மிக்கபோரைச் செய்யும்பொழுதில், (எ - று.) - அருச்சுனன் அசுவத்தாமனுள்ளவிடத்துச் சென்றான் என வருங் கவியோடு முடியும். துருபதன் - பாஞ்சாலதேசத்து அரசன்; திரௌபதியின் தந்தை: இவனுக்குயாகசேனனென்றும் பெயர் வழங்கும். (45) வேறு. 46.-அருச்சுனன் அசுவத்தாமனைநெருங்குதல். அறுதி யாகவின் றருஞ்சமர்முடித்துமென்றறத்தின் மைந்தனுக்கன்பால், உறுதி கூறிய பாகன்வெவ் விரைவுடனூர்ந்தவெம் பரித்தேரோன், பெறுதி யாகமா தவம்புரி சிலைமுனிபெற்றவீ ரனுக்கின்றே, இறுதி நாளென வாங்கவ னணிந்தபே ரிகலணியிடைச்சென்றான். |
(இ -ள்.) அரு சமர் - அரிய போரை, இன்று - இன்றைக்கு, அறுதி ஆக முடித்தும் - தீர முடித்துவிடுவோம், என்று -, அறத்தின் மைந்தனுக்கு- தருமபுத்திரனுக்கு அன்பால் - அன்பினால், உறுதி கூறிய - துணிவு சொன்ன, பாகன் - சாரதியான கண்ணன், வெம் விரைவுடன் - கொடிய வேகத்துடனே, ஊர்ந்த - செலுத்திய, வெம் பரி - வேகமுள்ள குதிரைகள் பூண்ட, தேரோன்- தேரையுடையவனாகிய அருச்சுனன்,- தியாகம் பெறு - தானம் பெறுதற்கு உரியவனும், மா தவம் புரி-மிக்க தவத்தைச் செய்தவனுமான, சிலை முனி - வில்வித்தையில்வல்ல அந்தணனான துரோணன், பெற்ற - (புதல்வனாகப்) பெற்ற, வீரனுக்கு - வீரனான அசுவத்தாமனுக்கு, இன்றே இறுதி நாள் - இன்றையதினமே அழியுந்தினமாம், என - என்று (கண்டவர்) சொல்லும்படி, ஆங்கு - எதிர்ப்பக்கத்தில், அவன் அணிந்த - அவ்வசுவத்தாமன் ஒழுங்காய்நின்ற, பேர் இகல் அணியிடை - பெரிய வலிய படைவகுப்பினிடத்து,சென்றான் - போனான்;
பதினெட்டாநாளோடு போர்முடிந்திடு மென்று கண்ணன் தருமபுத்தி ரனுக்குத் தைரியங் கூறினதை, கீழ்ச்சருக்கத்தில் வந்த "இத்தின மிரவி சிறுவனும் விசய னேவினா லிறந்திடும் நாளைத், தத்தின புரவித் தேர்ச்சுயோதனனுஞ் சமீரணன் தனயனால் மடியும், அத்தினபுரியு மீரிருகடல் சூழவனியும் நின்னவா மென்றான், சித்தின துருவா யகண்டமுந் தானாஞ் செய்யகட் கருணையந்திருமால்" என்றதனால் அறிக. ஓதல் ஓதுவித்தல் வேட்டல் வேட்பித்தல் ஈதல் ஏற்றல் என்ற அந்தணர்க்குஉரிய அறுதொழில் களுள் ஏற்றலும் ஒன்றாதலால், 'பெறுதியாகம்' என்ற அடைமொழியைத் துரோணனுக்குக் கொடுத்தார்; என்றது, அறிவொழுக்கங்களிற் சிறந்தவனாய்த் தானம்பெறுதற்குரிய சறபாத்திர மாகுபவ னென்றவாறு. 'பெறுதியாகமாதவம்புரிசிலைமுனி' என்றதனால், துரோணன் அரசர்க்குரிய படையுரிமையைப் பெற்றுஅரசரையடுத்து அவர்க்குப்படைக்கலம்பயிற்றிப் போர்த்தொழில் நடத்திநின்றவனாயினும் |