24.-இருவரும் சங்கநாதஞ்செய்தல். தன்பெருந்தனிச் சங்கினை முழக்கினன் றருமன்மாமதலை வெம்போரில், வன்பெரும்பணைச் சங்கினை முழக்கினன் மத்திராதிபன்றிரு மகனும், நன்பெருந்துளைச் சங்குகளெழுப்பிய நாதம் வான் முகடுற நண்ணி, மின்பெரும்புய லேழுமொத் ததிர்தலின் மிகுகுரற்றனிதமொத்துளதே. |
(இ - ள்.) தருமன் மா மதலை - யமனது சிறந்த குமாரனான யுதிட்டிரன், வெம்போரில் - கொடிய யுத்தத்தில், தன் பெரு தனி சங்கினை- தனது பெரிய ஒப்பில்லாத சங்கத்தை, முழக்கினன் - (வாயில்வைத்துஊதி) ஒலிப்பித்தான்; மத்திர அதிபன்திருமகனும் - மத்திரதேசத்தரசனது சிறந்த புத்திரனான சல்லியனும், வல் பெருபணை சங்கினை - (தன்னுடைய) வலிய பெருமையுள்ள பருத்த சங்கத்தை, முழக்கினன் - ஒலிப்பித்தான்; (இவ்வாறு), நல் பெரு துளை சங்குகள் - அழகிய பெரிய உள்துளையுள்ள சங்கங்கள், எழுப்பிய - உண்டாக்கின, நாதம் - ஓசை, வான் முகடு உற - ஆகாயத்தின் மேலிடத்தை யளாவ, நண்ணி - சேர்ந்து, மின் பெரு புயல் ஏழும் ஒத்து அதிர்தலின் மிகு குரல் தனிதம் ஒத்து உளது - மின்னுகிற பெரிய எழுவகை மேகங்களும் ஒருமித்து ஆரவாரித்தலால் மிக்க முழக்கத்தையுடைய இடியைப் போன்றுள்ளது; (எ - று.) கற்பாந்தகாலத்தில்ஏழுமேகங்களும் ஒருங்கேயெழுந்து ஒலிக்கிற இடியின் முழக்கத்தைப் போன்றது, தருமன் சல்லியன் என்ற அவர்கள் செய்த சங்கநாத மென்பதாம்: உவமையணி. வெற்றிக்கு அறிகுறியாகவும், போரில் உற்சாகம் நிகழ்தற்பொருட்டும், சங்கத்தொனிசெய்தல், இயல்பு. புயல்ஏழ் - சம்வர்த்தம், ஆவர்த்தம், புஷ்கலாவர்த்தம், சங்கிருதம், துரோணம், காளமுகி, நீலவர்ணம் என்பன. (24) 25.-இருவரும் விற்போர்செய்தல். வில்லெடுத்தனர் வலியுடை நிலையினர்வீக்கு நாண்விரல்களிற் றெறித்து, மல்லெடுத்ததோள்வலனுற வளைத்தனர் வடிக்கணைமுனையுற வடைசிச், செல்லெடுத்த பேரிடியென முறைமுறைதொடுத்தனர்தேர்களுஞ் செலுத்திக், கல்லெடுத்தெதிர் மலைந்தவாலியுமணிக் கழுத்துடை யவனுமேயனையார். |
(இ -ள்.) கல் எடுத்து - மலைகளைக் கையில் ஏந்திக்கொண்டு, எதிர் மலைந்த - (ஒருவரோடு ஒருவர்) எதிர்த்துப் போர்செய்த, வாலியும் மணி கழுத்து உடையவன்உம் ஏ - வாலிசுக்கிரீவர்களையே, அனையார் - ஒத்தவராகிய தருமனும் சல்லியனும்,- தேர்களும் செலுத்தி - (தங்கள்) தேர்களை (ஒன்றோடு ஒன்று நெருங்கச்) செலுத்திக்கொண்டு, வில் எடுத்தனர் - (கையில்) வில்லை யேந்தியவர்களாய், வலி உடை நிலையினர் - வலிமையுள்ள (விற்போர்க்குஉரிய) நிற்கும் நிலையையுடையவர்களாய், மல் எடுத்ததோள் வலன் உற வளைத்தனர் - பலம்மிக்க தோள்களின் வலிமை பொருந்த வில்லை வளைத்தவர்களாய், வீக்கும் நாண் - (வில்லிலே) பூட்டிய நாணியை, விரல் |