பக்கம் எண் :

50பாரதம்சல்லிய பருவம்

58.- அதுகண்டு வீமன்சல்லியனை மகுடபங்கஞ் செய்தல்.

அறத்தின்மைந்தனதானனங்குருதியாலருக்கன்மண்டலம்போல
நிறத்தவாறுகண்டருகுறக்கதைகொடுநின்றவாயுவின்மைந்தன்
மறத்தடம்புயவரிசிலைச்சல்லியன்மணிமுடிகழன்றோடிப்
புறத்துவீழ்தரவெறிந்தனனெறிந்தமைபுயங்ககேதனன்கண்டான்.

     (இ -ள்.) அறத்தின் மைந்தனது - தருமபுத்திரனது, ஆனனம் - முகம்,
குருதியால் - இரத்தத்தினால், அருக்கன் மண்டலம் போல -
சூரியமண்டலம்போல, நிறத்த - செந்நிறமடைந்த, ஆறு-விதத்தை, கண்டு -
பார்த்து,- அருகு உற கதை கொடு நின்ற வாயுவின் மைந்தன் - (அவனது)
சமீபத்திலே பொருந்தக் கதாயுதத்தைக் கையிலேந்திக்கொண்டுநின்ற
வாயுகுமாரனான வீமன்,-மறம் தட புயம் - வலிமையையுடைய பெரிய
தோள்களையும், வரி சிலை - கட்டமைந்த வில்லையுமுடைய, சல்லியன் -
சல்லியனது, மணி முடி - இரத்தின கிரீடம், கழன்று ஓடி புறத்து வீழ்தர -
கழன்றுசென்று பின்னே விழும்படி, எறிந்தனன் - (தனதுகதையினால்)
தாக்கினான்; எறிந்தமை - அவ்வாறு தாக்கியதனை, புயங்க கேதனன்
கண்டான்- பாம்புக்கொடியனான துரியோதனன் பார்த்தான்; (எ - று.)

    சல்லியனெய்த நான்கு பாணங்களால் தருமனது முகம் புண்பட்டு
இரத்தஞ்சொரிந்ததைப் பார்த்த வீமன் சல்லியனைக் கதைகொண்டு தாக்கி
அவனது கீரிடம் கீழேவிழும்படி செய்திட்டதை அச்சல்லியனுக்குப்
பாதுகாவலாக வந்துள்ள துரியோதனன் பார்த்தனனென்பதாம்.       (58)

வேறு.

59.-வீமன்மேல் துரியோதனன்ஓரம்பு தொடுத்தல்.

தன்படைத் தலைவனைத் தண்டினாலெறி
வன்புடைத் தடம்புயமருத்தின் மைந்தன்மேன்
மின்படைத் தொளிர்கணைவிசையி னேவினான்
புன்படைப் பினிலயன்படைத்த பூபனே.

     (இ -ள்.) தன் படை தலைவனை - தனது சேனைத்தலைவனான
சல்லியனை, தண்டினால்எறி - கதாயுதத்தால்தாக்கின, வன்புஉடை
தடபுயம்மருத்தின் மைந்தன்மேல் - வலிமையையுடைய பெரிய
தோள்களையுடைய வாயுகுமாரனான வீமன்மேல்,-புன் படைப்பினில் அயன்
படைத்த பூபன் - இழிவான சிருஷ்டிவருக்கத்திலே பிரமனால்
சிருஷ்டிக்கப்பட்ட அரசனான துரியோதனன்,-மின் படைத்து ஒளிர் கணை -
மின்னல்போன்ற ஒளியைப்பெற்று விளங்கும் ஓரம்பை, விசையின் ஏவினான் -
வேகத்தோடு தொடுத்தான்; (எ - று.)

    அசுராம்சமாய்த் தோன்றித் தீக்குணந் தீச்செயல்களையுடையராய்
உலகத்துக் கொடுமைவிளைத்துப் பூமிக்குப் பாரமாய் நின்ற பாதகர்களுள்
துரியோதனன் ஒருவனாதலால், 'புன்படைப்பினில் அயன்படைத்த பூபன்'
எனப்பட்டான்.  பூபன் - பூமியைக்காப்பவன். 'படைத்தொரு' என்றும் பாடம்.