காரணப்பொருள்படும். பெருஞ்சேனை - பெருமையையுடைய சேனை; அதிகமான சேனையெனின், பதினைந்தாஞ் செய்யுளில் 'சிலபடை' என்றதோடு மாறுகொளக்கூறலாம். ஜலநிதி - நீர்நிறையுமிடம். பதாகா - கொடி; அதனையுடையது, பதாகிநீ. 'கேட்டு' என்பதை, கேட்கவென, எச்சத்திரிபாக்கி 'நின்றான்' என்பதனோடு முடிக்க. இதுமுதற்பதின்மூன்று கவிகள் - பெரும்பாலும் முதற்சீரும் ஈற்றுச்சீரும் மாச்சீர்களும், மற்றையைந்தும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்குகொண்ட எழுசீராசிரிய விருத்தங்கள். (20) 21.-சல்லியன் தருமன்மேற்போருக்கு வருதல். ஆயபோதினிற் குருபதிபதாகினிக்கதிபதியாய பூபதியம், மாயவன் புகன் மொழிப்படி தருமன் மாமதலைமேல் விரைவுடன் வந்தான், காயும் வெங்கனற் கண்ணினன் செவியுறக் கார்முகங்குனித்த செங்கரத்தான், தீயவாகிய சிலீமுகமுரனுறச்சொரிதருசிங்கவேறனையான். |
(இ -ள்.) ஆய போதினில் - இவ்வாறான அச்சமயத்தில், - குருபதி பதாகினிக்கு அதிபதி ஆய பூபதி - குருகுலத்துக்குத் தலைவனான துரியோதனனது சேனைக்குத் தலைவனாகிய சல்லியராசன்,-காயும் - கொதிக்கிற, வெம் - கொடிய, கனல் - நெருப்பைச்சொரிகிற, கண்ணினன் - கண்களையுடையவனும், செவி உற - தன்காதினை யளாவ, கார்முகம் குனித்த -வில்லை வளைத்து நாணியையிழுத்த, செம் கரத்தான் - சிவந்த கையையுடையவனும், தீய ஆகிய - கொடியவையான, சிலீமுகம் - அம்புகளை, உரன் உற - வலிமை பொருந்த, சொரிதரு - மிகுதியாக எய்கிற, சிங்கம் ஏறு அனையான் - ஆண்சிங்கம்போன்றவனுமாய்,- அ மாயவன் புகல் மொழிப்படி தருமன் மா மதலை மேல் விரைவுடன் வந்தான் - கண்ணன் கீழ்ச்சொன்ன வார்த்தையின்படியே சிறந்த தருமபுத்திரன்மேல் துரிதமாக வந்தான்; (எ - று.) பூபதி- பூமிக்குத் தலைவன். கார்முகம் என்றது - தொழிலிற் சிறந்த தென்றும் [கர்மம் - தொழில்], சிலீமுகம் என்றது - கூர்மையை நுனியிலுடையதென்றும் [சிலீ - கூர்மை] காரணப்பொருள்படும். வீரனுக்கு ஆண்சிங்கம் - பலபராக்கிரமங்களாலும், நடையாலும், உவமம். தற்காலத்தில் குருநாட்டையாள்பவன் துரியோதனனாதலால், குருபதி யெனப்பட்டான்.(21) 22.-தருமன் சல்லியனை யெதிர்த்துப்போர்தொடங்கல். எதிரிதேர்வரும் வன்மைகண்டிமிழ்முரசெழுதிய கொடி நராதிபனுங், கதிரினேழ்பரிதேரினுங் கடியதன் கவனமான் றேரெதிர்கடவி, முதிரமேல் வருங்கணைகளைக்கணைகளான்முனைகொடுமுனை கொள்கார் விசும்பிற், பிதிர்படும்படிதொடுத்தனன் றொடித்தடக்கையினிற் பிடித்தவிற்குனித்தே. |
(இ -ள்.) எதிரி தேர்வரும் வன்மை கண்டு - (தன்னை) எதிர்ப்பவனானசல்லியனது தேர் வருகிற வலிமையைப் பார்த்து,-இமிழ் |