பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்171

மேல் -பகைவனான அந்த அசுவத்தாமன்மேல், எழுந்தான் - (போர்
செய்யப்)புறப்பட்டான்; (எ - று.) - மற்று - வினைமாற்று.

     இப்படிஒருசோழன் பதினெட்டுநாட்போரிலும் இறவாமல்
பாண்டவர்க்குஉதவிசெய்த சிறப்பை "தாங்கள் பாரதமுடிப்பளவு நின்று
தருமன் தன்கடற்படைதனக் குதவிசெய்த வவனும்" என்று
கலிங்கத்துப்பரணியில்இராசபாரம்பரியத்துக் கூறியமைகொண்டும் உணர்க. 
இச்சோழன்அசுவத்தாமனை முன்பு வென்றிட்டதை இச்சருக்கத்தின் 95 -
ஆங்கவியிற்காண்க.  'திரௌபதீயர்' என்றுசிலர்.  'புரவியந்தாமா' அம் -
சாரியையென்னலாம்.                                         (218)

15.-சோழன் பரிவாரத்தோடுஅசுவத்தாமனால் இறத்தல்.

பொன்னிநன்னதியுநேரியம்பொருப்பும்புகாரெனுநகரியும்படைத்த,
சென்னியுமவன்றன்சேனையின்விதமுஞ்சேனைமண்டலீகருஞ்சேர,
முன்னியசமரின்முனிமகனுடன்போய் மோதியவேதியான்மடிந்தார்,
பின்னியசடையோன்வழங்கியபடைமுன் பிழைத்தவர்யாவரே
                                         பிழைத்தார்.

     (இ -ள்.) பொன்னி நல்நதியும் - சிறந்த காவேரி நதியையும், நேரி
அம்பொருப்பும் - நேரியென்னும் அழகிய மலையையும், புகார் எனும்
நகரியும்- காவிரிப்பூம்பட்டினமென்ற நகரத்தையும், படைத்த - தனக்கு
உரியனவாகக்கொண்ட, சென்னியும் - சோழனும், அவன் தன் சேனையின்
விதமும் -அவனுடைய சேனையின் வகைகளும், சேனை மண்டலீகரும் -
அச்சேனையிலுள்ள மண்டலாதிபதிகளான அரசர்களும், சேர - ஒருசேர,
முன்னிய சமரின் முனி மகனுடன் போய் - (யாவரும்) கருதிக் கொண்டாடுகிற
போரில் துரோணாசாரியனது புத்திரனான அசுவத்தாமனோடு  (போர்செய்யச்)
சென்று, மோதிய ஏதியால் மடிந்தார் - அவன் தாக்கிய ஆயுதத்தினால்
இறந்தார்கள்; பின்னிய சடையோன் வழங்கிய படைமுன் - திரித்துவிட்ட
சடையையுடைய சிவபிரான் கொடுத்த அந்த ஆயுதத்திற்கு முன், பிழைத்தவர்
யாவரே பிழைத்தார் - (முன்பு போரில்) உய்ந்த வீரருள் எவர்தாம்
தப்பிப்பிழைத்தவர்? [எவருமிலர் என்றபடி]; (எ - று.)

    பதினெட்டுநாட்போர்களிலும் தமது திறமையாற் பகைவென்று தாம்
இறவாது உயிர்வாழ்ந்தவீரர் யாவரும் அழித்தல்தொழிற்கடவுளான சிவபிரான்
தந்த ஆயுதத்தால் இறந்தொழிந்தார்கள் என்ற பொதுப்பொருளைக்கொண்டு
சோழனும் அவன் சேனையோரும் அசுவத்தாமனால்
கொல்லப்பட்டார்களென்றசிறப்புப்பொருளைச்சாதித்தலால்,
வேற்றுப்பொருள்வைப்பணி. பொன்னைக்கொழித்துக் கொண்டு
வருதலால், காவேரிக்குப் 'பொன்னி' என்று பெயர்.சென்னி - தலை;
உத்தமாங்கமாகிய தலைபோல யாவரினுஞ் சிறப்பவனென்ற
பொருளால், சோழனுக்குச் சென்னியென்று பெயர்.  சென்னியும்,
சேனையின்விதமும், மண்டலீகரும் மடிந்தார் - சிறப்பினாலும் மிகுதியாலும்
உயர்திணைமுடிபை யேற்ற திணைவழுவமைதி; 'முன்னியசிலைக்கை'
என்றும்பாடம்.                                            (219)