(இ-ள்.) கன்னன் இவை எடுத்து உரைப்ப-, காந்தாரன் திருகுலத்து கன்னி ஈன்ற - காந்தாரநாட்டரசனது மேன்மையான குலத்தில்தோன்றிய பெண்ணாகிய காந்தாரி பெற்ற, மன்னர்பிரான்- அரசர்க்கரசனான துரியோதனன், மகிழ்ந்து கேட்டு-, இமைப்பொழுதில்-, பழுது இலாத மத்திரராசனை எய்தி - ஒரு குறைவுமில்லாத மத்திரதேசத்தரசனான சல்லியனை அடைந்து, 'மதுபசாலம் - வண்டுகளின் கூட்டம், தென்ன தென என முரலும் - தென்னதென வென்று இசைபாடுகிற, செவ்வி மாலை - அழகிய மாலையயணிந்த, திருத்தோளாய் - அழகிய தோள்களையுடையவனே! யான் ஒன்று செப்பினால் - நான் ஒரு வார்த்தை சொன்னால், அ இன் உரை கேட்டு- அவ்வினியவார்த்தையைக் காதுகொடுத்துக்கேட்டு, நீ -, ஒரு வரம் - ஒருவரத்தை,நல்கல் வேண்டும் - (எனக்குக்) கொடுத்தல் வேண்டும்; என் ஆணை - என்மேல்ஆணை,' என - என்று சொல்லி, கரங்கொண்டு - கைகளால், இறைஞ்சினான் -தொழுதான்; (எ -று.)- தென்னதென வென - இசைக்குறிப்பு. (113) 23.-வரங்கொடுக்கச் சல்லியனிசைய, துரியோதனன் கண்ணனைப்போல் நீ எங்களைக் காக்கவேணு மெனல். செறுத்தவர்தம்பெருவாழ்வுமுயிருமாற்றிச் சேர்ந்தவர்கள் புரிந்தபெருந்தீமையெல்லாம், பொறுத்துலகமுழுதாளுந்திகிரியோயான்பொருளாகவொரு வரநீபுகலுவாயேன், மறுத்துரையேனுரைத்தருளென்றுரைத்தானந்தமத்திரபூபனுமி வனுமருவலாரைக், கறுத்தமழைமுகில்வெளுக்கருகுமேனிக்கண்ணனைப் போலெங்களை நீகாத்தியென்றான். |
(இ-ள்.) அந்த மத்திர பூபன்உம் - மத்திரதேசத்தரசனான அச்சல்லியனும், (அதுகேட்டுத் துரியோதனனைநோக்கி), 'செறுத்தவர் தம் - பகைத்தவர்களது, பெருவாழ்வுஉம் - பெரிய எல்லாவாழ்க்கைகளையும், உயிர்உம் - உயிரையும், மாற்றி - ஒழித்து, சேர்ந்தவர்கள் புரிந்த - (தன்னை) அடைந்தவர்கள் செய்த, பெரு தீமை எல்லாம் - பெரிய தீங்குகள் முழுவதையும், பொறுத்து-, உலகம் முழுது ஆளும் - உலகமுழுவதையும் அரசாளுகின்ற, திகிரியோய் - ஆஜ்ஞா சக்கரமுடையவனே! நீ-, யான் பொருள் ஆக - பொருளல்லா என்னை ஒரு பொருளாக மதித்து, ஒரு வரம்-, புகலுவாய்ஏல் - கேட்பையானால், மறுத்து உரையேன் -(அதை நான்) தடுத்துச் சொல்லேன: உரைத்தருள் - (அவ்வரம் இன்னதென்று) சொல்லி யருளுவாய்', என்று உரைத்தான்-; இவன்உம் - துரியோதனனும், (உடனே),' மருவலாரை - பகைவர்களாகிய பாண்டவர்களை, கறுத்த மழை முகில் வெளுக்க - மழைபெய்கிற காளமேகமும் வெளுப்பென்னும்படி, கருகும் மேனி - மிகக்கறுத்த திருமேனியையுடைய, கண்ணனைப்போல் - கிருஷ்ணன் காப்பதுபோல, எங்களை-, நீ-, காத்தி - காப்பாய்,' என்றான்-,( எ - று.)- சிறுபிழைசில பொறுத்தல் அரிதன்றாதலால், 'பெருந்தீமையெல்லாம் பொறுத்து' என்றான். (114) |