இம்மையில் நினைத்தகாரியத்தை முடித்தலாகிய காமியபல சித்தி, அழித்தற்கரிய பிராரப்தகருமத்தால் ஒருகால்தடைப்படினும் மறுமையில் பேரின்பமனுபவித்தலாகிய பயன் தவறாதாதலின், கடவுளைப் பூசித்தல் தகுதியேயென்று கருதின னென்க. கருத்தில் இருத்தி - மனத்தில் தியானித்து என்றபடி. ஆகமம் - ஒருகாலத்தில் சிவபிரானது திருமுகத்தினின்று தோன்றியவையும், சிவபிரானைப் பூசித்தல் முதலிய விதங்களை விவரமாகக் கூறுபவையும் ஆன காமியம் முதலிய இருபத்தெட்டுநூல்கள் 'பங்கயமலர்கொண்டு' என்றும் பாடம். (210) 7.-சிவபிரான் பிரசன்னமாய்அவனுக்கு ஆயுதமளித்தல். அன்றவன்மறையின்முறையினாற்புரிந்தவருச்சனைதனையுவந்தருளி நின்றனன்விழியுமிதயமுங்களிப்பநீறுடையேறுடைக்கடவுள் வன்றிறன்முனிவன்மதலையும்விதலைமாறிமாறடர்ப்பதோர் படைநல்கு என்றனனென்றவுரைமுடிவதன்முனேதியொன்றீசனுமீந்தான். |
(இ -ள்.) அன்று - அப்பொழுது, அவன் - அசுவத்தாமன், மறையின் முறையினால் - வேதங்களிற்கூறியுள்ள முறைமைப்படி, புரிந்த - செய்த, அருச்சனைதனை - பூசையை, நீறு உடை ஏறு உடை கடவுள் - விபூதியை யுடையவனும் ரிஷபத்தையுடையவனுமான சிவபிரான், உவந்து அருளி - ஏற்றுக்கொண்டு மகிழ்ந்து கருணை கொண்டு, விழியும் இதயமும் களிப்ப நின்றனன் - (அசுவத்தாமனது) மனமும் கண்களும் களிப்படையும்படி (அவனுக்குத் தரிசனந்தந்து) நின்றான்; (அப்பொழுது), வல் திறல் முனிவன் மதலையும் - கொடிய வலிமையையுடைய அந்தணனாகிய துரோணாசாரியனது குமாரனான அசுவத்தாமனும், விதலை மாறி - மனக்கலக்க மொழிந்து, மாறு அடர்ப்பது ஓர் படை நல்கு என்றனன் - 'பகைவர்களைத் தவறாமல் அழிப்பதொரு ஆயுதத்தை (எனக்குக்) கொடுத்தருள்வாய்' என்று வேண்டினான்; என்ற உரை முடிவதன் முன் - என்று இங்ஙனம் பிரார்த்தித்தவார்த்தை முடிவதற்குமுன் [உடனே என்றபடி], ஈசனும் - சிவபிரானும், ஏதிஒன்று - ஓராயுதத்தை, ஈந்தான் - கொடுத்தருளினான்; (எ - று.) சிவபிரான் தரிசனந்தந்தமாத்திரத்தில்தான் அப்பிரானருள் பெற்றுத் தனதுசபதத்தை நிறைவேற்றிவிடலாமென்று தைரியங்கொண்டமை தோன்ற, 'விதலைமாறி' என்றார். மாறு - மாற்றார்க்குப் பண்பாகுபெயர். குமாரனான பக்தனது வேண்டுகோளின்படி கடவுள் கருணைசெய்த விரைவை விளக்குவார், 'என்ற வுரை முடிவதன்முன் ஈந்தான்' என்றார். சிவபிரானுக்கு நீறு, தரிக்கப்படும் பொருள்; ஏறு, வாகனம். (211) 8.-பின்பு பூதம்அசுவத்தாமனுக்குத் தோற்றல். பாதிமெய்நீலமாகியபவளப்பருப்பதம்விருப்புடனளித்த ஏதிபெற்றுவகையுடனிமைப்பளவினிருந்தவவ்வீரருந்தானும் வீதிகொள்பாடிவீடுறப்பூதமீளவந்தடர்த்திவன்கரத்தில் ஆதிநல்கியவெம்படையினாலஞ்சியாவிகொண்டோடியதன்றே. |
|