பக்கம் எண் :

96பாரதம்சல்லிய பருவம்

கவியில்"மிருகமாக்கள்" எனவருதல் காண்க.  மீண்டோர்-பெயர். 
ஆநிலன் -அநிலன் மகன்.                              (125)

126.-துரியோதனன் செய்தியைவேடர்கள் வீமனுக்குக் கூறல்.

துவமிகுமுனிவரோடுசுரர்களுந்தோயுநன்னீர்த்
தவமுயல்பொய்கைதன்னிற்றண்டுடைக்கையனாகிப்
புவிமுழுதாண்டவேந்தன்புக்கனன்கண்டோமென்றார்
கவலையின்மனத்தனானகாற்றருள்கூற்றானாற்கே.

     (இ -ள்.) கவலையின் மனத்தன் ஆன - (தனக்குப் பழம்பகைவனான
துரியோதனனுள்ளவிடம் தெரியவில்லையேயென்று) கவலையையுடைய
மனத்தையுடையவனாகிய, காற்று அருள் கூற்று அனாற்கு - வாயுவினாற்
பெறப்பட்ட யமன்போன்ற வீமனுக்கு, (அவ்வேடர்கள்), 'துவம் மிகு
முனிவரோடு - சத்துவகுணம் மிக்க முனிவர்களும், சுரர்களும் -
தேவர்களும்,தோயும் - நீராடப்பெற்ற, நல் நீர் - புண்ணிய
தீர்த்தத்தையுடைய, தவம் முயல்பொய்கைதன்னில் - தவஞ்செய்தற்குரிய
தடாகத்தில், புவி முழுது ஆண்டவேந்தன் - பூமி முழுவதையும் அரசாண்ட
துரியோதனராசன், தண்டு உடைகையன் ஆகி - கதாயுதத்தையுடைய
கையையுடையவனாய், புக்கனன்-பிரவேசித்தான்: கண்டோம் - (நாங்கள்)
பார்த்தோம்,' என்றார் - என்றுசொன்னார்கள்; (எ - று.)

     துவம்- சத்துவம் என்பதன் முதற்குறை.  ஞானம் அருள் தவம்
பொறுமை, வாய்மை, மேன்மை, மௌனம் ஐம்பொறியடக்கல் என்பன,
சத்துவகுணவகைகளாம்:  (துவம் = த்ருவம், அசையாநிலையென்று பொருள்
கூறுதலும் உண்டு.) கவலை இல் எனப்பிரித்து கவலையில்லாதமனத்தை
யுடையவனென்று உரைப்பது கீழ்க்கவியோடு மாறுகொளக் கூறலாம்.
வாயுகுமாரனாதலாலும், பகைவரைத்தவறாதுஅழித்தலில் யமன்போலுதலாலும்,
வீமனை 'காற்றருள் கூற்றனான்' என்றார்; சூரியனது குமாரனாகவுள்ள யமன்
போலவன்றி வீமன் வாயுவினாற் பெறப்பட்ட ஒரு புதிய யமன் போல்வா
னென்பதும் தோன்றும்.                                       (126)

127.-அச்செய்தியை வீமன்கண்ணன் முதலியோர்க்குக் கூறல்.

கருமுகிலனையமேனிக்கண்ணனும்பவளமேனித்
தருமனுமெவருங்கேட்பத்தாமவேல்வீமன்சொன்னான்
பொருமரவுயர்த்தோனின்றோர்பொய்கையிற்புகுந்தானென்று
தெருமருமிருகமாக்கள்செப்பினரென்றுகொண்டே.

     (இ -ள்.) கரு முகில் மேனி - காளமேகத்தை யொத்த கரிய
திருமேனியையுடைய, கண்ணனும் - கிருஷ்ணபகவானும், பவளம் மேனி -
பவழம்போலச் சிவந்த உடம்பையுடைய, தருமனும் - தருமபுத்திரனும்,
எவரும் -மற்றும் எல்லோரும், கேட்ப-கேட்கும்படி,-