79.-வீமன் மற்றும்துரியோதனன் தம்பியரைவரை யெதிர்த்தல். தனக்கு நிகர்தானான கிருதவன்மன்றம்பியர்களெழுவர்படத்தம் முன்பட்ட, மனக்கவலையறிந்துபெருஞ்சேனையோடு மற்றவன்றம் பியரைவரோடும் வந்து, சினக்கதிர்வேல்வீமனுயிர்செகுப்பானெண்ணிச்செருச்செய்தானிமைப் பளவிற்றிருகியோட, எனக்கிவரேயமையுமெனப் புறக்கிடாத இளையவர் மேற்கடுங்கணையைந்தேவினானே. |
(இ -ள்) தம்பியர்கள் எழுவர் பட-தம்பிமார் ஏழுபேர் இறக்க, தம்முன்பட்ட - தமையனான துரியோதனன் அடைந்த, மனம்கவலை- மனக்கலக்கத்தை, அறிந்து - உணர்ந்து,- தனக்கு நிகர் தான் ஆன கிருதவன்மன் - (வேறு ஒப்புமையில்லாமையால்) தனக்குச்சமானம் தானேயாகிய கிருதவர்மன்,- பெரு சேனையோடும் - பெரிய சேனையுடனும், மற்று அவன் தம்பியர் ஐவரோடும் - அத்துரியோதனன் தம்பிமார் வேறு ஐந்துபேருடனும், வந்து-, சினம் கதிர்வேல் வீமன் உயிர் செகுப்பான் எண்ணி - கோபத்தையும் ஒளியையுடைய வேலாயுதத்தையுமுடைய வீமனது உயிரைத் தொலைக்க நினைத்து, செரு செய்தான் - போர்செய்தானாய், (அப்பொழுது வீமன் எதிர்த்துப்போர் செய்யவே.) இமைப்பு அளவில் - கண் இமைக்குங் காலத்திற்குள், திருகி ஓட - (தன் சேனையுடன்) புறமிட்டோட, புறக்கு இடாதஇளையவர்மேல் - புறங்கொடாதுநின்ற துரியோதனன்தம்பியர் ஐவர்மேல்,எனக்கு இவரே அமையும் என - எனக்கு இவர்களே போதுமென்று, கடுகணை ஐந்து ஏவினான் - கொடியஐந்து அம்புகளைச் செலுத்தினான்; (எ - று.) நூற்றுவருள் முந்தினநாள்களில் இறந்தவர் போக மற்றையோரை யெல்லாம் அன்றைக்கே கொன்றொழித்துத்தனது சபதத்தை நிறைவேற்றிவிடவேண்டு மென்பது வீமன்கொண்ட சங்கற்பமாதலால், அதற்கு ஏற்ப, எனக்கு இவரேயமையுமென இளையவர்மேற்கணையேவினான். இந்த ஐவர் பேர், அடுத்தகவியில் விளங்கும், இவரேயமையும் என்பதற்கு - இவர்களைக் கொல்லுதலே போதுமென்று இலக்கணையாற் பொருள்கொண்டு கூறினுமாம். கதிர் - கூர்நுனியுமாம். (79) 80.-அவ்வைவரும் வீமனால்இறத்தல். சித்திரவாகுவினோடுபெலசேனன்போர்ச் செயசூரன் சித்திரனுத்தமவிந்தென்றே, அத்திரவில்லாண்மையினிற்றிகழாநின்றவைவரிவர்யாவரையு மடர்ப்பான்வந்தோர், சத்திரம்யாவையுமேவிச்சங்கமூதிச்சமர்விளைத்தார்நெடும்பொழுது சமீரணன்றன், புத்திரனான்முன்சென்றவெழுவரோடும் பொன்னுலகங்குடிபுகுந்தார் புலன்கள்போல்வார். |
(இ -ள்.) சித்திரவாகுவினோடு - சித்திரவாகுவும், பெலசேனன் - பலசேநனும், போர் - போரில்வல்ல, செயசூரன் - ஜயசூரனும், சித்திரன் - சித்திரனும், உத்தமவிந்து - உத்தமவிந்தும், என்று - என்று பெயர் பெற்று, அத்திரம் வில் ஆண்மையினில் திகழாநின்ற - அஸ்திரங் |