(ஒருவர்மே லொருவர்) பிரயோகித்தார்கள்; முந்த முந்த - ஒருவரினும் ஒருவர்முற்பட, மற்று உள்ள ஆயுதங்களும் - (அம்பு தவிர) மற்றுமுள்ள ஆயுதங்களையும், முடிமுதல் அடி அளவு ஆக - தலைமுதற் கால்வரையிலும், உந்த உந்த - மிகுதியாகத் தாக்கவும், (அதனால்) வெம்குருதிஉம் மூளைஉம் உக உக - வெவ்விய இரத்தமும் மூளையும் மிகுதியாகச் சிந்தவும், உரவோர் - வலிமையுடைய அவ்விருவரும், உடற்றினார் - உபயோகித்துப் போர்செய்தார்கள்; (எ - று.) இமையவர் - இமையில் (மூடாமையாகிய) விசேஷமுடையவர், முடி - மயிர் முடியப்படுவதெனக் காரணப்பெயர். (30) 31.- வீமன் கலங்கிக் கதையுடன் தேரினின்று இறங்கல். மத்திரப்பெயர்ச் சிங்கவேறனையவன் வன்கை வான்படைகளின் மயங்கிப், பத்திரப்பெயர்ப்பருத்தகைச்சிறுத்தகட்பாய்மதப்பரூஉப்பகடனையான், சித்திரக்கதிர்மணிமுடிப் பீடிகைத் திண்டிறற்றிகிரியந்தேர்நின்று, அத்திரத்தைவிட் டொருதனிக்கதையுடனதிர்ந்து போயவனியிலானான். |
(இ - ள்.) பத்திரம் பெயர் - பத்திரமென்ற பெயரையும், பருத்த கை - பருத்த துதிக்கையையும், சிறுத்த கண் - சிறிய கண்களையும், பாய் மதம் - மிக்குவழிகிற மதநீரையுமுடைய, பரூஉ பகடு - பருத்த ஆண்யானையை, அனையான் - ஒத்தவனான வீமன், மத்திரன் பெயர் சிங்கம் ஏறு அனையவன் - மத்திரராசனென்னும் பெயரையுடைய ஆண்சிங்கத்தைப் போன்ற வீரனது, வல் கை - வலிய கையால் வீசப்பட்ட, வான்படைகளின் - சிறந்த ஆயுதங்களால், மயங்கி - சிறிது மனந்தடுமாறி,- அத்திரத்தை விட்டு - அஸ்திரங்களைக்கொண்டு போர்செய்தலையொழிந்து, ஒரு தனிகதையுடன் - ஒப்பற்ற தனது (சத்துருகாதிநியென்ற) ஒருகதாயுதத்துடனே,- சித்திரம்-ஆச்சரியகரமான, கதிர் - ஒளியையுடைய, மணி - இரத்தினங்களைப்பதித்த, முடி - சிகரத்தையும், பீடிகை - அடிப்பீடத்தையும், திண் திறல் திகிரி - மிக்க வலிமையுடைய சக்கரங்களையுமுடைய, அம் தேர்நின்று - அழகிய (தனது) தேரினின்று, அதிர்ந்துபோய் அவனியில் ஆனான் - கர்ச்சித்துக்கொண்டு நிலத்தில் இறங்கிச்சென்றான்; (எ - று.) சல்லியனோடு அம்புகளைக்கொண்டு போர்செய்து வெல்லமுடியாதென்று வீமன் உடனே தனக்குஉரிய கதாயுதத்துடன் தேரினின்று தரையில் இழிந்தனனென்பதாம். கீழ்ப்பதினேழாங் கவியிற் கூறியபடி மிக வலிய வீமனினும் மேம்பட்டவன் சல்லியனென்பது இங்கு விளங்குதலால் வீமனுக்கு யானையையும், சல்லியனுக்குச் சிங்கத்தையும் உவமைகூறினார். பத்திரம் என்பது - மூவகையானையுள் முதலதாய்ச் சிறந்தது: இதன் இலக்கணம் - தேனின் நிறம்போன்ற நிறமுள்ள தந்தமும், மிக்க வலிமையும், ஒத்த அவயவமும், வட்டமான வடிவமும், அழகியமுகமும், அவயவச்சிறப்பும், ஏழுமுழம் உயரமும் எட்டுமுழ நீளமும், பத்துமுழ வயிற்றுச் சுற்றளவும், பசுமையான மதநீரும் உடையதாமென்று யானைநூல் கூறும். பரூஉப்பகடு = பருப்பகடு; குற்றெழுத்தளபெடை. சித்திரக்கதிர்மணியென்றது, பீடிகைக்கும் அடைமொழி. பீடிகை - ஆசனம். (31) |