னென்பதாம். பரசுராமனும் சுப்பிரமணியனும் பரமசிவனிடம் வில் முதலிய ஆயுதப் பயிற்சியைச் செய்துமுடித்தபின்பு இவர்களுள் உயர்வு தாழ்வு அறியும்பொருட்டுச் சிவபிரான் உமாதேவியின் முன்னிலையிலே இவர்களுக்குக் கிரௌஞ்சமலையைச் சுட்டிக்காட்டி, 'இதனிடத்து உங்கள் படைக்கலத்திறத்தைக்காட்டும்' என்று நியமிக்க, பரசுராமபிரான் அம்பெய்து அதனைத் துளையிட்டுத் தனது விற்றிறத்தைக்காட்ட, முருகக்கடவுள் வேலாயுதத்தை வீசி அம்மலையைப்பிளந்து தனது வேற்றிறத்தைக் காட்டின னென்றும் கதை கூறப்படும். (246) 43. | என்றுபினுமபாண்டவியமெனும்படையுந் துரந்தான் மற்றெவரேகாப்பார், அன்றுநுமதுயிரைந்துமளிப்பனெனும் வாய்மையினா லகன்றேனின்னும், வென்றியுமதுழியடையிற்சொல்வன்யான் விடு மினெனமின்னனாளைத், துன்றிவிதியினையெவரே வெல்பவரென்றெடுத் தருளிச்சூழ்ச்சிவல்லான். |
(இ -ள்.) சூழ்ச்சி வல்லான் - தந்திரங்களில் வல்லவனான கண்ணன், என்று - என்று சொல்லி, பினும் - மற்றும், அபாண்டவியம் எனும் படையும்துரந்தால் - அபாண்டவமென்ற அஸ்திரத்தையும் (அசுவத்தாமன்) எய்வானானால், காப்பார் எவரே - (அதினின்றும் உங்களைப்) பாதுகாப்பார் யாவர்? [எவருமில்லை யென்றபடி]; அன்று - அந்நாளில் [முற்காலத்தில்], நுமது உயிர் ஐந்தும் அளிப்பன் எனும் - 'உங்கள் ஐந்துபேருடைய உயிரையும்பாதுகாப்பேன்' என்று வாக்குத்தத்தஞ்செய்த, வாய்மையினால் உண்மைமொழியின்படி, அகன்றேன் - (உங்களைப் பாதுகாக்கும்பொருட்டு நேற்றிரவு உங்களை அழைத்துக் கொண்டு) பிறிதிடஞ் சென்றேன்; இன்னும்- இன்னமும், வென்றி - வெற்றி, உமது உழி அடையின் - உங்களிடத்து நிலையாகச் சேர்ந்திட்டால், சொல்வன் யான் -(அப்பொழுதே) நான் நம்பிக்கையாகச் சொல்வேன்; (இங்ஙனமாதலால்), விடுமின் (அசுவத்தாமனைத்) தொடராமல் விட்டிடுங்கள்,' என - என்றும் சொல்லி, மின் அனாளை துன்றி- மின்னல் போல மெல்லியளாய் விளங்குகின்றவளான திரௌபதியையடைந்து, விதியினை வெல்பவர் எவரே என்று - 'விதியை வெல்வார் யார் உளர்? [எவருமில்லை]' என்று சொல்லி, எடுத்து அருளி - (கீழ் விழுந்து புரளுகிற அத் திரௌபதியைக்) கருணையோடு எடுத்து, (எ - று.)-'எனத்துயரந்தவிர்த்து' என அடுத்த கவியோடுதொடரும். இனிநீங்கள் அசுவத்தாமனை எதிர்த்துப் போர்செய்வீரானால் அப்பொழுது அவன் உங்கள்மேல் அபாண்டவாஸ்திரத்தைச்செலுத்தினால் அதனைத் தடுத்து உங்களைக் காத்தல் அரிதாதலின், அது உங்களைத் தவறாமல் அழித்திடக் கூடு மென்றும், உங்களை நான் பாதுகாப்பதாக முந்திக்கூறியுள்ளபடி தந்திரமாக வேற்றிடத்திற்கு அழைத்துக்கொண்டுபோய் வைத்துக்கொண்டிருந்ததாலன்றோ நீங்கள் ஐவர் மாத்திரமேனும் உயிர்பிழைத்தீர்கள் என்றும், நீங்கள் இப்பொழுது வெற்றியடைந்திட்டதாகச் செருக்குக்கொள்ள வேண்டா; அவவெற்றி அசுவத்தாமனையெதிர்ப்பின் ஒழியினுமொழியு மென்றும் நயபயங்களாகத் தந்திரவார்த்தைகள் கூறிக்கண்ணன் பாண்டவரைச் சமாதானப்படுத்தின னென்பதாம். |