பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்173

நின்றுள்ளகிருபனையும் கிருதனையுங்கூட அழைத்துக்கொண்டு, தெள்ளிய
குமரர் சென்னி ஐந்தினையும் - தெளிவுள்ள பாண்டவகுமாரர்களுடைய
தலைகளைந்தையும், தேவரும் திகைத்திட தூக்கி - தேவர்களுங் கண்டு
பிரமிக்கும்படி (கைகளால்) தூக்கிக்கொண்டு, வெள்ளி அம் குரு வந்து
எழுமுனே - அழகிய (அசுர) குருவான சுக்கிரன் வந்து உதிக்கும் முன்னே
[இரவில் நடுப்பொழுதிலேயே], குருவின் மிகு குலம் வேந்தை -
குருவென்னும் அரசனது சிறப்பு மிக்க குலத்திலே பிறந்த துரியோதனராசனை,
வந்து அடைந்தான் - வந்து சேர்ந்தான்; (எ - று.)

    அசுவத்தாமன் தான் பாண்டவர் தலைகளைக் கொய்திட்டதாகக்
கருதிக்களிப்புறுந்தன்மை விளங்க, 'உள்ளியபடியே கடுஞ்சினங்கன்றியுள்ளவர்
யாரையும் முருக்கித் துள்ளியவிடைபோற் செருக்கி' என்றார்.
வெண்ணிறமுடைமையால், சுக்கிரனுக்கு வெள்ளி யென்று பெயர்.  கிழக்கில்
சுக்கிரனது தோற்றம் இரவின் இறுதிப்பாகத்திலே உளதாவது.    (221)

வேறு.

18.-அசுவத்தாமன் தனதுதிறமையைக் கூறுதல்.

வந்த னேனைய மாதவ னேவலான்
முந்து பூத முதுகிட மாமுடி
சிந்த யாரையுஞ் செற்றகன்பாசறை
ஐந்து வீரர்தம் மாவியுங்கொண்டரோ.

     (இ -ள்.) ஐய - தலைவனே! மாதவன் ஏவலால் - கண்ணனுடைய
கட்டளையால், முந்து - முற்பட்டுப் போருக்கு வந்த, பூதம் - பூதமானது,
முதுகு இட - புறங்கொடுக்கும்படி (செய்து), அகல் பாசறை -
பரந்தபடைவீட்டினுள்ளே, மா முடி சிந்த - பெரிய தலைகள் சிதறும்படி,
யாரையும் செற்று - யாவரையுங் கொன்று, ஐந்து வீரர்தம் ஆவியும்
கொண்டு -பஞ்சபாண்டவர்களது உயிர்களையுங் கவர்ந்து கொண்டு,
வந்தனேன் - இதோவந்து சேர்ந்திட்டேன், (நான்); (எ - று.)-அரோ -
ஈற்றசை; தேற்றமுமாம்.

    இங்ஙனம் தான் துரியோதனன் முன்னிலையிற் சபதஞ் செய்தபடி
அவனது தொன்றுதொட்ட பகைவர்களை வேரறத் தொலைத்து வந்த
களிப்பைஅசுவத்தாமன் அவனெதிரிற் கூறி அவனுக்கு மகிழ்ச்சியை
விளைப்பவனானான்.  வந்தனேன். அன் - சாரியை.

    இதுமுதற் பதின்மூன்று கவிகள் பெரும்பாலும்
முதற்சீரொன்றுமாச்சீரும்,மற்றைமூன்றும் கூவிளச்சீர்களுமாகிய
அளவடிநான்குகொண்டகலிவிருத்தங்கள்.                   (222)

19.-அசுவத்தாமன்தான்கொணர்ந்த தலைகளைத்
துரியோதனனுக்குக் காட்டல்.

சொன்ன சிங்கத் துவசனை யாதியா
மன்ன ரைவரு மாண்டனர்மற்றவர்