பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்95

     (இ -ள்.) அவர் - அந்த அசுவத்தாமன் முதலியோர், மீண்ட
பின்னர் -திரும்பிச்சென்றபின்பு, மா தவம் குந்தி ஈன்ற கொற்றவர் தாமும்-
மிக்கதவத்தையுடைய குந்தி பெற்ற குமாரர்களான வெற்றியையுடைய
பாண்டவர்களும்,- சேனை குழாத்தொடும் தங்களோடும்
செற்றவர்தம்மைஎல்லாம் - தங்கள் சேனைக்கூட்டத்துடனும் தங்களோடும்
பகைத்துப் போர்செய்த எதிர்ப்பக்கத்தாரையெல்லாம், சேண் உலகு ஏற ஏற்றி-
வீரசுவர்க்கத்திற் சென்றேறும்படி செலுத்திவிட்டு [கொன்றொழித்து], பொன்
தவர் இராசராசன் புக்க உழி அறிவுறாமல் - அழகிய வில்லையுடைய
அரசர்க்கரசனான துரியோதனன் போயொளித்த இடத்தை யறியாமல்,
(எ -று.)-'நின்றபொழுதினில்' என வருங் கவியோடு தொடரும்;
'மீண்டபின்னர்'என்பதும் அதனோடு தொடர்தற்கு உரியதே. மற்று-அசை.

     "என்னநோன்பு நோற்றாள்கொலோ இவனைப் பெற்றவயிறுடையாள்",
'செம்மலைப் பயந்த நற்றாய் செய்தவ முடைய ளென்பார்" என்றபடி மிக்க
தவப்பயனாலன்றி இப்படிப்பட்ட சிறந்த புத்திரரைப்பெறுதல் இயலாதென்பார்,
'மாதவக்குந்தி' என்றார்.                                       (124)

125.-எங்குந்தேடுகையில்வேடர் சிலர் வீமனிடம் செய்தி
கூறத்தொடங்கல்.

பாடியுங்களமுஞ்சூழ்ந்தபாங்கருமங்குமிங்குந்
தேடியுங்காண்கிலாதசிந்தையாகுலத்தராகி
நீடுயிர்த்துயிர்த்துநின்றபொழுதினினிகழும்வேட்டை
ஆடியவலைஞர்மீண்டோரானிலற்குரைசெய்வாரே.

     (இ -ள்.) பாடியும் - படைவீட்டிலும், களமும் - போர்க்களத்திலும்,
சூழ்ந்த பாங்கரும் - சுற்றிலுமுள்ள இடங்களிலும், அங்கும் இங்கும் -
பலவிடங்களிலுமாக, தேடியும் - தேடிப்பார்த்தும், காண்கிலாத - (எங்குந்
துரியோதனனைக்) காணாமையாலாகிய, சிந்தை ஆகுலத்தர் ஆகி -
மனக்கவலையுடையவர்களாய், நீடு உயிர்த்து உயிர்த்து நின்ற பொழுதினில் -
மிகுதியாகப் பெருமூச்சுவிட்டு நின்றபொழுதில்,-நிகழும்வேட்டை ஆடிய
வலைஞர் - பொருந்தியவேட்டையாடிய வேடர் சிலர், மீண்டோர் -
(துரியோதனன் சென்ற வனத்தினின்று) திரும்பிவந்தவர்கள், ஆனிலற்கு -
வாயுகுமாரனான வீமனுக்கு, உரை செய்வார் - (துரியோதனன் ஒளித்துள்ள
விடத்தைக்) கூறுபவரானார்கள்: (எ - று.)-அதனை அடுத்தகவியிற்காண்க.

    "வினைபகை யென்றிரண்டி னெச்சம் நினையுங்கால், தீயெச்சம்
போலத்தெறும்" என்றபடி சத்துருசேஷம் அக்கினிசேஷம்போலப்பின்பு
வளர்ந்து அழிவுசெய்யக்கூடிய தாதலின், அதனை மிச்சமாக
விடக்கூடாதென்பதுபற்றியும், வீமனது சபதம் ஒருபகுதி நிறைவேறாமற்
குறைபடுதல்பற்றியும், இங்ஙனம் மிக்க கவலைகொள்வாராயினர்.

    "வேட்டையாடிய வலைஞர்" என்பதற்கு - வலைவிசிமீன்
வேட்டையாடும்செம்படவரென்று உரைத்தல் பொருந்தாது.  127 - ஆங்