மற்குணம் தொகுதிபோல் பிசைந்து - மூட்டுப்பூச்சிக்கூட்டங்களைப் போல (எளிதிலே) பிசைந்தொழித்துக்கொண்டே, இடித்திடும் முகில் என எழுந்து - இடியிடிக்கிற மேகம்போல (முழக்கஞ்செய்து கொண்டு) எழுந்து, வடித்த வேல் துணைவரோடு எய்தி - கூரிய வேலாயுதத்தையுடைய அந்த உடன்பிறந்தவர்களுடனே கூடி, மா நகர் மன்னினான் - பெரிய அஸ்திநாபுரியைச் சேர்ந்தான்; தூங்கும்போது கடிக்கும் மூட்டுப்பூச்சிகளைப் பிசைந்திடுவது போலப் பாம்புகளை வீமன் பிசைந்தா னென்க. பந்நகம் என்ற வடமொழி - பத் ந கம் எனப்பிரிந்து, கால்களால் நடவாதது [மார்பினாற்செல்வது] என்றும், பந்நம் கம் எனப்பிரிந்து, வளைந்து வளைந்து செல்வதென்றும் அவயவப்பொருள்படும். மற்குணம், மா, நகர் - மத்குணம், மஹா, நகரம் என்ற வடசொற்களின் திரிபு. வடித்தல் - நெருப்பிலிட்டுக்காய்ச்சி யடித்துக் கூராக்குதல். (283) 10.-துரியோதனன் வீமனைக் கழுவில்விழுத்த அவன் அறிந்துஉய்தல். வேறொருபகற்கழு நிரைத்துவீமனோடு ஆறுபாய்ந்திருவரு மாடும்வேலையில் தேறலான்வஞ்சகந் தேறிவண்டினால் ஏறினான்கடந்தரி யேறுபோன்றுளான். |
(இ-ள்.) வேறு ஒரு பகல் - மற்றொருநாளில், தேறலான் - பகைவனான துரியோதனன், கழு நிரைத்து - (வெளித்தெரியாதபடி நீரினுள்ளே) கழுக்களை வரிசையாக நாட்டி, வீமனோடு - வீமனுடனே, ஆறு பாய்ந்து - கங்காநதியிலே குதித்து, இருவர்உம் ஆடும் வேலையில் - இவ்விருவரும் விளையாடும்பொழுதில்,- அரி ஏறு போன்றுளான் - ஆண்சிங்கத்தை யொத்துள்ளவனான வீமன்,- வஞ்சகம் வண்டினால் தேறி - (அவன்செய்த) வஞ்சனையை (க் கழுமுனையில் தங்கிய) வண்டுகளினால் அறிந்து, கடந்து - (அக்கழுவைக்) கடந்து குதித்து, ஏறினான் - கரையேறினான்; (எ-று.) மற்றொருநாள் துரியோதனன் கங்கைத்துறையில் இரும்பினாலும் செம்மரத்தாலும் கூரிய கழுக்களை நீரின்மேல்தோன்றாதபடி உள்நாட்டச்செய்து வீமனை 'நீரில்விளையாடலாம் வா' என்று வஞ்சனையாக அழைத்துப்போய் 'இங்கிருந்து நீ நீரில் குதிக்கிறாயா பார்ப்போம்' என்ன, அப்பொழுது கண்ணன் கருவண்டினுவருவங் கொண்டு கழுமுனைதோறும் உட்கார்ந்திருக்க, வீமன் அதனை நோக்கி 'இதுஎன்ன நீரோட்டத்தில் வண்டுகள் உட்கார்ந்திருக்கின்றனவே!' என்று உற்றுப்பார்க்கும்போது அவற்றின்கீழ் வசிகள் நாட்டியிருக்கக்கண்டு் தன்சங்கேதப்படி அவைநாட்டியிராத இடம் பார்த்துக் குதித்துக் கரையேறி மீண்டானென்பது, இங்குக் குறித்த வரலாறு. இந்தவிடத்து இவ்வரலாறு மாகாபாரதத்திலாவது பாலபாரதத்திலாவது காணப்படவில்லை. பாய்ந்து ஆடுதலாகிய வினை துரியோதனனுக்கும் உள்ளதனால், 'நிரைத்து' என்ற செய்தெனெச்சத்தைத் தன்கருத்தாவின் வினைகொண்ட தென்னலாம், 'கடகரியேறு' என்றும் பாடம். (284) |