ஒருநாள்,- நிலமகள் உய்ய மங்குலின் வரு பகீரதி நதி - பூமிதேவி வாழ்வுபெறும்படி ஆகாயத்தினின்றுவந்த கங்காநதியினது, வாசம் நீர் - நறுமணமுடைய தீர்த்தத்திலே, படிந்து - தோய்ந்து விளையாடி, கரை அடைந்தனர் - (பின்பு அந்நதியின்) கரையை அடைந்தார்கள்; (எ-று.) கங்கைக்கு 'நிலமகளுய்யவரு' என்ற அடைமொழிகொடுத்தது, பூலோகத்தவர்கள் தன்னில் நீராடி அருவினைதீர்ந்து உயர்கதி பெறும்படி வந்தது என்ற கருத்தது. கங்காநதியின்நீர் பற்பல திவ்வியமலர்களை அடித்துக்கொண்டு வருதலால், அதன் நீர் 'வாசநீர்' எனப்பட்டது: "பத்மகந்திநி" என்றது, பாலபாரதம். வாஸம் - வடமொழி. குருகுலகுமரர்க்குத் தேவகுமாரருவமை சிறப்பிற்கும் ஒளிக்கும் இன்பத்திற்கு மென்க. (277) 4.- பாண்டவ கௌரவரது உண்டாட்டு. தைவருநவமணிச் சயிலமென்னவே ஐவகைநிறங்களு மமைத்தியற்றிய தெய்வவாடகமனைச் செல்வப்போனகம் கைவரநுகர்ந்தபின் கண்ணுந்துஞ்சினார். |
(இ-ள்.) (அன்றியும்), தைவரு - (மாசுதீரத்) துடைக்கப்பட்ட, நவமணி - ஒன்பதுவகை யிரத்தினங்களையுடையதொரு, சயிலம் என்னவே - மலை யென்று (கண்டவர்) சொல்லும்படியாகவே, ஐவகை நிறங்கள்உம் அமைத்து இயற்றிய - ஐந்துவகை நிறங்களையும் பொருத்திச் செய்யப்பட்ட, தெய்வம் ஆடகம் மனை - தெய்வத்தன்மையையுடைய [மிகச்சிறந்த] பொன்னின்மயமான மாளிகையிலே, (இருதிறப்புதல்வர்களும்), செல்வம் போனகம் - செல்வச்சிறப்புக்கு உரிய சிறந்த உணவை, கைவர நுகர்ந்த பின் - கையார உண்ட பின்பு, கண்உம் துஞ்சினார் - நித்ரையையுஞ்செய்தார்கள்; (எ-று.) நவமணி - கோமேதகம், நீலம், பவழம், புஷ்பராகம்,மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம் என்பன. ஐவகைநிறம் - பஞ்சவர்ணம்; அவை - கருமை, செம்மை, பசுமை, பொன்மை, வெண்மை, ஐவகை நிறங்களும் அமைத்தியற்றிய ஆடகம்மனை - ஐந்துவகை நிறங்களையுடைய ஆடைகளாலமைத்துப் பொன்னணியணியப்பெற்ற மாளிகையெனினுமாம். சயிலம் - முதற்போலி: சைலமென்பது, சிலைமயமான தெனக் காரணப்பொருள்படும்: சிலை - கல். போனகம் = போஜநம். (278) 5.-தூங்குகின்ற வீமனைத் துரியோதனாதியர் கொடிகளாற் கட்டுதல். கண்படைக்கங்குலிற் கன்னசௌபலர் எண்படைக்குமரனோ டெண்ணிப்பாவகன் நண்பன்மெய்ப்புதல்வனை நார்கொள்வல்லியால் திண்பதத்தொடுபுயஞ் சிக்கயாத்தபின். |
இதுவும், அடுத்த கவியும்-குளகம். (இ - ள்.) கண் படை கங்குலில் - நித்திரைசெய்கின்ற இரவிலே, கன்ன சௌபலர் -கர்ணனும் சகுனியும், எண் படை குமரனோடு எண்ணி - எண்ணங்களின்தொகுதியையுடைய இராசகுமாரனான |