநிரஸநஞ் செய்து அவனருகில் எழுந்தருளியிருக்கின்ற உபேந்திரமூர்த்தியை 'வாசவ' என இந்திரன்பெயராற் கூறினர்;இனி, வாசவ - இந்திரஸ்வரூபியானவனே என்றேனும், எல்லா ஐசுவரியமும் உடையவனே என்றேனும் பொருள் கூறலாம். க்ஷத்திரியஜாதியிலே சிறந்த சந்திரவமிசத்திற் பேர்பெற்ற யதுகுலத்திற் பிறந்திருந்தும் இடையர் சாதியிற்சேர்ந்து வளர்ந்து கன்று மேய்த்து ஒருத்தி கட்டவும் ஒருத்தி குட்டவுந் தன்னைக் காட்டிக்கொடுத்த சௌலப்பியகுணத்தின் மிகுதி விளங்க, 'ஆயா' என்றார். 'யாதவ, ஆயா' என்னுஞ் சொற்களினால் வசுதேவகுமாரனாய்த் தேவகி திருவயிற்றிலுதித்து நந்தகோபர்மனையில் |