பக்கம் எண் :

136பாரதம்சல்லிய பருவம்

     வீமன்கதைக்குரிய சத்துருகாதினியென்ற பெயரின் பொருளை
விவரித்து'மாறுகொண்டவராவிகொள்நீள்கதை' எனப்பட்டது.  இங்கு இதம்
என்றுபிரித்து, இப்பொழுது நன்மையன்று என்று உரைப்பினுமாம்.  அல -
அல்லவென்பதன் தொகுத்தல்; அது-வேறு இல்லை உண்டு என்பன போல
ஐம்பால் மூவிடத்துக்கும் பொதுவான குறிப்புமுற்று:  இங்குப்
படர்க்கையொன்றன்பாலுக்கு வந்தது.  ஆதிபன் - அதிபனென்பதன் நீட்டல்.
நூனலம் - உத்தமவிலக்கணமாகிய மூன்று இரேகை முதலியன.  இனி, 'நூல்
நலந்திகழ் மார்பன்' என்பதற்கு - முப்புரி நூல் நன்குவிளங்கும்
மார்பையுடையவனென்று உரைப்பாரு முளர்.  கண்டிடலாம் என்பதில்
காணுதலென்பது - செய்தலென்னும் பொருளில் வந்தது.  இவண் ஓர் உரை
கூறல் - இப்பொழுது ஒருவார்த்தை சொல்லுதல், இங்கிதமே அல -
குறிப்பினாற் செய்யத்தக்கதேயன்றி, ஓர் உரை கூறில் - (வெளிப்படையாக)
ஒருவார்த்தை யெடுத்துச்சொன்னால், வஞ்சகம் ஆம் வஞ்சனையாய் முடியும்
என்று உரைப்பாரும் உளர். இங்கிதம் - குறிப்பால்நிகழும் உறுப்பின்
தொழில்;கண் கை கால் முதலிய உறுப்புக்களின் சைகையால் ஏதேனும் ஒரு
கருத்தைப்பிறர்க்குத்தெரியாதபடி அவனுக்குக் குறிப்பாகப் புலப்படுத்திற்
படுத்தலாமேயன்றி, வாயால் ஒன்றும் வெளிப்படையாக்கூறுதல் தகுதியன்
றென்பது, உட்கோள்.                                     (182)

183.-அருச்சுனன் வீமனுக்குக்குறிப்பால் உபாயம் உணர்த்தல்.

ஏழ்பெருங்கடல்சூழ்புவிபாரமுமேதமுங்கெடவேதமிலைவரும்
வாழவன்றுயர்நாரணனார்திருவாய்மலர்ந்தசொலான்மகிழாமிக
ஊழினும்புரிதாள்வலிதேயெனவூருவின்புடை சேர்கரநாண்மலர்
காழ்நெடுங்கிரியேயனையான்விழிகாணநின்றனன்வானரிகாளையே.

     (இ -ள்.) ஏழ் பெரு கடல் சூழ் - ஏழு பெரிய கடல்களாற் சூழப்பட்ட,
புவி - பூமியினது, பாரமும் - சுமையும், ஏதமும் - (அதனாலாகிய) துன்பமும்,
கெட - அழியும்படியாகவும், ஏதம் இல் - குற்றமில்லாத, ஐவரும் -
(பாண்டவர்) ஐந்துபேரும், வாழ - உயிர்வாழும்படியாகவும், அன்று -
அப்பொழுது, உயர் நாரணனார் - (யாவரினுஞ்சிறந்த) கண்ணபிரான்,
திருவாய்மலர்ந்த - அழகிய வாய்மலரைத் திறந்து கூறிய, சொலால் -
வார்த்தையினால், மிக மகிழா - மிகவும் மகிழ்ந்து, வான் அரி காளை -
தேவலோகத்தையாளுகிற இந்திரனது புத்திரனான அருச்சுனன், புரி தாள்
ஊழினும் வலிதே என - செய்யும் முயற்சி விதிப் பயனினும்
வலிமையுடையதேயாமென்று எண்ணி, ஊருவின் புடை சேர் கரம் நாள்
மலர் -(தனது) தொடையினிடத்துவைத்தஅன்றுமலர்ந்த தாமரைப்பூப்போன்ற
(தனது)கையை, காழ் நெடுகிரியே அனையான் விழி காண - வலியபெரிய
மலையையே யொத்த வீமனது கண்கள் காணும்படி, நின்றனன் - நின்றான்;
                                                    (எ- று.)

    துரியோதனனைக் கொல்லும் உபாயத்தைக் கண்ணன் கூறியவுடனே
கேட்டு மகிழ்ந்து, அருச்சுனன், முயற்சி வீண்படாதாதலின் அதனை நாம்
செய்ய வேண்டுவதென்று துணிந்து, வீமன் கண்