பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்181

அகல் உலகில் வீரர்எலாம் - பரந்த உலகங்களிலுள்ள வீரர்கள்யாவரும், மதிக்க -
(தன்னைக்) கௌரவிக்கும்படி, எய்தான்-, அந்த ஆசுகம் - அந்த அம்பு,
தகல்உடையார் மொழிபோல - (ஞானஒழுக்கங்களினால்)  தகுதியையுடைய
முனிவரது சாப அனுக்கிரகவார்த்தைகள் போல, தப்பாமல் - (சிறிதும்) தவறாதபடி,
உருவி - (மார்பைத்) துளைத்துக் கொண்டு அப்பால்ஓடி - பின்னே விரைந்து
சென்று,தரணியூடு - பூமியிலே, குளித்தது - விழுந்து அழுந்திற்று; அவன்
தான்உம் -கர்ணனும், வீழ்ந்தான்-கீழே விழுந்தான்: (எ-று.)           (343)

253.- கர்ணன் நிலைமை.

கருடனதுதிருத்தோளிற்கண்டகோலங் கண்ணினுநெஞ்சினுநிற்
                                  கக்கருணையாதி,
புருடனதுதிருநாமந்தனதுநாவிற் போகாமனனிவிளங்
                                 கப்புதைந்துவாளி,
வருடமுடல்குளிர்விக்கச்செம்பொற்றேர்மேன்மன்னரெலாம்
                            புடைசூழவையங்காக்குங்,
குருடன்மகனருகிருந்துசோகங்கூரக்குற்றுயிரினுடன்கிடந்தான்
                             கொடையான்மிக்கோன்.

     (இ-ள்.)  கருடனது - பெரியதிருவடியின், திரு தோளில் - அழகிய
தோள்களின்மேல், கண்ட - காணப்பட்ட, கருணை - அருளையுடைய,
ஆதிபுருடனது - [யாவர்க்கும்] முதல்வனும் புருஷோத்தமனுமாகிய எம்பெருமானது.
கோலம் - திவ்வியசொரூபம், கண்ணின்உம் - (தனது) கண்களிலும், நெஞ்சின்உம் -
மனத்திலும், நிற்க - நிலைபெற்றிருக்கவும், திருநாமம் - [அக்கடவுளது] சிறந்த
பெயர்,தனது நாவில் - தன்நாக்கில்நின்றும் - போகாமல்- நீங்கிப்போகாதபடி, நனி
விளங்க- நன்றாகவிளங்கவும், வாளிவருடம் - பாணவருஷம், புதைந்து -
மேலேஅழுந்தி,உடல் -  உடம்பை, குளிர்விக்க - குளிரச் செய்யவும். மன்னர்
எலாம் -அரசர்கள்யாவரும், புடைசூழ - பக்கங்களிற் சூழ்ந்து நிற்கவும், வையம்
காக்கும் -பூமியை அரசாளுகிற, குருடன் மகன் - பிறவிக்குருடனாகிய
திருதராட்டிரனதுமைந்தனான துரியோதனன், அருகு இருந்து - பக்கத்திலே
யிருந்து, சோகம் கூர -துன்பம் மிகவும், கொடையால் மிக்கோன் -
தானத்தால்மிகுந்தவனான கர்ணன், செம்பொன் தேர்மேல் - சிவந்த
பொன்னாலாகிய தேரில், குறு உயிரினுடன் -குறைப்பிராணனோடு, கிடந்தான் -
விழுந்திருந்தான்; (எ - று.)

     வீரர்களெல்லாஞ் சிறந்தபுண்களை விரும்புவராதலால், 'வாளிவருடமுடல்
குளிர்விக்க' என்றார்.                                          (344)

254.-கர்ணன் குற்றுயிருடனிருப்பதை அசரீரியாலறிந்து
குந்திதேவி கதறிக்கொண்டு களங்குறுகுதல்.

முந்தியெதிர்பொரும்விசயன்றொடுத்தகோலான் முடிசாய்ந்தின்
                       றைவருக்குமுன்னோன்வீழ்ந்தா,
னந்திபடுவதன்முன்னேயாவிபோமென்றசரீரியெடுத்துரைப்
                                    பவன்னையான,
குந்திதனதுளமுருகக்கண்ணீர்சோரக்குழல்சரியப்போர்க்
                            களத்துக்கோகோவென்று,
வந்திருகைதலைப்புடைத்துத்தலைநாளீன்றமகவின்மேல்வீழ்ந்
                          தழுதாண்மன்னோமன்னோ.