பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்35

35.-சகுனியும்,அவன்மக்களிருவரும் நகுலனோடு பொருது
தோற்றல்.

தசையுற வளர்ந்த பொற்றோட்சகுனியுந் தனயராகி
இசையுடன் வளர்ந்தவீரரிருவரு மிரதமேலோர்
நிசையுறு மதமாவந்துநெருப்பெதிர்பட்டதென்ன
விசையன திளவலோடுசெருச்செய்து வெந்நிட்டாரே.

     (இ -ள்.) தசைஉறவளர்ந்த - சதை மிகுதியாக வளரப்பெற்ற
பொன்தோள் - அழகிய தோள்களையுடைய, சகுனியும்-, தனயர் ஆகி -
(அவனது) புத்திரர்களாய், இசையுடன் வளர்ந்த - புகழோடு வளர்ந்த, வீரர்
இருவரும் - (உலூகன் சைந்தவன் என்ற) வீரர்களிரண்டுபேரும், இரதம்
மேலோர் - தேரின் மேலேறியவர்களாய், நிசை உறு மதம் மா நெருப்பு
எதிர்வந்து பட்டது என்ன - முகபடாம் பொருந்திய மதயானைகள்
நெருப்பெதிரிலேவந்து ஒடுங்கினாற்போல, விசையனது இளவலோடு செரு
செய்து வெந்இட்டார் - அருச்சுனனது தம்பியான நகுலனுடன் போர்செய்து
முதுகிட்டார்கள்;( எ - று.)

    சகுனியின்மக்களை 'இசையுடன் வளர்ந்த வீரர்' என்றதனால், சகுனி
பழிப்புடன் வளர்ந்த போர்வீரனென்பது தொனிக்கும்.  நகுலனது ஆற்றல்
தோன்ற, 'விசையனது இளவல்' என்றார்.  விஜயன் என்ற பெயர் -
விசேஷமான வெற்றியையுடையவனென்று பொருள்படும்; தன்னைச்
சயிப்பவரெவருமில்லாதவ னென்று பொருள் கொள்ளுதலும் ஒன்று, என்ன-
உவமவுருபு.                                              (35)

36.-துரியோதனன்கேதுதரனென்ற வீரனைக்கொல்லுதல்.

புயங்கவெம்பதாகைநச்சுப்பொங்கழற் புயங்கம் போல்வான்
தயங்கு வெங்கழற்காற்கேதுதரனெனுந்தனுவலலோனை
வயங்குவெஞ்சிறகர்ப்புங்கவயங்கொள்கூர்வாளியொன்றால் 
இயங்குகவானினூடென்றிமையவனாக்கினானே.

     (இ -ள்.) புயங்கம் - பாம்பின் வடிவத்தையெழுதிய, வெம்-
பயங்கரமான,பதாகை - கொடியையுடைய, நஞ்சு பொங்கு அழல் புயங்கம்
போல்வான் -விஷத்தையும் சீறுகிற கோபத்தையுமுடைய பாம்பு
போல்பவனானதுரியோதனன்,-தயங்கு - விளங்குகிற, வெம் - (பகைவர்க்கு)
அச்சந்தருகிற,கழல் - வீரக்கழலையணிந்த, கால் - பாதத்தையுடைய,
கேதுதரன் எனும் -கேதுதரனென்கிற, தனுவலோனை - வில்லில்வல்ல
வீரனை,- வயங்கு -விளங்குகின்ற, வெம் - கொடிய, சிறகர் - இறகுள்ள,
புங்கம்-சிறந்த, வயம்கொள் - வெற்றியைக் கொண்ட, கூர் - கூர்மையுள்ள,
வாளி ஒன்றால்-ஓரம்பினால், வானினூடு இயங்குகஎன்று - சுவர்க்கலோகத்திற்
செல்வாயென்றுசொல்லி, இமையவன் ஆக்கினான் - தேவனாக்கினான்;(எ-று.)

    என்றது, போரிலிறந்து வீரசுவர்க்கமடையும்படி செய்தனனென்றபடி:
கொன்றானென்ற பொருளை வேறுவகையாற் கூறியதனால், இதுவும் -
பிறிதினவிற்சியணி. 'வானினூடு இயங்குக' என்றது தனது ஆற்றலாற் கூறிய
வீரவாதம்.