பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்63

    பேரறிவுடைய தேவர்களும் வருணித்துச் சொல்லலாகாதவண்ணம் மிக்க
வீரங்காட்டிப் பொருதன ரென்பதாம்.  மிக்க அறிவுடைமைபற்றி, தேவர்க்கு
வடமொழியில் விபுதரென்று ஒரு பெயர்.  இனி, கல்வித்திறமுடைய
வித்வான்களுக்கும் வருணித்துச்சொல்லக்கூடிய அளவினதன்றென்று
உரைப்பினும் அமையும்.  சோமகர்-துருபதனது குலத்தார்.  தாமம் மணி தட
சிகரம் தோள் - ஒளியையுடைய இரத்தினங்களையுடைய பெரிய மலைகள்
போன்ற தோள்களென்றலும் ஒன்று.  பூ - பூமியைக் குறிக்கையில், வடமொழி.
'தும்பிகளை அரியினங்கள் தொடருமாபோல்' என்றும்பாடம். உவமையணி.(76)

77.-துரியோதனன் தம்பியருள்எழுவரை வீமன் கொல்லுதல்.

தன்றமையன்றனைப்பொருதுவெல்லவந்த தானையெலா
                          நீறாக்கித்தரணியாளும்,
புன்றமையனெதிரவனுக் கிளையவீரர்பொரவந்தோரெழுவரையும்
                               புவிமேல் வீழ்த்தி,
இன்றமையுஞ்சமரமினிக்காண்டல்பாவமென்றிமையோரதிசயிப்
                                பவிமயம் போல,
நின்றமைகண்டானிலனைமகிழ்ந்து நோக்கி நெஞ்சுறவன்றென்
                             செய்தானெடியமாலே.

     (இ -ள்.) தன் தமையன்தனை - தனது தமையனான தருமனை,
பொருது- எதிர்த்துப்போர்செய்து, வெல்ல வந்த - சயிப்பதற்கு வந்த, தானை
எலாம் -பகைவர் சேனைகளையெல்லாம், நீறு ஆக்கி - பொடிபடுத்தி,-தரணி
ஆளும்புன் தமையன் எதிர் - பூமியை அரசாளுகிற அற்பகுணமுள்ள
தமையனானதுரியோதனது எதிரிலே, பொரவந்தோர் அவனுக்கு இளையவீரர்
எழுவரையும்- (தன்னுடன்) போர்செய்ய வந்தவர்களான அவனது தம்பிமார்
ஏழுபேரையும்,புவி மேல் வீழ்த்தி - தரையிலே இறந்துவிழச்செய்து,- சமரம்
இன்று அமையும்- 'போர் இன்றைநாளோடு போதும், இனிகாண்டல் பாவம்-
இனிமேலும்(இப்படிப்பட்ட கொடும்போரைப்) பார்த்தல் பாவமாம்,' என்று
இமையோர்அதிசயிப்ப - என்று தேவர்கள் கொண்டாட,-இமயம் போல
நின்றமை -இமயமலைபோல (வீமன்) சலியாது நின்றதை, கண்டு - பார்த்து,
நெடியமால் -பெருமைக்குணமுள்ள திருமாலின் அவதாரமான கண்ணபிரான்,
ஆனிலனை -வாயுகுமாரனான அவ்வீமனை, நெஞ்சு உற - மனங்களிக்க,
மகிழ்ந்து நோக்கி- மகிழ்ச்சி கொண்டு பார்த்து, அன்று - அப்பொழுது, என்
செய்தான் - யாதுசெய்தான்? [மிக்க ஆனந்தமடைந்தனன் என்பதாம்];
(எ - று.)

    துரியோதனனுக்கு உதவியாய்த் தருமனைச் சயிக்கும்பொருட்டு வந்த
சேனைகளை வீமன் சாம்பராக்கித் துரியோதனன் கண்ணெதிரிலே அவன்
தம்பிமார் ஏழுபேரையுங்கொன்று மிகஉக்கிரமாகப் போர்செய்து சிறிதும்
சலிப்பில்லாது நின்ற திறத்தைக் கண்ணன் பார்த்து மனப்பூர்வமாய்
அளவில்லாத ஆனந்தத்தை அடைந்தனன் என்பதாம்.  தனது
திருவவதாரத்தின் காரியமான பூபாரநிவிருத்தி வீமனால் நிறைவேறிவருதலை
நோக்கி எம்பெருமான் திருவுள்ளமுவந்