தொட்ட - (மன்மதன்) தொடுத்துவிட்ட, அரு தழல் கணைகள் போல - அரிய ஆக்நேயாஸ்திரத்தைப்போல, அலர்ந்தன - மலர்ந்தன; மோகனச்சுண்ணம் - மேலேபட்டமாத்திரத்தில் மோகத்தை யுண்டாக்குஞ் சூர்ணமெனினுமாம். அசோகம் யோகிகட்கும் காமத்தை யுண்டாக்கிற்றென்பது பின்னடிகளின் பொருள். இனி, யோகம் என்பதை வியோகமென்பதன் முதற்குறை எனக்கொண்டு, பிரிவு என்று உரைப்பினுமாம்: பாலபாரதத்தில் "புஷ்பம் அசோகசாகிந: ப்ரஸூநபாணேந ருஷா வியோகிஷி - ப்ரயுக்தம் ஆக்நேய மிவாஸ்த்ரம் ஆபபௌ" என்றது காண்க. யோகம் - புணர்ச்சியென்பாருமுளர். இதுவும் - தன்மைத்தற்குறிப்பேற்றவணியே. (249) 95.-அப்போது மாத்திரியினிடத்துப் பாண்டு காதல்பூணுதல். வேனிலின்விளைவினாலும் வேனிலான்விழவினாலும் மாநலந்திகழுமூரன் மாத்திரிவனப்பினாலும் தானலமுறுதலெண்ணிச் சாபமுமறந்துமற்றப் பானலங்கண்ணாளோடும் பாண்டுவும்பரிவுகூர்ந்தான். |
(இ-ள்.) வேனிலின் விளைவினால்உம் - இளவேனிற்காலந் தோன்றியதனாலும், வேனிலான் விழவினாலும் - மன்மதன் காதல் நோயை விளைத்தலாலும், மா நலம் திகழும் மூரல் மாத்திரி வனப்பினால்உம் - மிக்க அழகினால் விளங்குகின்ற புன்சிரிப்பையுடைய மாத்திரியின் அழகினாலும்,- தான் நலம் உறுதல் எண்ணி - தான் காமவின்பத்தையடையவெண்ணி,- சாபம்உம் மறந்து - (கிந்தம முனிவன்) சாபத்தையும் மறந்து, மற்று - பின்னும், அ பானல் அம் கண்ணாளோடுஉம் - கருங்குவளை மலர்போன்ற அழகிய கண்களையுடையவளான அந்த மாத்திரியினிடம், பாண்டுவும்-, பரிவு கூர்ந்தான் - காதல்மிகுந்தான்; (எ-று.) - பாண்டுவும் என்ற உம்மை - உயர்வுசிறப்போடு எச்சப் பொருளுமுடையது. (250) 96.- சோலையில் பாண்டுவும் மாத்திரியும் மாதவிப்பந்தர் சேர்தல். அருந்தளிர்நயந்துநல்கி யலகுடனலகுசேரப் பொருந்துமுன்னவசமாகிப் போகமென்குயிலும்பேடும் இருந்துமெய்யுருகுங்காவி லிரதியுமதனுமென்ன வருந்தியகாதலோடுமாதவிப்பந்தர்சேர்ந்தார். |
(இ-ள்.) அருந் தளிர் - அருமையான தளிரை, நயந்து நல்கி - விரும்பி (த்தன்) பேடைக்குக் கொடுத்து, அலகுடன் அலகுசேர - (பெட்டையின்) அலகுடனே (ஆண்பறவையின்) அலகுசேரா நிற்க, பொருந்து முன் - கூடும் முன்னே, [கூடியவுடனேயென்றபடி], அவசம் ஆகி - பரவசமாகி, போகம் மெல் குயில்உம் பேடுஉம் - போகத்தினால் இளகிய ஆண்குயிலும் அதன் பேடையும், இருந்து-, மெய் உருகு- உடலுருகுகின்ற, காவில் - சோலையிலே, இரதிஉம் மதன்உம் என்ன - ரதிதேவியும் மன்மதனும்போல, வருந்திய காதலோடு - வருத்தமுறுதற்குக்காரணமான காமவிச்சையுடனே, மாதவிபந்தர் - குருக்கத்திக்கொடி பந்தர்போற் படர்ந்திருந்த இடத்தை, சேர்ந்தார் - (பாண்டுவும் மாத்திரியும்) அடைந்தார்கள்; (எ-று.) |