வேறு. 198.-பாண்டவர்களைக்கண்ணன் வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லுதல். மிடன்மிஞ்சு மேவலர் வானிடைபோதர வினைவென்ற காவலர்பாசறை சேருதல், கடனன்றெ னாமுனி மாமகன் வாள்வலிகருதுந்தனீர்மையை வேறறி யாவகை, அடல்கொண்ட சேனையெலாமவண்வாழ்வுற வவரைந்து வீரரு மேவர வேயொரு, புடைதங்குகானிடைபோயின னானனி பொழிகொண்டல் போறிரு மேனிமுராரியே. |
(இ -ள்.) 'மிடல் மிஞ்சு - வலிமை மிக்க, மேவலர் - பகைவர்கள், வானிடை போதர - விண்ணுலகத்திலே செல்லும்படி [இறந்துவீரசுவர்க்கமடையும்படி] வினை வென்ற - போர்த்தொழிலில் வெற்றி கொண்ட, காவலர் - அரசர்கள், பாசறை சேருதல் - (அன்றைத்தினத்தில்) படைவீடுசேர்ந்து அங்கு வசித்தல், கடன் அன்று - முறைமையன்று,' எனா - என்றுகூறி,- நனிபொழி கொண்டல் போல் திருமேனி முராரி - மிகுதியாக மழைபொழிகிற நீர்கொண்ட காளமேகம் போன்ற அழகிய வடிவத்தையுடைய கண்ணபிரான்,-மாமுனி மகன் வாள் வலி கருதும் தன் நீர்மையை வேறு அறியாவகை - சிறந்த துரோணகுமாரனான அசுவத்தாமனது வாட்படையின் வலிமையைத்தான் சிந்தித்தறிந்த தனது தன்மையைப் பிறரெவரும் அறியாதபடி(மறைத்து),-அடல் கொண்ட சேனை எலாம் அவண் வாழ்வு உற -வெற்றிகொண்ட சேனைகள் யாவும் அப்பாசறையினிடத்தே தங்கியிருக்க, அவர்ஐந்து வீரருமே வர - அந்தப் பாண்டவ வீரரைவர் மாத்திரமே (தன்னோடு)வர, புடை தங்கு ஒரு கானிடை போயினன் - பக்கத்திலே பொருந்தியதொருகாட்டினிடத்துச் சென்றான்; (எ - று.) - ஆல்-ஈற்றசை. துரியோதனன் தொடைமுறிந்து விழுந்து கிடப்பதைக் கண்டு இரங்கும் அசுவத்தாமன், மனம் மிகக்கொதித்து, சூரியோதயத்துக்கு முன் பாண்டவர் பாசறையிற்புகுந்து அவர்களையும் அவர்களைச் சேர்ந்தவ ரனைவரையும் அழித்து மீள்வேனென்று துரியோதனனெதிரில் வீரவாதங்கூறிக் கிருபாசாரியனையுங் கிருதவர்மாவினையுந் துணையாகக்கொண்டுசென்று தான் சிவபெருமானிடம் பெற்றதொரு வாட்படையால் அனைவரையும் கொல்லக் கருதுவான்; அதனைத் தனதுதெய்வத்தன்மையால் முந்தியுணர்ந்த கண்ணன் பூமிபாரநிவிருத்திக்காக மற்றையோரையெல்லாம் அழிக்கவும் தனது பஞ்ச பிராணன்களுக்கீடான பாண்டவ ரைவரைமாத்திரமே அழியாது மிகுத்தவும் திருவுள்ளங்கொண்டவனாதலால், அந்த அசுவத்தாமன் செய்தியை எவர்க்குங்கூறாமலே மறைத்துவிட்டுத் தான் வேறு வியாஜங்கூறிப் பாண்டவரை மாத்திரம்பிறிதிடத்திற்கு அழைத்துச் சென்றன னென்பதாம். இங்ஙனம் பாண்டவர்பக்கல்வரம்புகடந்த திருவருளுடைமையும் விளங்க, 'நனிபொழி கொண்டல்போல்திருமேனி முராரி' என்றார். |