வேலாயுதமும், தெவ்வன் யானைஉம் - பகைவனான அக்காசீராசனது யானையும், துணிய - துண்டுபட்டுவிழும்படி, ஏ ஒன்று - ஒரு பாணத்தை, எய்தான் - பிரயோகித்தான்; (எ -று.)-கேமதூர்த்தி - க்ஷேமதூர்த்தி. (14) 15.- கேமதூர்த்தி வீமனதுயானையை அடித்துத்தள்ளுதல். கேமனக்கரியினின்றுங்கிரியினின்றிழியுமாளி யாமெனத்தரணியெய்தியடல்வயிர்த்தண்டொன்றேந்தி வீமனன்றூர்ந்தவெங்கைவெற்பினைப்புடைத்துவீழ்த்தான் பூமருதாரினானும்பூவின்மேற்சுரும்பிற்பாய்ந்தான். |
(இ-ள்.) கேமன் - கேமதூர்த்தி,- அ கரியினின்றுஉம் - அந்த யானையினின்றும், கிரியினின்று இழியும் ஆளி ஆம் என - மலையினின்று இறங்குகின்ற சிங்கம்போல, தரணி எய்தி - தரையில் இறங்கி வந்து,- அடல் வயிர்தண்டு ஒன்று ஏந்தி - மிக்க வலிமையையுடைய கதாயுதமொன்றை எடுத்து (அதனால்), வீமன் அன்று ஊர்ந்த - வீமசேனன் அப்பொழுது ஏறிநின்ற, வெம்கை வெற்பினை - வெவ்விய துதிக்கையையுடைய மலைபோன்றதான யானையை, புடைத்து - அடித்து, வீழ்த்தான் - கொன்று கீழேதள்ளினான்; பூ மரு தாரினான் உம்- மலர்களால் தொடுக்கப்பட்ட போர் மாலையையுடையவனான வீமசேனனும்,- பூவின்மேல் சுரும்பின் - மலரிற்பாய்கிற வண்டுபோல, (பூவின்மேல்) பாய்ந்தான் - தரையிற் குதித்தான்; (எ - று.)-பூ- இரட்டுற மொழிதல். (15) 16.- வீமனும் கேமதூர்த்தியும் கதாயுத்தஞ்செய்தல். கரியமர்க்கொருவரானவிருவருங்காலினின்று பரியவக்கதைப்போர்வல்லபார்த்திவர்பலருங்காணக் கிரியொடுகிரிசெய்பூசலிதுவெனக்கிளக்குமாறு புரிவிலார்பொருதபோர்மற்றியாவரேபுகலவல்லார். |
(இ-ள்.) கரி அமர்க்கு - யானைமேலேறிச்செய்யும் போரில், ஒருவர் ஆன -ஒப்பற்றவராகிய, இருவர்உம் - இரண்டுபேரும் [வீமனும் கேமனும்], காலின் நின்று -(யானையில்லாமையால்பூமியிற்) கால்களால் நின்றுகொண்டு, பரிய அ கதை போர்வல்ல பார்த்திவர் பலர்உம் காண - பருத்த கதாயுதத்தாற்செய்கின்ற அந்த யுத்தத்தில்வல்ல அரசர்களெல்லலாரும் (வியந்து) காணும்படி,- கிரியொடு கிரி செய் பூசல் இதுஎன கிளக்கும் ஆறு - மலையும் மலையும் (தம்மிற் பகைத்துச்) செய்கின்றபோர் இதுவென்று (ஒப்புமையாற்) சொல்லுமாறு, புரிவு இலார் -(வேறு ஓர்) எண்ணமும்இல்லாமல், பொருத - செய்த, போர் - யுத்தத்தை, யாவர் ஏ புகல வல்லார் -எவர்தாம் (இத் தன்மையதென்று) சொல்லவல்லவர்? (எ - று.)-புரிவு -(போரைத்தவிர்த்து வேறொன்றில்) விருப்புமாம். மற்று - அசை. (16) |