இராமனை உவமைகூறினார்; இங்ஙனம் விட்டது, தழிஞ்சி என்னும் புறப்பொருள் துறை. (38) 39.- சாத்தகியும் சல்லியனும் தம்மிற்பொருதல். அல்லியம்புயமனையகண்ணினனனுசனுங்குனிவிற் சல்லியன்பெயரெனவிளங்கியதானைமன்னவனும் பல்லியங்கடுவைப்பநீடுபணைப்பகட்டுடனே வல்லியம்பொருமாறெனப்பொரமாறிலாரொருபால். |
ஐந்து கவிகள் - ஒருதொடர். (இ-ள்.) மாறு இலார் - ஒப்பற்றவராகிய,- அல்லி அம்புயம் அனைய கண்ணினன் அனுசன்உம் - அகவிதழ்களையுடைய செந்தாமரைமலர்போன்ற திருக்கண்களையுடையவனான கண்ணபிரானது தம்பியாகிய சாத்தகியும்,- குனி வில் -வளைத்த வில்லையுடைய, சல்லியன் பெயர் என விளங்கிய - சல்லியனென்றுபேர்விளங்கப்பெற்ற, தானை மன்னவன்உம் - சேனைகளையுடைய அரசனும்,- பல்இயங்கள் துவைப்ப - பலவகைவாத்தியங்கள் முழங்க,- நீடு பணை பகட்டுடனே-உயர்ந்த பருத்த ஆண்யானையுடனே, வல்லியம் - புலி, பொரும் ஆறு என -போர்செய்யும் விதம்போல், ஒரு பால் - ஒரு பக்கத்தில், பொர - போர்செய்ய,-(எ-று.) - செயவெனெச்சங்கள் அடுக்கி, 43 - ஆங்கவியில் முடியும், பணை -தந்தமுமாம். அநுஜன் - பின் பிறந்தவன்; முன் பிறந்தவன் 'அக்ரஜன்' எனப்படுவன்.யானை புலிகளை உவமை கூறியதனால், இவ்விருவரும் தம்மிற் சமபலமுடையவரென்றவாறாம். (39) 40.- சாலுவனும் சேரனும் தம்மிற்பொருதல். மாரனுக்கிளையாமலம்பையைமாதவத்துவிடுந் தீரனுக்குமொராழிகொண்டுசெலுத்துதேருடைவெஞ் சூரனுக்கெதிராகிமேனிதுலங்குசேரனெனும் வீரனுக்குமிகுத்தபேரமர்விளையவேறொருபால். |
(இ-ள்.) மாரனுக்கு - மன்மதனுக்கு, இளையாமல் - தோற்காமல் [வசப்படாமல்],அம்பையை - அம்பையென்பவளை, மா தவத்து விடும் - சிறந்த தவவொழுக்கத்திலே செலுத்திவிட்ட, தீரனுக்கு உம் - தைரியசாலியான சாலுவனுக்கும்,- ஓர் ஆழிகொண்டு - ஓர சக்கரத்தால், செலுத்து - செலுத்தப்படுகிற, தேர் உடை - தேரையுடைய , வெம் - வெவ்விய, சூரனுக்கு - சூரியனுக்கு, எதிர் ஆகி - ஒப்பாகி, மேனி துலங்கு - உடம்பு விளங்குகின்ற, சேரன் எனும் வீரனுக்குஉம் - சேரநாட்டரசனென்கிற வீரனுக்கும், வேறு ஒரு பால் - மற்றொருபக்கத்தில், மிகுத்த பேர் அமர் - சிறந்தபெரும்போர்,விளைய-நடக்க,- (எ-று.) மாரன் - (பிராணிகளை ஆசைநோயால்) மரணவேதனைப்படுத்துபவன். அம்பை - காசிராசனது பெண்கள் மூவரில் ஒருத்தி; சுயம்வரங் கோடித்த பொழுது, பீஷ்மன் காசிராசன் புத்திரிகளாகிய |