சர்க்கு 'ஸாமந்தர்'என்று பெயர்; வடசொல். மண்டலீகர் - நாற்பது கிராமம் ஆள்பவர். [ஒருகோடிகிராமம் ஆள்பவன் மகுடவர்த்தனனென்றும், மகுடவர்த்தனர் நாலாயிரவரை வணக்கியாள்பவன் மண்டலீக னென்றும், மூன்றுலக்ஷமளவுங் கப்பங்கட்டுபவர் சாமந்தரென்றும் கூறுவர் ஒருசாரார்.](9) 10.-இனிப் பாண்டவர்செய்திகூறத்தொடங்குதல்: கவிக்கூற்று. ஒருவருமெனக்கு நிகரில்லை யெனுமத்திரன் புத்திரனை யுரகதுவசன், பொருபடைமுனைக்குரிய சேனாபதிப்பெயர் புனைந்தமை புகன்றனமினிக், குருகுலம்விளங்கவரு குந்திமைந்தர்க ளிரவிகுமரனைக் கொன்றவிரவிற், பருவரன்மிகுந்துளமினைந்ததும் பாசறைமுனைந்ததும் வியந்துபகர்வாம். |
(இ -ள்.) ஒருவரும் எனக்கு நிகர் இல்லை எனும் - ஒருவரும் எனக்கு (உலகத்தில்) ஒப்பில்லை யென்று செருக்குக்கொண்ட, மத்திரன் புத்திரனை - மத்திரராசனது குமாரனான சல்லியனை, உரகதுவசன் - பாம்பின் வடிவமெழுதிய கொடியையுடைய துரியோதனன், பொரு படைமுனைக்கு உரிய சேனாபதி பெயர் புனைந்தமை - தாக்கிச்செய்யும் போர்த்தொழிற்குஉரிய சேனைத்தலைவனென்ற பெயரைச் சூடினமையை, புகன்றனம் - கீழ்க் கூறினோம்; இனி - இனிமேல்,- குரு குலம் விளங்க வரு குந்தி மைந்தர்கள்- குருவென்னும் அரசனது குலம் பிரசித்தியடையும்படி (அதில்) தோன்றிய குந்தியின் புத்திரராகிய பாண்டவர்கள், இரவி குமரனைக் கொன்ற இரவில் - சூரியன்மகனான கர்ணனைக் கொன்ற (பதினேழாம்போர்நாளின்) இரவிலே, பருவரல் மிகுந்து உளம் இனைந்ததும் - துன்பம்மிக்கு மனம் வருந்தியதையும், பாசறை முனைந்ததும் - (தமது) படைவீட்டில் யுத்தாலோசனை செய்ததையும், வியந்து பகர்வாம் - கொண்டாடிக் கூறுவோம்; (எ - று.)- இனிப் பகர்வாம் என இயையும். பாசறை புகுந்ததும் என்றும் பாடம். மாதுலனென்றசொல்வடமொழியில், தனக்கு ஒப்பில்லாதவனென்றும் ஒருபொருள்படுதலால் அத்தன்மையைக்கருதி, 'ஒருவருமெனக்கு நிகரில்லையெனு மத்திரன் புத்திரன்' என்றனரென்க; என்றது, மாதுலனான சல்லியனென்றவாறு. மத்திரனென்றது, சல்லியன் தந்தையை. (10) வேறு. 11.-கர்ணன் இறந்ததற்குப்பாண்டவர் புலம்பல். செவ்விரவிதிருமகனைச் செகம்புரக்குங் காவலனை யிரவலோருக்கு எவ்விரவும்விடிவிக்கு மிருகரத்து வள்ளலையின் றிழந்தோ மென்று விவ்விரவு நறுமலர்த்தார்த் தருமன்முத லைவருந்தம் விழிநீர் சோர அவ்விரவிலிமைப்பொழுதுந் தரியாம லழுதரற்றி யலமந் தாரே. |
|