பக்கம் எண் :

சம்பவச் சருக்கம்111

ஸபோஜ மத்ராதிபகந்யகாஸக:- யயௌ வநம் ஹைமவதம் மஹா ரத:" என்று
பாலபாரதத்தில் வருவதனாலும், கலைமானினம் முதலியவற்றை வேட்டையாடினா
னென்று மேற்பாடலில் வருவதனாலும் இங்ஙன்பொருள் கூறப்பட்டது. கண்ணுற்ற
- இடமகன்ற எனினுமாம்.                                        (201)

47.- பலமிருகங்களையும் பாண்டு வேட்டையாடுதல்.

கானத்திலுள்ளகலைமானினங் காட்சியாமா
ஏனத்திரள்வெம்புலியெண்குடன் யாளிசிங்கம்
தானப்பகடுமுதலாய சனங்களெல்லாம்
மானச்சரத்தாற்கொலைசெய்தனன் வாகைவில்லான்.

     (இ - ள்.) வாகைவில்லான் - வெற்றிமாலைசூடிய வில்லையேந்தியவனாகிய
பாண்டு;- கானத்தில் உள்ள - காட்டிலிருக்கின்ற, கலை மான் இனம் -
கலைமானின் கூட்டமும், காட்சி- (கண்ணுக்கு) அழகிய, ஆ மா -
காட்டுப்பசுவும், ஏனம் திரள் - பன்றியின்கூட்டமும், வெம் புலி -
கொடியபுலிகளும், எண்குடன் - கரடியுடனே, யாளி - யாளியும், சிங்கம் -
சிங்கமும், தானம் பகடு - மதசலத்தையுடைய களிறும், முதல் ஆய - முதலாகிய,
சனங்கள் எல்லாம் - (விலங்கின்) திரள்களையெல்லாம், மானம் சரத்தால் -
பெருமைபொருந்திய அம்பினால், கொலைசெய்தனன் - வேட்டையாடினான்:
(எ-று.)- கற்கியாமா  என்று பிரதிபேதம். கூட்டமென்ற பொருளில், சனம்
என்றார்.                                                 (202)

48.-வேட்டையிளைப்பை இமவானினின்றுதோன்றிய
வாயுபகவான்போக்குதல்.

மெய்யிற்றெறித்தகுருதித்துளி மேருவில்லி
சையத்தலர்ந்தகமழ்குங்குமத் தாதுமானக்
கையிற்சிலையோடுலவுங் கழற்காளைகேதம்
பையத்தணித்தானிமநாக பவனனென்பான்.

     (இ-ள்.) (வேட்டையாடுகையில்), மெய்யில் - உடம்பிலே, தெறித்த-, குருதி
துளி - இரத்தப்பொட்டு, மேருவில்லி சையத்து அலர்ந்த கமழ் குங்குமம் தாது
மான - மேருவைவில்லாகக் கொண்ட சிவபிரானுடைய கைலாசமலையிலே
மலர்ந்த நறுமணம் வீசுகின்ற குங்குமப்பூவின் இதழையொத்துத் தோன்ற,-
கையில் சிலையோடு உலவும் கழல் காளை - கையிலே வில்லுடனே உலாவுகின்ற
வீரக் கழலையணிந்த காளைப்பருவத்தானாகிய அந்தப் பாண்டுவின், கேதம் -
(வேட்டையாடியதனாலுண்டாகிய) இளைப்பை, இமநாகம் பவனன் என்பான் -
இமயமலையினின்றுதோன்றிய வாயுபகவான், பைய - மெல்ல, தணித்தான்-; (எ-று.)

     வெண்ணிறவுடம்பிற் செந்நிறக்குருதித்துளி சிந்தியது - வெள்ளிமயமான
கைலாஸமலையிற் குங்குமப்பூவின் தாது சிந்தியதை யொக்கும்: பவனனென்பான்,
என்பான் - முதல்வேற்றுமைச் சொல்லுருபு. பவனன் என்பதற்கு ஏற்ப,
தணித்தானென ஆண்பாற் பயனிலை வந்தது. சையம் - சைலமென்பதன் திரிபு:
ஸஹ்யமென்பதன் திரிபு என்றால், சிறப்புப்பெயர் பொதுப்பொருளில்
வந்ததென்க.                                                  (203)