வெளியேயூறுகின்ற பவழம்போன்ற வாயும், விரும்பிய சுரதம் போகம் மேவரு குறிப்புஉம் - (தான்) விரும்பின புணர்ச்சி பற்றிச் செல்லுகின்ற எண்ணம் புலப்படுகின்ற முகக்குறிப்பும், ஆகி - உடையவனாகி,- பொரும் படை மதனன் அம்பால் பொன்றினன்போல- போர்செய்கின்ற மன்மதனுடைய அம்பினால் உயிர் நீங்கினவன் போல, மன்றல் சுரும்பு இனம் இரங்கி ஆர்ப்ப - மணத்திற்செல்லும் வண்டுகளின்கூட்டம் இரக்கங்கொண்டு ஒலிப்பதுபோல் ஒலிக்க,- தோன்றல்உம்- பாண்டுராசனும், சோர்ந்து - உயிரொடுங்கி, வீழ்ந்தான்; இறந்தபோதைய பாண்டுவின்நிலை, இங்கு இனிது கூறப்பட்டிருத்தல் காண்க. புணர்ச்சியே இந்தப்பாண்டுவின் உயிரொழிவுக்குக் காரணமாதலால், 'பொரும்படைமதனனம்பாற் பொன்றினன்போல' என்றது; ஏதுத்தற்குறிப்பேற்றவணி. (254) வேறு. 100.-பாண்டு காமவின்பத்தாலிறந்ததுபற்றிய கவிக்கூற்று. கொஞ்சுகிளி யன்னமொழி குமுதவித ழமுதால் எஞ்சின னராதிபதி யீதென வியப்போ அஞ்சுதரு தீவினையி னாரமுது நஞ்சாம் நஞ்சுமமு தாமுரிய நல்வினையின் மாதோ. |
(இ-ள்.) கொஞ்சு கிளி அன்ன மொழி - கொஞ்சுகின்ற கிளியை யொத்த மொழியையுடையளான மாத்திரியின், குமுதம் இதழ் அமுதால் - ஆம்பல்மலர்போன்ற வாயிதழினின்றுதோன்றிய அமிருதத்தினால், நர அதிபதி - பாண்டுமகாராசன், எஞ்சினன் - உயிரொடுங்கினான்: ஈது என வியப்புஓ - இது என்ன ஆச்சரியமோதான்! அஞ்சு தரு தீவினையின் - அஞ்சத்தக்க தீவினையினால், ஆர் அமுதுஉம் நஞ்சு ஆம் - அருமையான அமிருதமும் விஷமாகும்: உரிய நல்வினையின்- உரிமையாகக்கொள்ளத்தக்க நல்வினையினாலே, நஞ்சுஉம் அமுது ஆம் - நஞ்சமும் அமிருதமாகும்; (எ-று.) முன்னிரண்டடியை மூன்றாமடி சமர்த்தித்துநின்றது: சிறப்புப் பொருளைப் பொதுப்பொருளாற் சமர்த்தித்துநின்ற வேற்றுப்பொருள்வைப்பணி. தீவினையால் அமுதமும் நஞ்சாம்என்று கூற வந்தவர், நான்காமடியால் அதன் மறுதலைப்பொருளையும் உடன் கூறினார். நர அதிபதி - மனிதர்க்குத்தலைவன். மாதோ - ஈற்றசை. இதுமுதற் பதினொருகவிகள் பெரும்பாலும் ஈற்றுச்சீரொன்று மாச்சீரும், மற்றைமூன்றும் காய்ச்சீர்களுமாகிவந்த கலிவிருத்தங்கள். (255) 101.- மாத்திரி பாண்டுநித்திரையிலிருப்பதாகவே நினைத்தல். சித்திரைவசந்தன்வரு செவ்வியுடன்மகிழா மத்திரியெனுங்கொடிய வாட்கண்விடமன்னாள் முத்திரையுணர்ந்திலண் முயக்கமுறுமின்ப நித்திரைகொலாமென நினைந்தருகிருந்தாள். |
(இ-ள்.) சித்திரை - சித்திரைமாதத்தில், வசந்தன் - வசந்தருதுவினால், வரு - தோன்றுகின்ற, செவ்வியுடன் - அழகோடு, மகிழா - |