பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்3

லாந் தெரிவித்தருளினான். பின்பு, பாண்டவர் ஏழு அகௌகிணி
சேனையையும், கௌரவர் பதினொரு அகௌகிணிசேனையையுந்
திரட்டிக்கொண்டு, இருதிறத்தவரும் குருக்ஷேத்திரத்தில்வந்து எதிர்த்து
உக்கிரமாகப் பெரும்போர் செய்யத் தொடங்கினார்கள்.

     அப்பொழுதுபாண்டவர்பக்கத்தில் முதற்சேனாபதியாய் நின்ற
விராடகுமாரனானசுவேதன்முதல்நாட்போரிலேயே இறந்திட, அதன்பின்
இரண்டாநாள்முதல் துருபதகுமாரனான த்ருஷ்டத்யும்நன்சேனாபதியாக
நியமிக்கப்பட்டான்.  [இவன், பதினெட்டுநாட்போரும் முடியுமளவும் இறவாது
நிற்பன்.] எதிர்ப்பக்கத்துச் சேனைக்கு முதற் பத்துநாள் வரையில் பீஷ்மன்
சேனைத்தலைவனாயிருந்து போர் நடத்திப் பத்தாநாட்போரில் சிகண்டி
முன்னாகஅருச்சுனனெய்த அம்புமழையால் வலியழிந்து ஒடுங்கினபின்
துரியோதனன்துரோணனைச் சேனாபதியாக்கினான்.  பின்பு துரோணன்
ஐந்துநாள்கௌரவசேனாபதியாயிருந்து பதினைந்தாநாட் போரில்
த்ருஷ்டத்யும்நன்கையம்பால் மாண்டான்.  அதன்பின் சேனைத்தலைவனாக
வந்த கர்ணன் பதினேழாநாளில் அருச்சுனனாற் கொல்லப்பட்டான்.

1.-தெய்வவணக்கம்:தசாவதாரஸ்துதி.

மீனாமைகோலநெடு நரசிங்க மாகிநிலம் விரகால ளந்த குறளாய்
ஆனாதுசீறுமழு வல்வில்லு வெல்லுமுனை யலமுற்ற
                                      செங்கையவராய்
வானாடர்வந்துதொழ மண்ணாடர் யாவரையு மடிவிக்க வந்த
                                           வடிவாய்
நானாவிதங்கொள்பரி யாளாகி நின்றருளு நாராய ணாய நமவே.

     இது-காப்புச்செய்யுள்; இதனால், தாம் எடுத்துக்கொண்ட சருக்கம்
இடையூறில்லாமல் இனிது முடியும்பொருட்டு உயர்ந்தோர் வழக்கத்தின்படியே
கவி கடவுள்வாழ்த்துக் கூறுகிறார்.  கடவுள் வணக்கம், வழிபடுகடவுள்
வணக்கமென்றும், ஏற்புடைக்கடவுள் வணக்கமென்றும், இரண்டு
வகைப்படும்;  இவ்வாழ்த்து தமக்கு வழிபடுகடவுளும், எடுத்துக்கொண்ட
இதிகாசத்துக்கு ஏற்புடைக் கடவுளுமாகிய திருமாலைப் பற்றியதென அறிக.
கண்ணபிரான் இந்நூலுக்கு ஏற்புடைக்கடவுள் என்பது - இந்நூலாசிரியர்
தற்சிறப்புப் பாயிரத்தில் "முன்னுமாமறைமுனிவருந் தேவரும் பிறரும்,
பன்னுமாமொழிப் பாரதப்பெருமையும்பாரேன், மன்னுமாதவன்
சரிதமுமிடையிடை வழங்கு, மென்னுமாசையால் யானுமீதியம்புதற்கிசைந்தேன்"
எனக்கூறியதனாற் பெறப்படும்.

     (இதன்பொருள்.)மீன் - மீனும், ஆமை - ஆமையும், கோலம் -
பன்றியும், நெடு - பெரிய, நரசிங்கம் - மனிதவடிவங்கலந்த சிங்கமும், ஆகி -
(என்னும் இவற்றின்) வடிவமாய், நிலம் - உலகத்தை, விரகால் - தந்திரத்தால்,
அளந்த - அளவிட்ட, குறள் ஆய் - குறுகிய வடிவமாய், ஆனாது -
தணிவடையாமல், சீறும் - மேனமேற்கோபிக்கிற, மழு - கோடாலியும்,
வல்வில்லு - வலியவில்லும், வெல்லும் முனை அலம் - பகை வெல்லுதற்குரிய
கூர்நுனியையுடைய கலப்பையும் உற்ற - (என்னும் இவை முறையே)
பொருந்தின, செம் கையவர்