பக்கம் எண் :

124பாரதம்ஆதி பருவம்

75.-அதனையறிந்தபாண்டு குந்தியைமீண்டுபலமுறை
இரந்துவேண்ட, அன்னாள்மீண்டும் மந்திரத்தால் வாயு
தேவனை வரவழைத்துக்கூடுதல்.

ஈண்டுறுநிகழ்ச்சிகேட்டே யாதவன்மகளைநோக்கிப்
பாண்டுமனிரந்துபல்காற் பணித்தலும்பவனன்றன்னை
மீண்டும்மறையாலுன்னி யழைத்தனள்விரைவினோடி
ஆண்டுவந்தவனும்பூத்த கொடியனாளாகந்தோய்ந்தான்.

     (இ-ள்.) ஈண்டு - இங்கே [காந்தாரியிடத்தில்], உறு - நடந்த, நிகழ்ச்சி -
செய்தியை, கேட்டு - கேள்வியுற்று,- பாண்டு மன் - பாண்டுராசன்,- யாதவன்
மகளை நோக்கி - யதுகுலத்தில் தோன்றிய [சூரன் மகளான] குந்தியைப்பார்த்து,
பல் கால் இரந்து பணித்தலும் - பல முறை வேண்டி (த் தன் கருத்தை)ச்
சொல்லுதலும்,- (குந்திதேவி), - பவனன் தன்னை - வாயுதேவனை, மீண்டுஉம்-,
அ மறையால் - (முன்பு தருமராசனையழைத்த) அந்தமந்திரத்தினால், உன்னி-
நினைத்து, அழைத்தனள்-: ஆண்டு - அப்போது அங்கே, அவன் உம் -
அந்தவாயுதேவனும், விரைவின் ஓடி வந்து-, பூத்த கொடி அனாள் -
பூத்தக்கொடிபோன்றவளான குந்தியின், ஆகம் - மார்பில், தோய்ந்தான் -
படிந்தான்; (எ-று.)                                              (230)

76.- நல்லமுகூர்த்தத்தில் வீமனைப் பெறுதல்.

நெஞ்சுறமணந்துமீள நெடுங்கலைவாகனேகச்
செஞ்சுடருச்சியெய்திச் சிறந்ததோர்முகூர்த்தந்தன்னில்
அஞ்சனையளித்தபொற்றோ ளனுமனேயுவமையென்ன
வெஞ்சினவீமன்றன்னைப் பயந்தனள்விரதமிக்காள்.

     (இ - ள்.) நெஞ்சு உற - மனம்பொருந்த, மணந்து - (அந்தக் குந்தி
தேவியைக்) கூடி, நெடுங் கலை வாகன் - பெருமைபெற்ற ஆண்மானை
வாகனமாகவுடைய அந்தவாயுதேவன், மீள ஏக - மீண்டு செல்ல,- விரதம்மிக்காள் -
சிறந்தநோன்பினை நோற்றிருப்பவளான குந்திதேவி,- செஞ் சுடர் உச்சி எய்தி
சிறந்தது ஓர் முகூர்த்தம் தன்னில் - செவ்வியசுடரையுடைய சூரிய தேவன்
உச்சியையடைந்ததனாற் சிறந்த ஒரு முகூர்த்தத்தில், அஞ்சனை அளித்த
பொன்தோள் அனுமன்ஏ உவமை என்ன - அஞ்சனாதேவி பெற்ற அழகிய
தோள்வலிமையுடைய அனுமனே உவமையாவனென்று (உலகோர்) சொல்லுமாறு,
(பெருவலிபடைத்த), வெம்சினம் வீமன் தன்னை - கொடிய சினத்தையுடைய
வீமசேனனை, பயந்தனள் - பெற்றாள்; (எ-று.)

     செஞ்சுடருச்சி யெய்திச்சிறந்த முகூர்த்தம்- 'அபிஜித்' எனப்படும்: "அபிஜித்
ஸர்வதோஷக்ந:" என்ற மேற்கோள் இங்குக்காணத்தக்கது.அஞ்சனை -
கேசரியென்னும் வானரராசன் மனைவி: அந்த அஞ்சனையோடு வாயுதேவன்
கலந்துபெற்ற வானரப்புதல்வன் அனுமான். இவன் பிறந்தபோது பசியால்
இளஞ்சூரியனைக் கனியென்று கருதிப் பாய்ந்து இந்திரனால் தாக்கப்பட்டு முறிந்த
கவுளையுடைய னானதனால், 'அனுமான்' எனப்பட்டான்.                (231)