பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்33

32.-வீமன்கதைகொண்டுதாக்கச் சல்லியன் தோமரத்தால்
மோதுதல்.

பகைவனேறிய தேர்விடும் வலவனுந் திகிரியும் பாய்பரி மாவும்,
புகையெழும்படி யிமைத்தகண் விழிக்குமுன் பொடியெழ விடியெனப்
                                             புடைப்ப,
வகைகொடார்முடி மத்திரத் தலைவனு மாமறத்தோமரப்படையான், மிகைகொள் வன்றிறல்வீமனை நெற்றியி லெற்றினன்வெற்றி
                                         கூர்ந்திடவே.

     (இ -ள்.) பகைவன் ஏறிய - எதிரியான சல்லியன் ஏறியுள்ள, தேர் -
தேரை, விடும் - செலுத்துகிற, வலவனும், - பாகனும், திகிரியும்-தேர்ச்
சக்கரங்களும், பாய் பரிமாவும் - பாய்ந்துசெல்லும்தன்மையுள்ள
தேர்க்குதிரைகளும், பொடி எழ - பொடியாய்ச் சிதறும்படி, (வீமன்), இமைத்த
கண் விழிக்கும் முன் - ஒருமாத்திரைப்பொழுதினுள், இடி என - இடிபோல,
புகை எழும்படி - புகை கிளம்பும்படி, புடைப்ப - (கதாயுதத்தால்) தாக்க,-
வகை கொள் தார் முடி மத்திரம் தலைவனும் - அழகுகொண்ட
போர்மாலையைச் சூடிய முடியையுடைய சல்லியனும், மா மறம் தோமரம்
படையால் - மிக்கவலிமையையுடைய தோமரமென்னும் ஆயுதத்தால், மிகை
கொள் வல் திறல் வீமனை - மிகுதியாகக்கொண்ட கொடிய
வலிமையையுடைய வீமசேனனை, வெற்றி கூர்ந்திட - (தனக்குச்)
சயம்மிகும்படி, நெற்றியில்எற்றினன் - நெற்றியில் தாக்கினான்; (எ - று.)

    தோமரம் - இருப்புலக்கை; கைவேலுக்கும், பேரீட்டிக்கும் இப்பெயர்
உண்டு.  இமைத்தகண் விழிக்குமுன் - ஒருகால் மூடிய கண்ணைத்
திறக்குமளவுக்குமுன்.  தார் - இங்கே, தும்பைப் பூமாலை.         (32)

வேறு.

33.-வீமன் வலியழிதலும்,இருசேனையும் பொருதலும்.

தோமரந் தன்னால் வாயு சுதனமரழிந்த போதில்
ஏமரு வரிவிற் றானையிருபெருஞ் சேனை யோரும்
மாமரு தடந்தேர் வாசிமத்தவா ரணங்க ளூர்ந்து
தீமரு கான மென்னத்தனித்தனி செருச்செய் தாரே.

     (இ -ள்.) தோமரந்தன்னால் - (சல்லியனது) தோமராயுதத்தால்,
வாயுசுதன் - வாயுகுமாரனான வீமன், அமர் அழிந்த போதில் - போரில்
வலிமையொழிந்த பொழுது, ஏ மரு வரிவில் தானை - அம்புகள் பொருந்திய
கட்டமைந்த விற்படையையுடைய, இரு பெரு சேனையோரும் - இரண்டு
பக்கத்துப் பெரிய சேனைவீரர்களும், மா மரு தடதேர் - குதிரைகள் பூண்ட
பெரிய தேர்களையும், வாசி - குதிரைகளையும், மத்த வாரணங்கள் -
மதயானைகளையும், ஊர்ந்து - செலுத்திக் கொண்டு, தீ மரு கானம் என்ன -
நெருப்புப்பற்றிய காடென்னும்படி (உக்கிரமாக), தனி தனி செரு செய்தார் -
தனித்தனியே (ஒருவரோடொருவர்) போர்செய்தார்கள்; (எ - று.)