சேரவளைத்தவிலொன்றொருகோடிசிலீமகமேவினவே வீரருயிர்ப்புடல்விட்டமங்கையர்மெய்ம்முகமேவினவே. |
(இ-ள்.) தாரைகள் - தாரையென்னும் வாத்தியங்களும், ஒற்றைகள் - ஒற்றையென்னும் ஊதுகொம்புகளும், வங்கியம் - வேய்ங்குழல்களும், நீள்வயிர் - நீண்டவயிரென்னும் ஊதுகொம்புகளும், சங்கம் - சங்கங்களும், முழக்கின - மிகஒலிசெய்தன; ஓர் இமையில் - ஓரிமைப்பொழுதினுள்ளே, சில யானை-, துரங்கம சங்கம் - குதிரைக்கூட்டங்களை, உழக்கின - கலக்கின, வளைத்த வில் ஒன்று - வளைத்துப்பிடித்த ஒவ்வொருவில்லும், ஒரு கோடி சிலீமுகம் - ஒரு கோடி அம்புகளை, சேர - ஒருசேர, ஏவின - பிரயோகித்தன; வீரர் - வீரர்களது, உயிர்ப்பு- உயிர், உடல் விட்டு - உடம்பைவிட்டு, அரமங்கையர் - தெய்வப்பெண்களது,மெய் முகம் - உடம்பினிடத்தை, மேவின - அடைந்தன; (எ - று.) வங்கியம் - வம்ஸம் என்ற வடசொற் சிதைவு; மூங்கிலின் பெயர் - சினையாகுபெயராய், அதனாலாகிய புள்ளாங்குழலைக் குறித்தது. முதலடியில், சங்கம்-ஸங்கம்; இரண்டாமடியில், சங்கம் - ஸங்கம். யுத்தகளத்திற் புறங்கொடாது எதிர்நின்று போர்செய்து இறந்தவர் உடனே வீரசுவர்க்கத்தை அடைந்து அங்குள்ள தெய்வமகளிரது உடம்பைத் தழுவி இன்பமனுபவித்தலால், 'வீரருயிர்ப்புடல் விட்டர மங்கையர் மெய்ம்முக மேவின' என்றார். (59) 60. | பொருகடலொத்தபெருங்குருதிக்கடல்போதவிரைந்தனவே விரைவுறுதேவர்விமானம்விசும்பிடைபோதவிரைந்தனவே கருமுகின்முட்டினபட்டவர்கட்கனல்காலுமரும்புகையே சுரிகையொடற்றுவிழுந்தனமங்கையர்துனியிலரும்புகையே. |
(இ-ள்.) பொரு - அலைமோதுகிற, கடல் - கடல்களை, ஒத்த -, பெருங்குருதிகடல் - பெரிய இரத்தவெள்ளங்கள், போத இரைந்தன - மிகவும் ஒலித்தன; விரைவுஉறு -(போரைக்காணுதற்கு) விரைதல் பொருந்திய, தேவர் - தேவர்களது, விமானம் -(வாகனமாகிய) விமானங்கள், விசும்பிடை போத - ஆகாயமார்க்கத்தில் வருதற்கு,விரைந்தன - விரைவுபட்டன; பட்டவர் - இறந்த வீரரது, கண் - கண்களினின்றுதோன்றுகிற, கனல் - கோபத்தீ, காலும் - வெளியில் விடுகிற, அரும் புகை -(அளவிடுதற்கு) அருமையான புகைகள், கரு முகில் - கரிய மேகங்களை, முட்டின -அளாவிப்பரந்தன; மங்கையர்- மாதர்களது, துனியில் - ஊடல்மிகுதியில், அரும்பு-(அவ்வூடலைத் தீர்த்தற் பொருட்டு அவர்களைத்தொழுது) கூப்புகிற, கை - கைகள்,சுரிகையொடு - உடைவாளுடனே, அற்று - அறுந்து, விழுந்தன-; (எ -று.) இன்சொல்முதலிய வேறுஉபாயங்களினால் தணிக்கக்கூடிய நிலையைக் கடந்த பெரும்புலவியில், ஆடவர், எவரையும் வசப்படுத்து மியல்பினதான வணக்கத்தை மேற்கொண்டு அவ்வூடலைத் தணிவிக்க முயல்வ ரென்பதையறிக. "மனைவியுயர்வுங்கிழ வோன்பணிவு நினையுங்காலைப் புலவியுளுரிய" என்றது தொல்காப்பியம். |