பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்39

42.- சல்லியன் மூவரையும்அம்பினால் துளைத்தல்.

மதம்படு வேழ மன்ன மத்திரராசன்றானும்
விதம்படத் திரண்டுபோர்செய் வீரர்தம்மெய்க ளெல்லாஞ்
சதம்படு பகழி யோரோர்தனுக்களி னுருவியோட
விதம்பட வெய்து நக்கானேவினுக்கிராமன் போல்வான்.

     (இ -ள்.) ஏவினுக்கு - அம்புதொடுக்குந்தொழிலில், இராமன்
போல்வான்- ஸ்ரீராமன்போலச்சிறந்தவனாகிய, மதம் படு வேழம் அன்ன
மத்திரராசன்தானும் - மதம்பிடித்தயானைபோன்ற சல்லியனும், திரண்டு
விதம் பட போர்செய் வீரர்தம் மெய்கள் எல்லாம் - (தம்மில்) ஒருங்குகூடிப்
பலவகையாகப்போர்செய்கிற மூன்றுவீரர்களுடைய உடம்புகளிலெல்லாம்,
சதம் படு பகழி -நூற்றுக்கணக்கான அம்புகளை, ஓர்ஓர் தனுக்களின் உருவி
ஓட -ஒவ்வோருடம்பிலும் துளைத்துச்செல்லும்படி, இதம் பட எய்து -
எளிமையாகப்பிரயோகித்து, நக்கான் - (அவர்கள் தளர்ச்சியை நோக்கி
இகழ்ந்து) சிரித்தான்;(எ - று.)

     வேறுதுணையில்லாமல் ஒருவனேயாய்நின்று பலருடன் ஏக காலத்தில்
அம்புதொடுத்துப் பொருது வெல்லுதல்பற்றி, சல்லியனுக்கு இராமபிரானை
உவமை கூறினார்; இராமன் அங்ஙனம் விற்றொழிலில் மிகவல்லவனாய்த்
தனியே அரக்கர்பலரை எளிதிலழித்தமை இராமாயணத்திற் பிரசித்தம். ஏவிற்கு
- உருபுமயக்கம்.  ராமனென்ற திருநாமம் - தன்னிடத்தில் யாவரும்
மனங்களித்திருக்கப்பெற்றவனென்று பொருள்படும்:  சகலசற்குணங்களும்
பொருந்தினவனென்பது கருத்து.                         (42)

43.-அதுகண்டு வீமன்சல்லியனது கொடி
முதலியவற்றை யழித்தல்.

தம்பிமார் தளர்ச்சி கண்டுசமீரணன் புதல்வன் சீறித்
தும்பைமா மாலை வேய்ந்துதொடுகணை வலிதின்வாங்கி
வெம்புபோர் மத்திரேசன்வியன்கொடி பாகுவாசி
செம்புணீர் சொரிகளத்திற் சிதறிட வறுத்து வீழ்த்தான்.

     (இ -ள்.) தம்பிமார் தளர்ச்சி கண்டு - தனது தம்பியான நகுல
சகதேவரும் கண்ணனது தம்பியான சாத்தகியும் என்னும் இவரது
தளர்ச்சியைப்பார்த்து, சமீரணன் புதல்வன் - வாயுபுத்திரனான வீமன், சீறி -
கோபித்து,தும்பை மா மாலை வேய்ந்து - (போருக்குரிய) சிறந்த தும்பைப்
பூமாலையைத்தரித்து, தொடு கணை வலிதின் வாங்கி - தொடுத்தற்குரிய
அம்புகளைவலிமையோடு பிரயோகித்து, வெம்பு போர் மத்திர ஈசன் -
உக்கிரங்கொண்டபோரையுடைய மத்திரதேசத்தரசனான சல்லியனது,
வியன்கொடி - பெரியதுவசத்தையும், பாகு - சாரதியையும், வாசி -
தேர்க்குதிரைகளையும், செம் புண்நீர்சொரி களத்தில் சிதறிட - சிவந்த
இரத்தம் பெருகுகிற போர்க்களத்திலேசிதறி விழும்படி, அறுத்து வீழ்த்தான்-
துணித்துத் தள்ளினான்;