பக்கம் எண் :

சம்பவச் சருக்கம்125

77.-அப்போது நன்னிமித்தந் தோன்றுதல்.

தண்பரிமளமென்சாயற் றந்தையுந்திசைகடோறும்
எண்பெறுமுயிர்கட்கெல்லா மிதமுறுபொலிவின்வீச
நண்புடையனலன்றானு நலமிகுநண்புதோன்றப்
பண்புறவலம்வந்தோங்கிப் பரிவுடன்விளக்கஞ்செய்தான்.

     (இ - ள்.) தண் பரிமளம் மெல் சாயல் - குளிர்ந்த நறுமணத்தையும் மெல்லிய
பரிசத்தையுமுடைய, தந்தைஉம் - வாயுதேவனும், திசைகள் தோறுஉம் -
திக்குகள்தோறும், எண் பெறும் உயிர்கட்கு எல்லாம் - (மதியாற்றலுடையனவான)
மதிக்கப்படுகிற பிராணிகட்கெல்லாம் [மனிதர்கட்கெல்லாம்], இதம் உறு
பொலிவின் வீச - இனிமையாகத் தோன்றுமாறு நன்குவீச,- நண்பு உடை
அனலன் தான் உம் - (அந்தவாயுதேவனோடு) நட்பையுடைய அக்கினிதேவனும்,
நலம் மிகு நண்பு தோன்ற - நன்மைமிகுந்த நட்புத் தோன்றும்படி, பண்புஉற -
நல்லநிமித்தமாக, வலம்வந்து ஓங்கி-வலப்புறமாகச்சுழலும் சுவாலையுடன்கிளர்ந்து,
(ஆங்காங்கு ஓமஞ்செய்பவர் மனையில்), பரிவுடன் - அன்போடு,
விளக்கம்செய்தான் - விளங்குதலைப் பொருந்தினான்;(எ-று.)

     இனிதுகாற்றுவீசுதலும், அக்கினிவலப்புறமாகச்சுழலும்  சுவாலையைப்
பெற்றிருத்தலும் நன்னிமித்தங்களாம். 'வலந்திரியாப்பொங்கி,' (200) என்றது
புறப்பொருள் வெண்பா மாலை.                             (232)

78.-வீமசேனன்தோன்றியதற்கு முன்னாளில் இழுதுதாழியி
லிட்டதசை முற்றித் துரியோதனன் தோன்றுதல்,

அன்னநாளனிலன்மைந்தன் பிறந்தனனாகவற்றை
முன்னைநாள ருக்கன்வேலை முழுகியமுகூர்த்தந்தன்னில்
இன்னநாளுருவமுற்றி யெழில்பெறுமென்றுமுன்னோன்
சொன்னநாள்வழுவுறாமற் சுயோதனன்றோன்றினானே.

     (இ - ள்.) அன்ன நாள் - அந்த [ச்சிறந்த] நாளில், அனிலன் மைந்தன்
பிறந்தனன்ஆக - வாயுதேவனுடையபுத்திரன் பிறந்தானாக,- அற்றை முன்னை
நாள் -அன்றைக்கு முன்னாளில், அருக்கன் வேலை முழுகிய முகூர்த்தந்தன்னில்-
சூரியன் கடலிலே முழுகின [அஸ்தமித்த] முகூர்த்தத்தில், இன்ன நாள் உருவம்
முற்றி எழில் பெறும் என்று முன்னோன் சொன்ன நாள் வழுஉறாமல் -
இந்தநாளிலே உருவம் முற்றுப்பெற்று அழகிய குழந்தையாகுமென்று
வியாசமுனிவன் சொன்னநாள் தவறாதபடி, சுயோதனன்,- தோன்றினான்-;

     இதனால், தருமபுத்திரனுக்குப்பின் வீமசேனனுக்குமுன் தோன்றியவன்,
துரியோதன னென்க. ஸு யோதநன் என்ற வடசொல் - நன்கு[வெற்றியுண்டாகப்]
பொருபவ னென்று பொருள்படும்.                                (233)

79.-துரியோதனன் தோன்றியபோது தீநிமித்தங்கள்
தோன்றுதல்.

வாரியினதிர்ந்துவிம்மு மங்கலமுழவமேன்மேல்
ஓரியன்குரலாலோதை யொடுங்கினவிடங்கடோறும்
பாரியகுலத்தோர்கண்ணி னுவகைநீர்பனிக்குமுன்னே
சோரியந்தரத்தினின்றுஞ் சொரிந்ததுசோனைமேகம்.