வேறு 73.- சல்லியன் இறந்ததனால்கௌரவசேனை நிலைகுலைதல். தொட்டவரி சிலைத்தடக்கையிராம னென்னத் தொடுத்தகணை தப்பாமற் றொழாத வேந்தர், இட்டகவ சமுமார்பும் பிளந்தபின்னரெடுத்ததொரு வடிவேலாலிளையோ னென்ன, மட்டவிழுந்தும்பை யந்தார்த் தருமன் மைந்தன் வாகுவலியுடனெறிய மத்திரேசன், பட்டனனென் றணிகுலைந்து முதுகிட் டோடிப்படாதுபட்ட துயர்த்தபணிப்பதாகன் சேனை. |
(இ -ள்.) தொட்ட - ஏந்திய, வரி - கட்டமைந்த, சிலை - (கோதண்டமென்னும்) வில்லையேந்திய, தட - பெரிய, கை - கையையுடைய, இராமன் என்ன - இராமன்போல, தொடுத்த கணை தப்பாமல் - எய்த அம்பு குறிதவறாதபடி, தொழாத வேந்தர் இட்ட கவசமும் மார்பும் பிளந்த பின்னர் - வணங்காத பகையரசர்கள் தரித்துள்ள கவசத்தையும் மார்பையும் (அம்புகளாற்) பிளந்தபின்பு,- எடுத்தது ஒரு வடிவேலால் - கையிலெடுத்ததொரு கூரியவேலாயுதத்தால், இளையோன் என்ன - முருகக்கடவுள்போல, மட்டு அவிழும் அம் தும்பை தார் தருமன் மைந்தன் - வாசனை வீசுகிற அழகிய தும்பைப்பூமாலையையுடைய தருமபுத்திரன், வாகு வலியுடன் எறிய - தோள்வலிமையோடு வீச, (அதனால்), மத்திர ஈசன் - மத்திர நாட்டரசனான சல்லியன், பட்டனன் - இறந்தனன், என்று - என்ற காரணத்தால், உயர்த்த பணி பதாகன் சேனை - உயரநாட்டிய பாம்புக் கொடியையுடைய துரியோதனதுசேனை, அணிகுலைந்து - அணிவகுப்பின் ஒழுங்கு கெட்டு, முதுகுஇட்டு ஓடி -தோற்று ஓடி, படாது பட்டது - படாதபாடுபட்டது; (எ-று.)
வேலினாலெறிதற்கு வேலனான முருகனை உவமைகூறினார். சுப்பிரமணியன் சிவபிரானது இளையகுமார னாதலால், இளையோனெனப்பட்டனன். இனி. 'இளையோனென்ன' என்பதற்கு - இராமன் தம்பியான இளையபெருமாள் [லக்ஷ்மணன்] போல என்று உரைப்பாருமுளர். படாதுபட்டது - ஒரு நாளும் படாத மிக்கபாடு பட்டது. இதுமுதற் பதினான்கு கவிகள் - பெரும்பாலும் ஒன்று இரண்டு ஐந்து ஆறாஞ்சீர்கள் காய்ச்சீர்களும், மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்குகொண்ட எண்சீராசிரியவிருத்தங்கள். (73) 74.-சல்லியனைச் சேர்ந்தஎழுநூறுவீரர்கள் தருமனை யெதிர்த்தல். மதிகண்டபெருங்கடல்போற்குந்திமைந்தர் வன்சேனையார்ப்பது வுமன்னன்சேனை, நுதிகொண்ட கனல் கொளுத்துமிராமபாணநுழைகடல் போனொந்ததுவு நோக்கி நோக்கிக், கதிகொண்டபரித்தடந்தேர்ச்சல்லியன்றன் கண்போல் வாரெழுநூறுகடுந்தேராட்கள், விதிகொண்ட படைபோல் வெம்படைகளேவிவெம்முரசக் கொடிவேந்தன்மேற்சென்றாரே. |
|