பக்கம் எண் :

182பாரதம்சௌப்திக பருவம்

    குருபதிதன்வாய்மை - 224 -ஆங் கவிமுதல் ஆறு கவிகளிற் கூறியவை.
அக்கினியிற் பிரிவு, இடவேற்றுமையாலும் மந்திரபேதத்தாலும் தொழில்
வகையாலும் நிகழ்வதென்க.  மிக்க பரிசுத்தியுடையவனான வியாசன்
ஒப்புயர்வற்ற திவ்வியவொளியையுடையவனாயிருத்தலால், அத்தன்மையை
விளக்குதற்கு, மூவகையக்கினிகளும் ஒரு வடிவாய்ப்பிறந்தாற்
போன்றவனென்றார்.  வியாஸன் - (பலவாறாகக் கலந்து கிடந்த வேதங்களை
இருக்கு முதலிய நான்குவகையாக) வகுத்தவனென்று காரணப்பொருள்படும்;
வ்யஸ் - பிரித்தல்.  தம் செயல் - பகைவர் பலரைத்
தூங்குகையிற்கொன்றமைமுதலியன.                           (237)

34.-வியாசன் மூவருக்கும்விடை கொடுத்து அனுப்புதல்.

புரிதவத்திற்கானவனங்கிருபனுக்குந்துரோணமுனிபுதல்வனான,
துரகததாமனுக்குமமைத்திவ்வுழி நீரிருத்திரெனச் சொன்ன
                                        பின்னர்க்,
கிருதனுக்குவிடைகொடுத்தானிவருமவன்மொழிப்படியே,
                                    கிரிசூழ்கானில்,
தருநிலத்தோரதிசயிப்பச் சிவபெருமான் றனைநினைந்து
                                   தவஞ்செய்தாரே.

     (இ -ள்.) (வேதவியாச மகாமுனிவன்), கிருபனுக்கும் -
கிருபாசாரியனுக்கும், துரோணமுனி புதல்வன் ஆன துரகததாமனுக்கும் -
துரோணாசாரியனது புத்திரனான அசுவத்தாமனுக்கும், புரி தவத்திற்கு ஆன
வனம் - தவஞ்செய்வதற்குத் தக்கதான அரணியத்தை, அமைத்து -
(இன்னதென்று) நியமித்து, இ உழி நீர் இருத்திர் என சொன்ன பின்னர் -
இவ்விடத்தில் நீங்கள் (தவஞ்செய்து கொண்டு) இருப்பீர்களென்று சொன்ன
பின்பு, கிருதனுக்கு விடைகொடுத்தான் - கிருதவர்மாவுக்கு (த்தன்ஊர்க்குச்
செல்லும்படி) அனுமதி கொடுத்தனுப்பினான்; இவரும் - (கிருபன்
அசுவத்தாமன் என்ற) இவ்விருவரும், அவன் மொழி படியே -
அம்முனிவனதுசொல்லின்படியே, கிரிசூழ் கானில் - மலை சூழ்ந்த காட்டில்,
தரு நிலத்தோர்அதிசயிப்ப - (கற்பக) விருட்சங்களையுடைய இடமான
சுவர்க்கலோகத்திலுள்ளதேவர்கள் ஆச்சரியப்படும்படி, சிவபெருமான்தனை
நினைந்து தவம் செய்தார்- சிவபிரானைத் தியானித்துத் தவஞ்
செய்பவரானார்கள்; (எ - று.)

    'கிரிசூழ்கான்' என்ற தொடர் - மலையைச்சூழ்ந்த காடென்றும்,
மலையாற்சூழப்பட்ட காடென்றும் இருவகையாகப் பொருள்படும்.     (238)

35.-திருதராட்டிரனுக்கும்காந்தாரிக்கும் சஞ்சயன்
செய்திகூறல்.

நாடியசொற்சுருதிநிகழ்நாவினான்சஞ்சயனு நள்ளென்கங்குல்,
ஓடியொளித்திடு கதிரோனுதிப்பதன்முன்விலோசனநீருகுப்பவெய்தி,
ஆடிமுகத்தரசினுக்குமையிருபதரசரையுமளித்துவாழ்ந்து,
வாடியமெய்ச்சவுபலைக்குமுற்றதெல்லாம் வாய்மலர்ந்தான்
                                      வாய்மைவல்லான்.

     (இ -ள்.) நாடிய சொல் - ஆராய்ந்து அறியத்தக்க சொற்களையுடைய,
சுருதி - வேதங்கள், நிகழ் - பொருந்திய, நாவினான் - நாக்கையுடையவனும்,
வாய்மை வல்லான் - உண்மையையே பேசுபவனும்