108.- திருராஷ்டிரன் வணங்கிய புத்திரரையெடுத்துத் தழுவிமகிழ்தல். இறந்ததுணைவற்குள மிரங்குநிலமன்னன் சிறந்தசரணத்தில்விழு சிறுவரையெடுத்துப் புறந்தழுவியப்பொழுது புண்ணியநலத்தால் பிறந்தபொழுதொத்துமகிழ் பெற்றியினனானான். |
(இ-ள்.) இறந்த - உயிர்நீங்கிய, துணைவற்கு - தம்பியான பாண்டுவின் பொருட்டு, உளம் இரங்கும் - மனத்தில் இரக்கங்கொண்ட, நிலம் மன்னன் - நிலத்துக்குஉரியமன்னனான திருதராட்டிரன்,- சிறந்த சரணத்தில்-(தன்னுடைய) சிறப்புற்ற பாதங்களிலே, விழு - வீழ்ந்து வணங்கிய, சிறுவரை - புதல்வரை, எடுத்து-, அப்பொழுது-, புறம் தழுவி- (அவர்களுடைய) முதுகைத் தடவி,புண்ணியம் நலத்தால் பிறந்த - புண்ணியப்பயனால் அவர்கள் பிறந்த, பொழுது - வேளையை, ஒத்து - ஒப்ப, மகிழ் பெற்றியினன் ஆனான் - மகிழ்ச்சியுற்ற தன்மையனானான்; (எ -று.) தம்பியின்மரணத்தால் வருந்துகின்ற அந்தத்திருதராஷ்டிரன் அத்தம்பியினுடைய குமாரர் தன்பாதங்களில் விழ, அவர்களை யெடுத்து அணைத்து அவர்கள் பிறந்தபோது பெற்றோர் அடைந்த மகிழ்ச்சியொப்ப மகிழ்ச்சி யடையலாயின னென்பதாம். மகிழ் - முதனிலைத் தொழிற்பெயர். (263) 109.-வீடுமன் முதலியோர் பாண்டுவையும் அவன் மக்களையும் நினைந்து இருவகைக்கண்ணீரைச் சொரிதல். வியனதிமகன்சிலைவல் விதுரன்முதலுள்ளோர் பயனுடைவிசும்புபயில் பாண்டுவைநினைந்தும் சயநிலைபெறுந்தகைய தனயரையுகந்தும் நயனமிருபைம்புனலு நல்கினர்நயந்தார். |
(இ-ள்.) வியன் நதி மகன் - கங்கைநதியின் மகனாகிய வீடுமன், சிலை வல் விதுரன் - வில்லில்வல்ல வலியவிதுரன், முதல் - முதலாக, உள்ளோர்-,- பயன் உடை விசும்பு - புண்ணியப்பயனாக அடைதலையுடைய சுவர்க்கத்தில், பயில் - சென்ற, பாண்டுவை நினைந்துஉம் - பாண்டுவைச் சிந்தித்தும், சயம் நிலைபெறும் தகைய தனயரைஉகந்து உம் - வெற்றிநிலைபெறுந் தன்மையையுடைய (அந்தப்பாண்டுவின்) புதல்வரைக்கண்டு மகிழ்ந்தும், நயனம்- (தம்) கண்களில், இரு பைம் புனல்உம் நல்கினர் - (சோகக்கண்ணீர் ஆனந்தக் கண்ணீர் என்ற) இருவகையான புதிய கண்ணீர்களையும் விட்டவராய், நயந்தார் - (தம்முடைய) விருப்பத்தைக் காட்டினார்; (எ-று.) ஆகாசம் என்று பொருளுள்ள வியத் என்பது வியன் என்று திரிந்தது: வியன்+நதி = வியனதி: வானதி கங்கை. வியன் - பெருமையெனக்கூறித் தமிழ்ச்சொ லென்றலும் ஒன்று. (264) 110.-பாண்டுபுத்திரரும் திருதராட்டிரன் புத்திரரும் ஓரிடத்துவளர்தல். அனுசநிரு பன்புதல்வ ரைவரு மகீபன் தனயரொரு நூற்றுவரு மன்பினொடு தழுவிக் கனகுல முகந்துபெய் கருங்கய நெருங்கும் வனசமல ருங்குமுத மலருமென வளர்வார். |
|