யாவது - பிறராற்செய்தற்கு அரிய காரியங்களை எளிதிற்செய்து முடிக்குந் திறம்; ஆச்சரியகரமான குணங்களுஞ் செயல்களும் எனினுமாம். இதற்கு - மாயை போலக் கருநிறமுடையா னென்று பொருள்கூறுவாரு முளர். முளரிகளை இறைஞ்சியென இரண்டனுருபுவிரித்தால், இரண்டு செயப்படுபொருள் வந்த வினையாம். தேவதேவனையென முதற்பெயரில் இரண்டனுருபு வந்ததனால், பதமுளரிகளில் என்ற சினைப்பெயரில் ஏழனுருபு விரித்தல் தமிழ்முறை: "முதலை ஐஉறிற் சினையைக் கண் உறும்" என்பது காண்க. இதுமுதல் முப்பத்தொரு கவிகள் - பெரும்பாலும் மூன்றாஞ் சீரொன்று மாச்சீரும், மற்றைமூன்றும் விளச்சீர்களுமாகிய அளவடி நான்கு கொண்ட கலிவிருத்தங்கள். இவற்றில் நான்காஞ்சீர் கூவிளச்சீராகவே நிற்கும். (275) 2.-துரியோதனன் கர்ணனைத் தனக்கு உற்றதுணையாகக் கொள்ளுதல். ஆங்கவரம்முறை யயருமாயிடைத் தீங்கொருவடிவமாந் திறற்சுயோதனன் பாங்கிவனமக்கெனப் பரிதிமைந்தனை வாங்குபுதழீஇயினன் வலிமைகூரவே. |
(இ-ள்.) ஆங்கு - அவ்விடத்தில் [அஸ்திநாபுரியில்], அவர் - அவர்கள் [பாண்டவர்களும் துரியோதனாதியர்களும்], அ முறை - அவ்வாறு, அயரும் - விளயைாடுகிற, அ இடை - அப்பொழுது,- தீங்கு ஒரு வடிவம் ஆம் திறல் சுயோதனன் - தீக்குணமே ஒரு மனித வடிவங்கொண்டாற் போன்ற [மிகக்கொடிய] வலிமையையுடைய துரியோதனன், வலிமைகூர - (தனக்கு) வலிமை மிகும்படி, பரிதி மைந்தனை - சூரியனுடைய மகனான கர்ணனை, இவன் நமக்கு பாங்கு என - இவன் நமக்கு உரியநண்ப னென்று கருதி, வாங்குபு தழீஇயினன் - அழைத்துச் சேர்த்துக்கொண்டான்; (எ-று.) வீமனுடைய வலிமைக்கு ஆற்றாத துரியோதனன், தங்களுக்குப் பக்கபலம் மிகுதற்பொருட்டு, பலபராக்கிரமங்களிற்சிறந்த கர்ணனை வரவழைத்துத் தனக்கு ஏற்றதுணைவனாக்கிக்கொண்டனன் என்பதாம். வாங்குபு - செய்பு என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம். (276) 3.-பாண்டவரும் துரியோதனாதியரும் கங்கையில் நீர் விளையாட்டு நிகழ்த்தல். ஒருபகனிலமக ளுய்யமங்குலின் வருபகீரதிநதி வாசநீர்படிந்து இருதிறப்புதல்வரு மியைந்தகேண்மையால் கரையடைந்தனரிளங் கடவுளோரனார். |
(இ-ள்.) இளங் கடவுளோர் அனார் - தேவகுமாரர்கள் போன்றவர்களாகிய, இரு திறம் புதல்வர்உம் - (பாண்டு திருதராஷ்டிரன் என்பவர்களின்) புத்திரர்களான இரண்டுவகுப்பினர்களும்,- இயைந்த கேண்மையால் - பொருந்திய நண்புடனே,- ஒருபகல்- |